8) பிரசாந்த் கிஷோர் தனது பேட்டியொன்றில் மோடி-ஷா கூட்டணியை முறியடிப்பது சாத்தியம் தான், ஆனால்
அதற்கு ஒரு மாற்றுத்தலைமை எதிர்க்கட்சியிடம் தோன்றி, அவர்களால் ஒரு மாற்றுக் கதையாடலை முனைக்க முடிய வேண்டும் என்கிறார். அந்த மாதிரியான ஒரு விசயம் எதிர்பாராமல் தேசிய அளவில் உருக்கொள்ளலாம் என்று அவர் கூறுகிறார். அப்படி ஒன்று நடக்கும் என நாம் அனுமானம் செய்யலாம். ஆனால் அதற்கு ஒரு தெளிவான செயல்திட்டம் யாரிடமும் இப்போதைக்கு இல்லை. கொரோனாவை எதிர்கொள்வதிலே அடுத்த ஒன்றரை, இரு வருடங்கள் போய் விடும் எனும் போது அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் போது, எதிர்க்கட்சிகள் காங்கிரஸின் கீழ் அணி திரண்டு பிரச்சாரம் செய்ய அவகாசம் இருக்குமா? இப்போது காங்கிரஸுக்கு அதிகாரபூர்வ தலைவர் கூட இல்லையே.
9) உலக வரலாற்றில் முசோலினி, ஹிட்லர் போன்ற சர்வாதிகாரத் தலைவர்கள், இனவாதத்தை தூண்டி மக்களிடம் செல்வாக்குடன் இருந்தவர்கள் எந்த கட்டத்திலும் தம் அரசியல் எதிரிகளால் முறியடிக்கப்படும் அளவுக்கு பலவீனமாகவில்லை என்பதை கவனிக்க வேண்டும். இருவருடைய வீழ்ச்சிக்கும் இரண்டாம் உலகப்போரில் இத்தாலியும் ஜெர்மனியும் பெற்ற தோல்விகளே காரணமாயினர். அதாவது வெளியில் உள்ள சக்திகளின் குறுக்கீடே அவர்களை அகற்ற உதவியது, மக்களின் ஆதரவை அவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திரட்டி அல்ல என்பதை கவனிக்க வேண்டும். பொதுவாக வலுவாக தம்மை காட்டிக் கொள்கிறவர்கள், அதிகாரத்தை கட்டற்று செலுத்துகிறவர்கள் மீது ஒரு வசீகரம், ஈர்ப்பு, பிடிப்பு மக்களுக்கு ஏற்படும். வன்முறையாளனான காதலனை, கணவனை உள்ளூர நேசிக்கும் பெண்கள், தம்மை கடத்தி சிறைவைத்தவரை விரும்பி பின் தொடரும் கடத்தப்பவர்களின் உளவியலைப் போன்றது இது. எந்தளவுக்கு அதிகமாக இந்த சர்வாதிகாரிகள் மக்களின் வாழ்வை உருக்குலைத்து, அதனால் தமக்கு தனிப்பட்ட அளவில் லாபமில்லை எனக் காட்டிக் கொள்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் மக்கள் மத்தியில் பிரசித்தமாக இருப்பார்கள். உதாரணத்திற்கு ஒரு கொடுங்கோலரான அப்பாவை, ஆசிரியரை எடுத்துக் கொள்ளுங்கள். அவரை வெறுத்தாலும் தன்னிச்சையாக மறுப்பின்றி அவரைப் பின்பற்றவே நாம் விழைவோம். நம் சமூகத்திற்கு மொத்தமாக போலீஸ் மீது பயமும் வெறுப்பும் உள்ளது. ஆனால் “இது தாண்டா போலீஸில்“ இருந்து “சிங்கம்” வரை நாம் சினிமாவில் சட்டத்தை மதிக்காமல் வன்முறையுடன் நடந்து கொள்ளும் போலீஸ் அதிகாரிகளை ரசித்து கொண்டாடுகிறோம். மாபியா தலைவர்களாக, டான்களாக ஹீரோக்கள் நடித்தாலும் அது பெரும் வெற்றி பெறுகிறது. இந்த உளவியல் தான் சில நேரம் தேர்தல் அரசியலிலும் செயல்படுகிறது. மோடியும் ஒரு “சிங்கம்” சூரியா, பாட்ஷா தான். மக்கள் அவரை ஒரு பக்கம் வெறுத்தபடியே நேசிப்பார்கள். அது அதிகாரத்தின் மீதான ஈர்ப்பு. சர்வாதிகார தலைவர்கள் மக்கள் விரும்புகிற மிதமிஞ்சிய அதிகாரத்தை அவர்களுடைய சார்பில் தாம் சுமப்பதாக காட்டுவார்கள் – செண்டிரல் விஸ்டா கட்டிடங்களை பல ஆயிரம் கோடிகளுக்கு மோடி இப்போதும் கட்டுவது, ராமர் கோயிலைத் திறந்து தன்னை ராமரின் அவதாரமாக முன்னிறுத்தப் போவது, ராணுவ சீருடையில் பாகிஸ்தான் எல்லையில் நின்று அவர் ஆர்ப்பரிக்கப் போவதெல்லாம் இந்த பிம்பத்தை வலுப்படுத்தி மக்கள் மனதை வெல்லத் தான். தம்மால் செய்ய முடியாததை – வெளிப்படையாக ஆதரிக்க முடியாததை – அவர் செய்கிறார் என்பது பெரும்பான்மை இந்துக்களுக்கு கிளுகிளுப்பூட்டி உற்சாகப்படும். சர்வாதிகாரத்தின் வெற்றி சூத்திரம் அடிப்படையில் வன்முறையை நியாயப்படுத்தும் சினிமாவின் சூத்திரம் தான். ஹிட்லர், முசோலினியும் வரலாற்றின் கரங்கள் அவர்களை நசுக்கும் வரை இந்த பாதையில் தான் “சிங்கம் சிங்கம்” என வெற்றிகரமாக பயணித்தார்கள்.
முழு கட்டுரையையும் படிக்க: https://uyirmmai.com/news/politics/future-of-modi-a-analysis-by-r-abilash/?fbclid=IwAR1OTiyd3mL96G64MUSr-OiVyqUAnME_2sfLQcBwjls2RcG8ebBEhdOC2DY
Comments