இன்று நிகழ்ந்த ஸிஸெக்கின் காணொளி உரை அட்டகாசமாக இருந்தது. முடிக்கும் போது அவர் இவ்வாறு சொன்னார்: "இந்தியாவை இரு வைரஸ்கள் பிடித்தாட்டுகின்றன. ஒன்று நிஜ கொரோனா வைரஸ். இன்னொன்று கருத்தியல் வைரஸ். இரண்டில் இருந்தும் நீங்கள் விடுபட வேண்டும் என விரும்புகிறேன்." அவர் கருத்தியல் வைரஸ் என்றது பொதுவாகக் இந்துத்துவ, இந்து தேசியவாத கருத்தியலைத் தான் என்பது மொத்த உரையையும் கேட்டவர்களுக்கு தெளிவாகி இருக்கும்.
அவர் தன் கேள்வி பதிலில் போலி பிற்போக்குவாதிகளைப் பற்றி சொன்னது சுவார்ஸ்யமானது. குறிப்பாக டிரம்பைப் பற்றி சொல்லும் போது அவருக்கு தன்னுடைய பிற்போக்குவாதம், இனவாதம் மீதே ஒரு நம்பிக்கை இல்லை என்றார். இதனாலே அவரைப் போன்றவர்கள் தொடர்ந்து மற்றமைகளை கட்டமைத்து வெறுப்பை விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றார். மாறாக, ஐயர்லாந்து, திபெத்தை சேர்ந்த தேசியவாதிகள் உண்மையானவர்கள், அவர்களிடம் ஒரு உறுதிப்பாடு உண்டு என்றார். ஸிஸெக் சொல்லும் இவ்விசயத்தை நான் இந்து தேசியவாதிகள் குறித்து சிந்தித்திருக்கிறேன். சாவர்க்கர் காலத்தில் இருந்தே அவர்களுக்கு தேசம், மதம் போன்ற விசயங்களில் தன்னுறுதியான கருத்தோ பிடிப்போ இல்லை, இன்றும் தான், அவர்களை தமது கருத்தியல் என்னவென தத்துவார்த்தமாக விளக்கக் கேட்டால் இஸ்லாமிய வெறுப்பு, தேசப்பற்று, இந்து அடையாளம் என உருண்டு உருண்டு சென்று கொண்டிருப்பாளர்கள். ரொம்ப உணர்ச்சிகரமாக பேசுவது போல நடிப்பார்கள். ஒரு பெரிய கலவரத்தில் இரு தரப்பிலும் மக்கள் கொத்துக் கொத்தாய் சாகும் போது (இந்திய பிரிவினை கலவரங்களில் போல) இந்துக்கள் மட்டுமே இறந்தது போல கண்ணீர் வடிப்பார்கள். இது போலியான துக்கம், கோபம் என ஒரு குழந்தைக்குக் கூட புரியும். இன்று கொரோனாவின் பெயரால் மக்கள் கொலைக்களத்துக்கு அனுப்பப்படும் போது எல்லாரும் நேர்மறையாக இருங்கள் என பிரச்சாரம் செய்கிறார்கள். இப்படி தேசப்பற்றே, மதபற்றே இல்லாமல் தம்மை தேசப்பற்றாளர்களாக, மதப்பற்றாளர்களாக காட்டிக் கொள்கிறவர்கள் எல்லா நாடுகளிலும் பரவி வருகிறார்கள் என ஸிஸெக் கூறினார். இந்தியாவின் பிரச்சனையும் அது தான். நாட்டை மிக அதிகமாக சுரண்டி விற்கிறவர்கள், பிணங்களை கங்கையில் மிதக்க விடுகிறவர்கள் தாமே தேசம், தம்மை பாராட்டுவது மட்டுமே தேசப்பற்று என புது கதையாடலை ஆரம்பிக்கிறார்கள். டிரம்ப் இதையே வெள்ளையின பெருமை, வெள்ளையினத்தின் அடையாளம் நான் மட்டுமே என்று பேசி வந்தார். ஆனால் அவருடைய மோசமான நிர்வாகத்தினால் வெள்ளையர்கள் கொத்துக்கொத்தாக கொரோனாவுக்கு பலியானதற்கு அவர் கவலைப்படவில்லை. இதுவே போலி இனவாதம், போலி தேசியவாதம், போலி பிற்போக்குவதம்.
முடிக்கும் போது ஸிஸெக் தனக்கு 72 வயதாகி விட்டது. முன்பு போல நெடிய நேரம் பேச முடியவில்லை, களைத்து ஓய்ந்து போய் பதற்றம் வந்து விடுகிறது என்றார். காரில் ஒரு அழகான கல்லறையைத் தோட்டத்தை கடக்க நேர்ந்தால் இங்கு ஒரு கல்லறை வைக்க எவ்வளவு செலவாகும் என நண்பர்களைக் கேட்க ஆரம்பித்து விடுகிறேன் என தன்னைத்தானே பகடி செய்து சிரிக்கவும் செய்தார்.
அழகான ஸ்டைலான மனிதர். மகத்தான சிந்தனையாளர்.
Comments