Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

வைரமுத்துவை பாலியல் புகாரை வைத்து மதிப்பிடலாமா?


வைரமுத்து தன் இலக்கிய தகுதியின்மையாலே ஒ.என்.வி விருதுகள் போன்ற உயர் அங்கீகாகரங்களுக்கு தகுதியற்றவராகிறார். அதோடு பஞ்சாயத்து முடிந்தது - ஆனால் பாடகி சின்மயி, நடிகை பார்வதி உள்ளிட்டோர் எழுப்பிய மீ டூ விவகாரத்தை வைத்து அவரை மதிப்பிடுவது பத்தாம்பசலித்தனமானது - இதை ஏற்றோம் என்றால் சில கேள்விகள் எழுகின்றன:

1) பாலியல் ஒழுக்கம் தான் ஒருவர் கலைஞனாக, எழுத்தாளனாக இருப்பதற்கு பிரதான மதிப்பீடா?

இந்த உலகில் உள்ள பெரும்பாலானோர் பாலியல் ஒழுக்கமில்லாதவர்களே. ஏதோ ஒரு சந்தர்பத்தில் அத்துமீறலில் ஈடுபடுகிறவர்களே. இல்லையென சொல்ல முடியுமா? எழுத்தாளனும் இதே உலகில் தோன்றுகிறவன் தான். உலகம் முழுக்க படைப்பாளிகள் மீது இத்தகைய புகார்கள் உள்ளன. நாம் இந்த விசயத்தில் வெளிப்படையாக இருத்தல் அவசியம் - ஒரு நெடிய பட்டியலை தயாரித்து இவர்களை முழுக்க புறந்தள்ளி விடலாமா? மாட்டோம் - ஏனென்றால் படைப்பாக்கம் வேறு குற்றங்கள் வேறு என அறிவோம். ஜி.நாகராஜன் ஒரு வெளிப்படையான உதாரணம். சி.மோகன் அவரைப் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார் (“ஜி.நாகராஜன்: எழுத்தும் வாழ்வும்”). அதில் ஜி.நாகராஜன் இரவில் பெண் வேட்டைக்கு கிளம்புவதை விவரிக்கிறார். ஜி.நாகராஜன் தன்னை ஒரு வேட்டையாடும் மிருகமாகவே அப்போது உணர்ந்தார். ஆனால் எழுத்தில் நாம் பார்க்கும் ஜி.நாகராஜன் வேறு. நாளையில் இருந்து அவருடைய நூல்களை தடை செய்து அவர் பெயரை வரலாற்றில் இருந்து அழித்து விடலாமா? அட, அவரை விட்டுவிட்டால் கூட எத்தனையோ படைப்பாளிகள் இத்தவறை ஒருமுறை கூட செய்யாமல் இருக்க மாட்டார்கள், என்ன அதை கவனமாக மறைக்க, வெளியே பெண்ணுரிமைக்காக குரல் கொடுக்க அவர்களுக்குத் தெரியும். 

ஒரு பெண்ணின் மார்புகளை, பின்புறத்தை உற்றுப் பார்ப்பதும் குற்றமே. இதை செய்யாத ஆண்கள் எத்தனை பேர் உண்டா? ஒரு வாய்ப்பு கிடைத்தால் ஒரு பெண்ணிடம் பாலியல் முயற்சி செய்யாத ஆண்கள் இங்குண்டா? ஒருவர் இங்கு வந்து நான் அப்படி ஒரு தடவை கூடப் பண்ணினதில்லை என சொல்வார்களா?


2) பாலியல் ஒழுங்கீனத்தில் ஈடுபட்டவர்களில் படைப்பாளிகளை மட்டுமே ஊர்விலக்கம் பண்ணப்பட வேண்டுமா? இதை ஏன் அனைவர் விசயத்திலும் நாம் செயல்படுத்தக் கூடாது? ஒரு பெண்ணின் உணர்வுகளை பாலியல் சார்ந்து புண்படுத்தினவர்கள் அத்தனை பேரையும் பொதுவெளியில் கொண்டு வந்து அவர்களுக்கு வேலை செய்யும், திருமணம் செய்யும், சாப்பிடும், சமூகத்துடன் உறவாடும் உரிமைகளை ஏன் மறுக்கக் கூடாது? நம் சமூகம் தாங்குமா? இதில் பெண்களும் விதிவிலக்கில்லை - ஆண்களின் பின்புறத்தைப் பற்றி என் காதுபட பாலியல் ரீதியாக பேசிய பெண்களைத் தெரியும். சாட்களில் ஆண்களை தொந்தரவு பண்ணும் பெண்களைத் தெரியும். அவர்களையும் ஊர்விலக்கம் செய்து தேச எல்லைக்கு வெளியே கொண்டு போய் விட்டு விடலாமா? 

பாலியல் அத்துமீறலை நியாயப்படுத்துவது என் நோக்கமல்ல - அதுவே ஒருவரின் அடிப்படையான சமூக மதிப்பை தீர்மானிக்கும் விசயம் எனில் நாம் அதை அனைவருக்கும் நேர்மையாக பரிசீலிப்போம் என்கிறேன். மாட்டினவனை போட்டடிப்போம், மற்றவர்கள் அதுவரை உத்தம வேடம் போடுவோம் என்பது பாசாங்கின் உச்சம். 


 3) இங்கு எத்தனையோ குற்றங்கள் உள்ளன - குழந்தைகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவதில்லையா? ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களால் தாக்கப்படுவதில்லையா? பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் இடையே இக்குற்றம் நடப்பதில்லையா? திருநர்கள் பாதிக்கப்படுவதில்லையா? ஏன் இவர்களை நைசாக ஒதுக்கி விட்டு ஹெடரோசெக்‌ஷுவல் பெண்களை மட்டும் முன்னிலைப்படுத்துகிறோம்? ஒரே காரணம் தான் - கற்பு. கற்புடலை மீண்டும் மீண்டும் முன்னிலைப்படுத்த, கொண்டாட நமக்கு இந்த சந்தர்ப்பம் பயன்படுகிறது. ஒரு ஆணுக்கோ, வயதுக்கு வராத குழந்தைக்கோ, திருநர்களுக்கோ கற்பு இல்லை தானே. அதனால் அவர்களை யாரும் பாதிக்கப்பட்டதாகக் கருதுவதில்லை. நம்முடைய சமூகம் இப்படி செக்ஸ் குறித்த மிதமிஞ்சிய கவலையும், பதற்றமும் கொண்டிருக்கிறது. வேறு எந்த குற்றத்துக்கும் வழங்காத இடத்தை இதற்கு கொடுப்பது இதனாலே. 


 4) என்னைப் பொறுத்த மட்டில் திருட்டு, கொலை, கொள்ளை, ஊழல் போல பாலியல் சுரண்டல், அத்துமீறலும் ஒரு குற்றம். அதைத் தண்டிப்போம். தடுப்போம். ஆனால் அக்குற்றம் நடந்தால் உலகமே அழிந்து விட்டது எனும் கணக்கில் வானுக்கும் பூமிக்குமாக துள்ளாமல் இருப்போம். நான் இப்போது புதிய தலைமுறையில் ஒரு காணொளிக் காட்சியைப் பார்த்தேன். ஒரு பாதையோர குடும்பத்தை பேட்டி எடுக்கிறார்கள். அதில் ஒரு சிறுவன் சொல்கிறான் - “ஆன்லைன் வகுப்பு ஆரம்பித்த பின் கைவசம் ஸ்மார்ட் போன் இல்லாத என்னைப் போன்றவர்கள் எப்படி கலந்து கொள்ள முடியும்?” என்னைப் பொறுத்து, அந்த பத்மசேஷாத்ரி மாணவிக்கு நடந்ததை விட இப்பையனுக்கு நடப்பதே பெரிய அநீதி. இந்த பாலியல் குற்றம் ஒரு அவமானமாகி காயப்படுத்துகிறது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அது பசி, கல்வி மறுக்கக்கப்படுதல் அளவுக்கு பெரிய பிரச்சனை அல்ல. கற்பு என ஒன்று இல்லை என நாம் முதலில் நம்ப வேண்டும். அது ஒரு கற்பிதம். 


  5) தன் மகனை கொலை செய்து சிறைக்கு சென்று அங்கேயே மடிந்து போன ஒரு தமிழ் எழுத்தாளர் இருக்கிறார். இணையத்தில் தேடிப் பாருங்கள் - கொலைக்குற்றம் இழைத்த உலக எழுத்தாளர்களின் நீண்ட பட்டியல் இருக்கிறது. அவர்களில் அதிகம் அறியப்பட்ட இலக்கியவாதி வில்லியம் பரோஸ். அவர் “விளையாட்டாக” தன் மனைவியை சுட்டுக் கொன்று விட்டார். ஆன் பெர்ரி என ஒரு பெண் எழுத்தாளர் இருந்தார். அறுபதுக்கும் மேல் பல பிரசித்தமான புத்தகங்களை எழுதியவர். அவருக்கு 15 வயதிருக்கும் போது (அப்போது அவருடைய பெயர் ஜூலியட் ஹுல்ம்) அவர் சொந்த நாட்டில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு குடும்பத்துடன் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. பாலின் பார்க்கர் எனும் நெருக்கமான தோழி இவருக்கு உண்டு. இந்த தோழியையும் கூட அழைத்து செல்லலாம் எனச் சொல்லி இருக்கிறார். ஆனின் பெற்றோருக்கு ஓக்கே. ஆனால் பாலினின் அம்மா கடுமையாக எதிர்த்திருக்கிறார். அதற்காக ஆனும் பார்க்கரும் சேர்ந்து அந்த தாயை கட்டையால் அடித்தே கொன்றிருக்கிறார்கள். இருவரும் போலிசிடம் மாட்டி சிறையில் ஐந்து வருடங்கள் கழித்த பின் வெளி வந்தனர். ஆன் தன் பெயரை மாற்றிக் கொண்டு பின்னர் ஒரு அறியப்பட்ட எழுத்தாளரானார். அதே போல, திருடனாக வாழ்ந்து சிறை சென்று அங்கிருந்து எழுதியவர்கள் இருக்கிறார்கள். மோசமான ஊழல், அரசியல் குற்றங்களில் ஈடுபட்ட எழுத்தாளர்கள் உலகளவில் இருக்கிறார்கள். இதையெல்லாம் சுலபத்தில் மன்னிக்கும் நாம் பாலியல் விசயத்தில் மட்டும் ஏன் இவ்வளவு அக்கப்போர் செய்கிறோம்?  ஏன் திரும்பத் திரும்ப நெருடாவின் பாலியல் மீறல்களைப் பற்றியே பேசுகிறோம்? செக்ஸில் அப்படி என்னதான் இருக்கிறது?

  

  6) ஏங்கல்ஸ் தனது “குடும்பம், தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம்” நூலில் ஒரு விசயத்தை குறிப்பிடுகிறார் -ஆசியா, குறிப்பாக தென்னிந்திய, மக்களிடமும் (திராவிடர்களிடம்), தன் அண்ணன், அக்கா, தம்பி, தங்கையின் பிள்ளைகளை சொந்த பிள்ளைகளாக பார்க்கும் வழக்கம் உண்டு, சித்தப்பா, பெரியப்பா, சித்தி, பெரியம்மா போன்ற பிரயோகங்கள் அப்படித் தான் வருகின்றன என்கிறார். தென்னமெரிக்க பழங்குடிகளில் சகோதர சகோதரியின் பிள்ளைகள் தம் பெரியப்பா, சித்தப்பாவை அப்பா என்றே அழைப்பார்கள். குடும்பம் என்பது அங்கு ஒரு கூட்டு அமைப்பாக, பிள்ளைகள் அனைவருடைய பிள்ளைகளாகவும் இருக்கும். இந்த சமூகங்கள் சில பல தலைமுறைகளுக்கு முன்பு ஒரு பெண்ணை பல ஆண்களும், ஒரு ஆணை பல பெண்களும் பகிர்ந்து கொள்ளும் வழக்கத்தை பின்பற்றியதாகவும், சில குடும்பங்களில் அப்பா மகள்களுடன் உறவு கொள்வது, அம்மா மகன்களிடம் குழந்தை பெறுவது போன்ற விசயங்கள் நிகழ்ந்ததாகவும், ஒரு கட்டத்தில் இதை விடுத்து ஒரு ஆணுக்கு ஒரு பெண் எனும் நிலை ஏற்பட்ட பின்னர் முந்தைய வாழ்க்கைமுறையின் எச்சம் இப்போதும் இவ்வகையிலோ அல்லது taboo எனப் படும் சமூகக் கூச்சமாக, பாவமாக இவை பார்க்கப்படும் நிலை ஏற்படுகிறது என ஏங்கல்ஸ் சொல்கிறார். நம் நாகரிக சமூகங்களுக்கு இதனால் தான் சதா பெண்ணுடல் குறித்த ஒரு பதற்றம், அச்சம் இருந்து கொண்டிருக்கிறது, பழைய free sex சூழலுக்கு நாம் திரும்பி விடக் கூடாது, அது வம்சாவழி சொத்துரிமைக்கு சிக்கலாகுமே எனும் பரிதவிப்பு மக்களுக்கு ஆழ்மனத்தில் உள்ளது என நினைக்கிறேன். பாலியல் குற்றங்கள் வெளியே வரும் போது அந்தோ உலகமே அழிந்து விட்டது என நாம் குமுறிக் குமுறி அழுவது இதனாலே. பெண்களின் மனதுக்குள்ளும் இது ஒரு சமூக அவமதிப்பாக, குற்றவுணர்வாக இந்த taboo வடிவ மாற்றம் அடைந்து செயல்படுகிறது. எந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ளும் பெண்ணாலும் இதைத் தாங்க முடிவதில்லை. 


 7) பெண்ணுடல் ரொம்ப ஸ்பெஷல் என்பது ஒரு வரலாற்றுரீதியான குற்றவுணர்வின், பாவ உணர்வின், அச்சத்தின் காரணமாகத் தோன்றுவது, கற்பு அப்படித்தான் கட்டமைக்கப்படுகிறது எனப் பார்த்தோம். இனி ஆண்களுக்கு வருவோம். நான் முன்பு ஒரு பொறியியல் கல்லூரியில் படித்தேன். அக்கல்லூரியின் நிறுவனரான ஆண் ஒரு ஓரினச் சேர்க்கையாளர். அவர் மாணவர்கள் மத்தியில் தான் தனது இரையை தேடிக் கண்டுபிடிப்பார். ஆய்வகத்தில் இருக்கும் மாணவரின் பாலுறுப்பை அவர் பிடித்தும் கொண்டு நசுக்கிய கதையெல்லாம் அப்போது கல்லூரிக்குள் பேசுபொருளாக இருக்கும். தனக்கு உடன்பட்டு “காதலனாக” இருக்க தலைப்படும் மாணவர்கள் அங்கேயே கட்டணம் இன்றி மொத்த படிப்பையும் படிக்கலாம், விடுதியிலும் இலவசமாகத் தங்கலாம். சில மாணவர்கள் இப்படி இருந்து படிப்பு முடிந்த பின் அவருடைய உதவியாளர்களாக, கல்லூரியில் அதிகார மையமாக தொடர்வார்கள். அவர்கள் தம் பாட்டுக்கு புதிய பையன்களை பாலியல் தொந்தரவு பண்ணுவார்கள். விடுதிகள் ஓரின வேட்டைக்களமாக இருக்கும். இது அங்கு ஒரு வெளிப்படையான ரகசியம். என்னிடம் எத்தனையோ மாணவர்கள் வந்து புலம்புவார்கள். அந்த ஊர் மக்களுக்கும் இது தெரியும். ஆனால் யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். இதுவே அந்த நிறுவனர் கைவைத்தது ஒரு மாணவி மீதென்றால் என்றே அக்கல்லூரியை கொளுத்தி அவரையும் அடித்து துரத்தி இருப்பார்கள். அட, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவன் என்பதை மாணவி என மாற்றி நான் இங்கு எழுதினால் அது ஒரு மிகப்பெரிய சர்ச்சை ஆகி விடும். நக்கீரன் கோபால் போன்றோர் அந்த நிறுவனரின் ஆண்குறியை வெட்ட வேண்டும் என்பார். பாதிக்கப்பட்டது ஆண் என சொன்னால் எல்லாரும் ஆழ்துயில் நிலைக்கு போய் விடுவார்கள்.

 இது போன்ற குற்றங்கள் எத்தனையோ நிறுவனங்களில், அலுவலகங்களில் நடக்கின்றன. இதை ஒரு மீடூ டேக் போட்டு ஆண்கள் எழுதினால் எந்த ஊடகமாவது பொருட்படுத்துமா? காரணம் ஆண்களுக்கு குழந்தை பெறும் கருப்பை இல்லை என்பது தான். எனக்குத் தெரிந்து எந்த இந்திய பெண்ணியவாதியும் ஆண்கள் மீதான குற்றங்களுக்காக பேசியதில்லை. பெண்கள் ஆண்களுக்கு எதிராக செய்த பாலியல் குற்றங்கள் குறித்த ஏகப்பட்ட சேதிகள் உன்டு. அவை முன்னிலைப்பெறுவதில்லை. பெண்கள் இக்குற்றங்களை உணர்வளவில் மென்மையாக செய்வார்கள் என்பதும் ஒரு காரணம். (என்னுடைய “மீ டூ: சில விமர்சனங்கள்” நூலில் நீங்கள் அவற்றைப் பற்றி படிக்கலாம்.) சொல்லப் போனால் ஆண்கள் இப்பிரச்சனையை பேசுவது தம் மீதான கவனம் சிதறி விடும் என பெண்ணியவாதிகளுக்கு ஒரு பயம் உள்ளது. 


  8) தம் மீதான பாலியல் குற்றங்கள் பற்றி வெளியே வந்து பேசுவதில் பெண்களுக்கு உள்ள தயக்கத்தை, அருவருப்பை புரிந்து கொள்கிறேன். ஆனால் ஒரு ஆண் தன்னைக் காதலித்து கைவிட்டு இன்னொரு பெண்ணை மணமுடித்தால் எந்த தயக்கமும் இன்றி அதை ஊர்ப்பஞ்சாயத்தாக்கி கற்பழிப்பு வழக்கு தொடுக்கிறார்களே, அப்போது துணிச்சல் எங்கிருந்து வருகிறது?  இவ்வளவு பேசுகிறவர்கள் ஏன் பெண்கள் அனானிமஸாக வழக்காடுமன்றத்தில் வழக்கை நடத்தும் வாய்ப்பை வழங்கக் கேட்டு போராடக் கூடாது? என்னுடைய புரிதல் பெரும்பாலான குற்றங்கள் - ஆசிரியர் போர்ன் லிங்க் அனுப்பியது, துண்டு கட்டிக் கொண்டு வகுப்பெடுத்ததை சொல்லவில்லை; அவற்றை வைத்து சுலபத்தில் வழக்கு நடத்தலாம்; ஆனால் பெற்றோர் காரணமாக அவை அமுக்கப்படுகிறன - நுட்பமான ரீதியில் உணர்வுத் தளத்தில் நடப்பவை. அவற்றை வன்கொடுமையாகக் காணும் அளவுக்கு வலுவானவை அல்ல. ஆகையாலே அவற்றை வழக்காக எடுத்து செல்ல இத்தனை ஆண்டுகளாயும் பெண்கள் தயங்குகிறார்கள். அல்லது வழக்காடும் மன ஆற்றல் அவர்களுக்கு இருப்பதில்லை. (ஆனால் விவாகரத்து வழக்கை வருடக்கணக்கில் நடத்தி கணவனை பழிவாங்க மட்டும் அபார ஆற்றல் இவர்களுக்கு இருக்கும்.) ஆகையால் சமூகவலைதளங்கள் வழி ஆறுதல் தேடுகிறார்கள். பழிவாங்குகிறார்கள். சமூகம் உடனே கற்பு போய் விட்டது என சிங்கம் சூர்யாவாக எமோஷன் காட்ட அவர்களுக்கு அந்த அங்கீகாரம் உவகையளிக்கிறது. 


இறுதியாக நான் சொல்ல வருவது: எல்லா குற்றங்களையும் ஒன்றாகக் காண்போம். பாலியல் குற்றத்துக்கு தனி இடம் கொடுக்க வேண்டாம். அது அந்தளவுக்கு முக்கியம் என்றால் ஏன் என நிறுவுவோம். முடியாவிட்டால் பாலியல் குற்றத்துக்கு தண்டனை அளிப்போம். ஆனால் அதைச் செய்த ஒருவரை வாழ்நாளெல்லாம் திட்டி, அவமதித்து, சமூக விலக்கம் செய்தே ஆவோம் என முட்டாள்தனமாக நடந்து கொள்ளாதிருப்போம். இல்லாவிட்டால் உங்களுக்கும் பஜ்ரங் தள் ஆட்களுக்கும் என்ன வித்தியாசம்? “சித்திரப்பாவை” நாவலில் நாயகியின் கையைப் பிடித்து வில்லன் இழுத்ததும் அவள் தன் கற்பு போய் விட்டது என அந்த வில்லனையே கல்யாணம் பண்ணிக் கொள்வதாய் எழுதினாரே அகிலன் அவருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? பல ஆயிரம் கோடிகளைத் திருடி கோட்டைக்கொத்தளங்கள் கட்டி, அதற்காக சிறைக்கு சென்றவர்களை மீண்டும் முதல்வர் ஆக்கி நாம் கொண்டாடவில்லையா? பல ஆயிரம் பேர்கள் கொல்லப்பட்ட கலவரங்கள் நிகழ இடமளித்தவர்கள், குற்றவாளிகளுக்கு பாதுகாப்பளித்தவர்கள் முதல்வராக தொடர்ந்து பின்னர் பிரதமர் ஆகவில்லையா? பாலியல் குற்றம் அதை விட பெரிதா? இல்லை.

பேசுவதென முடிவு செய்து விட்டல் ஆணுடலையும் பெண்ணுடலையும் சமமாக பாவித்து இரு பாலாருக்கும் நிகழும் பாலியல் அத்துமீறல்களை ஒரே அளவு முக்கியத்துடன் விவாதிப்போம். பெரியார் சொன்னது போல கருப்பை ஒன்றும் தனிச்சிறப்பானது அல்ல. எல்லாரும் மனிதர்கள் தாம். 

இந்த சமூகத்தில் வைரமுத்துவை தவிர எல்லா ஆண்களும் பெண்களும் உத்தமர்கள் எனும் பாவனையை கைவிடுவோம். 


எழுத்தாளன் நல்லவனாகவே இருந்தாக வேண்டும் என்றால் அவன் எழுத்தை படிக்கிற நீங்கள் எல்லாரும் பெண்களைக் கண்டாலே பார்வையை தாழ்த்தி செல்லும், வாழ்வில் ஒருமுறை கூட அத்துமீறாதவரா? இல்லை தானே? நான் இதை நியாயப்படுத்தவில்லை, பிறழ்வதும் திருந்தி வாழ்வதும் இயல்பு என்கிறேன். திருந்திய பின்னரும் வாய்ப்பு கிடைத்தாலும் திரும்பவும் பிறழ்வது இயல்பு என்கிறேன். சமூகம் நம்மை தொடர்ந்து கண்காணிப்பது இந்த எதார்த்தத்தை ஏற்று தான் - பிளேட்டோவின் Dialogues ஒரு உதாரணக் கதை வருகிறது. அதன் முடிவில் ஒருவர் பிறர் பார்வைக்கு மறைந்து போகும் ஆற்றல் பெற்றால் அவர் தவறுகள் செய்வாரா மாட்டாரா எனும் கேள்வி வருகிறது. யாரும் பார்க்கவில்லை என்றால் நாம் எல்லா தவறுகளையும் செய்வோம். திருடுவோம், கொல்லுவோம், அத்துமீறுவோம், துன்புறுத்துவோம். அலுக்கும் வரை செய்வோம். (கூடவே சில பல நல்ல காரியங்களையும் செய்வோம்.) இல்லையென்றால் நாகரிக சமூகங்களில் எதற்கு இவ்வளவு விசாரணைகள், காவல்துறை, நீதிமன்றங்கள்? இது சரி எனில் நம்மூரில் உள்ள கணிசமானோர் புத்தகம் வாசிக்கும் தகுதியற்றவர் தானே. புத்தகங்களை மொத்தமாக எரித்து விடலாமா? எழுத்தாளனுக்கு ஒரு விதி, வாசகனுக்கு மற்றொன்றா? எல்லாரையும் தூக்கி கடலில் போட்டு விடலாமா?


அட, இந்த விசயத்தில் பெண்களின் வேதனையைக் கூட நான் புரிந்து கொள்கிறேன். பெண்ணிய போர்க்கொடி தூக்கும், வைரமுத்து சாகும் வரை அடிப்போம் என குமுறும் இந்த ஆண்களைத் தான் தாங்க முடியவில்லை. இதற்குப் பதிலாக “நான் உத்தமன்” என நெற்றியில் எழுதி ஒட்டிக் கொள்ளுங்களேன்!

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...