மேற்கு வங்க தேர்தலை ஏன் இவ்வளவு தீவிரமாக பாஜக எடுத்துக் கொண்டது என ஒரு கட்டுரையில் வினவும் முன்னாள் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா ஒரு சுவாரஸ்யமான பார்வையை அளிக்கிறார். அவருடைய கருத்துப்படி, இந்த சட்டமன்ற தேர்தலில் மமதா வென்றால் 2024 தேர்தலில் மோடிக்கு போட்டியாக அவர் உருக்கொள்வார் என மோடியும் ஷாவும் அஞ்சுகிறார்கள். அதனால் தான் “திதி ஓ தீதி” என பொதுமேடையில் பகடி செய்யும் அளவுக்கு நமது ஜி சென்றார். மேற்கு வங்கத் தேர்தலில் தோல்வி அடைந்த பாஜகவுக்கு அது கடும் ஏமாற்றமாகியது - ஒரு மாநிலத்தை இழந்து விட்டோம் என்றல்ல, தேசம் முழுக்க மமதா புகழப்படுவதை, பாஜகவை அவர் தனியாக நின்று முறியடித்ததாக பெயர் பெறுவதை பாஜகவால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால் தான் மே.வங்கத்தில் நடந்த சில வன்முறை சம்பவங்களை பெரிதாக்கி, பாஜகவும் பல தாக்குதல்களை தொடுத்தது; இரு தரப்பிலும் கட்சிக்காரர்கள் கொல்லப்பட்டார்கள்.
இது நடந்து கொண்டிருக்கும் போது பாஜகவின் ஐ.டி கிளை, வாட்ஸாப் போராளிகள் மிகப்பெரிய அளவில் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்: “மே.வங்கம் எரிகிறது, அங்கு ஜனாதிபதி ஆட்சி வேண்டும், ராணுவம் அனுப்பப்பட்டு வன்முறை செய்யும் திரிணாமூல் கட்சியினர் கொல்லப்பட வேண்டும்; அங்கு ஜீ தனது குஜராத் 2000 ஆயுதத்தை கையிலெடுக்க வேண்டும்” என்று பலவிதமாக சமூகவலைதளங்களில் கூப்பாடு இட்டனர். உயிருடன் இருப்பவர்களின் படங்களை பிரசுரித்து அவர்கள் திரிணாமூல் கட்சியினரால் கொல்லப்பட்டதாக, பொய்ப்பெயருடன் செய்திகளை பரப்பினர். அப்படி அடையாளம் காணப்பட்டவர்கள் தாம் உயிருடன் இருப்பதாக அம்பலப்படுத்தினர். கடந்த வருடம் ஒரு தனிப்பட்ட மோதலில் ஒரு பெண் தாக்கப்பட்ட காணொலியை எடுத்து திரிணாமூல் கட்சியினர் பாஜகவை சேர்ந்த பெண்ணொருவரை அடிப்பதாக திரித்து வெளியிட்டனர். இந்துக்களின் பெரும் திரள் மமதாவின் கட்சியினரால் கொலைக்களத்துக்கு அனுப்படுவோம் எனும் அச்சத்தில் உள்ளதாக எழுதினர். இத்துடன் நிற்காமல் மத்திய அரசு இது சம்மந்தமாக மமதாவுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பியது. ஆளுநர் எச்சரித்தார். பாஜகவின் நட்டா உடனே நிலைமையை பார்வையிட கிளம்பி சென்றார். பாஜக தோற்கடிக்கப்பட்டது, மமதாவை தேர்ந்தெடுத்த மக்கள் ஜியை நிராகரித்து விட்டார்கள் எனும் கதையாடலை மாற்றி எழுதத்தான் இந்த பராக்கிரம முயற்சிகள் அத்தனையும்.
ஆம், வன்முறை நடந்தது தான். அதில் திரிணாமூலின் பங்கும் உண்டு தான். ஆனால் பாஜக சித்தரிப்பது போல அம்மாநிலம் போர்க்களமாகவில்லை. பாதிக்கு மேல் பொய்ப்புரட்டுகள், போலி காணொளிகள், இல்லாதவர்களின் படங்களையும் கொண்டு தாம் இந்த போர்க்களத்தை பாஜக கட்டியெழுப்பியது. ஆனால் தில்லியில் இருந்து செய்யும் இந்த ஊடக அரசியலைக் கொண்டு மக்கள் மனத்தை வெல்ல முடியாது என ஏற்கனவே மே.வங்க மக்கள் நிரூபித்து விட்டார்கள். ஆனால் இம்முறை பாஜக மமதாவின் பிம்பத்தை குலைக்க முயன்றது வங்காளிகளிடம் அல்ல, மொத்த இந்தியர்களிடமுமே. இது நமக்கான ஆக்ஷன் படம். ‘ஜி தான் உங்களுடைய ஒரே சரணாகதி, வேறு மாற்றே இல்லை’ என அவர்கள் நம் தலையில் அடித்து சத்தியம் பண்ண விரும்புகிறார்கள். அதற்காக இல்லாதவர்கள் செத்துப் போனார்கள் என்றோ, தனிப்பட்ட பிரச்சனைகளில் அடிபட்ட பெண்கள் எல்லாம் தம் கட்சியினர் என்றோ பொய்ச்செய்தி பரப்பிட, வங்க மண்ணில் ரத்தம் சிந்தி, நெருப்பை பரப்பிட அவர்கள் தயங்க மாட்டார்கள். இந்த நாடே ஒரு பெரிய சினிமா ஸ்டுடியோ. பாகுபலி சினிமா செட். அங்கு நாளொரு படக்காட்சியை அரங்கேற்ற வேண்டும், அதுவே நிர்வாகம் என பாஜக நம்புகிறது. இந்திய வரலாற்றில் இப்படி ஒரு விசித்திரமான ரியாலிட்டி ஷோ கட்சி வேறு இருந்ததில்லை. எண்டமோள் புரொடெக்ஷன்ஸ் எல்லாம் உங்களிடம் பிச்சை எடுக்க வேண்டுமய்யா!
இவ்வளவும் நடந்து முடிய மமதா ஆட்சிக்கு வந்து ஒரு நாளே ஆகியிருந்தது.


Comments