Skip to main content

அதியமான் - அவதூறு - திமுகவினர் எதிர்வினை



இந்த சர்ச்சை பற்றி படித்திருப்பீர்கள். அதியமானின் சிறிய பேஸ்புக் பதிவையும், அதற்கு எதிர்வினையாக திமுகவினர் தொடுத்துள்ள புகார்களையும் வழக்குகளையும். அதியமான் என்னுடைய நண்பர் என்பதால் நான் இதை சொல்லவில்லை, ஒரு பெயர் தெரியாத கட்சிசாரா நபர் யார் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இது போல முகநூலில் எழுதி இருந்தாலும் நான் இதையே சொல்லி இருப்பேன் - இது ஒரு தேவையில்லாத ஆணி. திமுக இணைய ஆதரவாளர்களும் கட்சியினரும் ஒரு உற்சாகத்தில் இப்பிரச்சனையை பெரிது படுத்தி முன்னெடுப்பதன் மூலமாக கெட்ட பெயரை சம்பாதிக்கிறார்கள். எந்த அரசும் இவ்விசயத்தில் - சட்டநடவடிக்கை வழியாக அவதூறுகளை கட்டுப்படுத்துவது - வெற்றி கண்டதில்லை. மாறாக இது அவதூறுகளுக்கு, அவநம்பிக்கைக்கு, அதிருப்திக்கு வலு சேர்க்கும். ஆக திமுக தலைமை தலையிட்டு உ.பிகளை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும், வழக்குகளை பின்வாங்கவும் சொல்ல வேண்டும்.


அவதூறுகளை எப்படி கையாள்வது?

திமுகவை விரும்பாதவர்களும், நடுவாந்திரமான, திராவிட-மாற்று, தாராளவாத அரசியலை ஏற்கிறவர்களும், மறைமுக வலதுசாரிகளும் தொடர்ந்து அக்கட்சிக்கு எதிராக அவதூறுகளை பரப்பியபடி வந்திருக்கிறார்கள். இருந்தும் திமுக இத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. எனில் அதில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய பாடம் அவதூறுகளை இரும்புக்கரத்தால் ஒடுக்க அவசியமில்லை என்பதே.


மாறாக, விளக்கம் அளிப்பது, தம்மை பாதிக்கப்பட்டவராக மக்கள் மத்தியில் அதே சமூக ஊடகங்கள் வழி வைப்பது அவசியம். அதுவே சமூக ஊடக பிம்ப கட்டமைப்பில் சரியான உத்தி அல்ல. ஏனென்றால் சமூக ஊடகம் என்பது மரபான செய்தி ஊடகம் அல்ல; அதில் உண்மையோ தரவோ அல்ல, பிம்பமும் தோற்றமுமே முக்கியம். ஒரு பொய்த்தோற்றம் ஏற்படுத்தத்தப்பட்டால் மாற்றுத் தோற்றத்தை அதே சமூக ஊடகம் வழி உண்டாக்கியே எதிர்கொள்ள வேண்டும். அதுவே நல்ல பலனைத் தரும். அவதூறு எழுதியவரை சிறையில் தள்ளினால் அது அவருடைய தரப்பையே வலுப்படுத்தும். இதைத் தான் perception management என்கிறார்கள்.


ஆனால் ஹெச்.ராஜா, எஸ்.வி சேகர் போன்றோர் அவதூறு செய்தால் நீங்கள் வழக்கு தொடுக்கலாம், அதை கையாளும் வலு அவர்களுக்கு உண்டு. பொதுமக்களுக்கு அந்த ஆயுதம் அவசியம் அற்றது.

Comments