Skip to main content

“உளமார vs கடவுள் அறிய” - கண்கட்டி வித்தை


இந்த முறை சட்டமன்றத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட எம்.எல்.ஏக்களில் திமுகவினர் உளமார என்றும் அதிமுகவினர் கடவுள் அறிய என்றும் இருவேறாக மொழிந்து தம்மை முன்வைத்தது விவாதமானது. அப்போது ஒரு தரப்பு கடவுள் நம்பிக்கை உள்ளோர் கடவுள் அறிய என மொழிவதே நியாயம், அந்த உரிமை அவர்களுக்கு உண்டு எனக் கோர, இன்னொரு தீவிர வலதுசாரி தரப்பு தாம் நாத்திக கட்சி அல்ல எனக் கோரும் திமுக ஏன் “கடவுள் அறிய” என மொழிய தயங்குகிறது எனக் கேட்கிறது. கடவுள் தரப்பிலான இந்த இரண்டு கோரல்களும் பாஜக இங்கு பரப்புகிற நச்சு சிந்தனையின் விளைவு தான். குறிப்பாக, கடந்த 7 ஆண்டுகளில் நடப்பு வாழ்வில் சகல விசயங்களையும் - ஆட்சி, கொள்கை துவங்கி போலி வலதுசாரி வரலாற்றை போதிக்கும் கல்வி, கோமியம், கங்கை நீரை குடிக்க, கோ கொரோனா என கூவியபடி பேரணி செல்ல வலியுறுத்தும் மருத்துவம், தேஜஸ்வி சூர்யாக்கள் கொதிக்கும் பணி நியமனம் வரை -  மதம், மரபு, நம்பிக்கை சார்ந்ததாக மாற்றி விட்டனர் பாஜகவினர். சிவில் வாழ்க்கையையும் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் தனித்தனியாக வைத்துக் கொள்ள வேண்டும், மதத்தை, சாதியை பிரகடனப்படுத்தி அதை வைத்து பொதுவாழ்வில் முடிவுகள் எடுக்கவோ சர்ச்சைகள் உருவாக்கவோ கூடாது எனும் நாகரிகத்தை நாம் இழந்து வருகிறோம். இந்த போக்கு ஒரு தரப்பால் தமிழகத்திலும் திணிக்கப்படுகிறது. “கடவுள் அறிய” விவாதம் அதற்காக உருவாக்கப்படுவது தான்.

“உளமார” உறுதிமொழிவது ஒரு நாத்திக செயல் அல்ல, அதுவே ஒரு மதசார்பற்ற தேசத்தில் அரசியல்வாதிகள் பேச வேண்டிய மொழி. ஏனென்றால் அரசு என்பது கடவுளால் நடத்தப்படுவது அல்ல. ஆக்ஸிஜன் உற்பத்திக்கும், தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோகத்துக்கும், ஏழை எளியோருக்கான சமூகநீதித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் கடவுள், மதத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நடைமுறையில் தான் நான் சொல்கிறேன். ஆனால் மாறாக மதத்தை, கடவுளை நுழைப்பது அரசு நிர்வாகத்தில் நடக்கும் பிழைகளை, ஊழல்களை மக்கள் காணாமல் தடுப்பதற்கான ஒரு தந்திரம் மட்டுமே. உணர்ச்சிவயப்படுத்தி மக்களை திசைதிருப்ப மதம் ஒரு அற்புதமான கருவி. “கடவுள் அறிய” உறுதிமொழிபவர்கள் அப்படி ஒரு வாய்ப்புக்காக ஏங்குகிறார்கள். இன்று மத்தியில் உள்ள ஆட்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணம். அவர்களுடைய நிர்வாகப் போதாமை 2019இல் தேர்தலின் போதே மக்களுக்கு உறைத்திருக்க வேண்டும். ஆனால் மதப்பற்றும் தேசிய வேறியும் கண்ணை மறைக்க வாக்குகளை அள்ளி வழங்கினார்கள். இப்போது அதே மக்கள் தமது பெற்றோர்கள், கணவர், மனைவி, பிள்ளைகள் தெருவில் கிடந்து சாவதைக் காணும் போது, பிணத்தை சரிவர எரிக்க கூட வழியில்லாமல் தவிக்கையில் திருந்துவார்களா எனத் தெரியவில்லை.

 பெரும்பாலான ஆட்சியாளர்கள் இத்தகைய பேரழிவுக் குற்றங்களை இழைத்த பின் நிலைக்க மாட்டார்கள். ஆனால் ஜீ நீடிப்பார். ஏனென்றால் அவர் ஒரு பிரதமர் மட்டும் அல்ல, அவர் ஒரு கட்சித் தலைவரோ தேசத்தின் தலைமை நிர்வாகியோ மட்டும் அல்ல, அதை விட அவர் ஒரு மதத்தலைவர், சிவில் வாழ்வில் இருக்கும் ஒரு 'துறவி', அரசை நிர்வகிக்கும் ஒரு சாமியார்,  ஓஷோ, புட்டபர்த்தி பாபா, ஸ்ரீஸ்ரீ, ஜக்கி  போன்றோரின் அரசியல் கலவை. அவரை விமர்சிப்பது தெய்வ நிந்தனையாக அவரது ஆதரவாளர்களால் பார்க்கப்படுகிறது. கொரோனா காலத்தில் இரண்டாம் அலையின் போது மிக மோசமான நிர்வாக சீர்கேட்டால் மக்கள் லட்சக்கணக்கில் மடியும் போது ஜீயின் பிம்பம் சற்று ஒளியிழக்கிறது, ஆனால் அவரால் சுலபத்தில் மதப்பற்றையும் தேசிய வெறியையும் தூண்டி விட்டு பழைய இடத்தை பிடித்து விட முடியும். ஜீயால் இன்று செய்ய முடிவதை விட சிறப்பாக, சுலபமாக நாளை ஒரு ஜக்கியால், ஸ்ரீஸ்ரீயால் ஒரு தேசத் தலைவரின் இடத்தில் நின்று நிகழ்த்த முடியும். அந்த இடத்திற்கு தான் பாஜக நம்மை நகர்த்தி செல்கிறது. அதனால் தான் சொல்கிறேன் - மதப்பற்று ஒரு தேசத்தில் தீவிரமாகி விட்டால் அதன் பெயரால் உங்கள் சொத்தைப் பிடுங்கி, மானத்தை பிடுங்கி, உயிரையே பிடுங்கினாலும் நீங்கள் கண்டுகொள்ள மாட்டீர்கள். விமர்சிப்பவர்கள் மதவிரோதிகள், தெய்வ நிந்தனையாளர்கள், கிறித்துவ, இஸ்லாமிய ஏஜெண்டுகள் என திசை திருப்பிட முடியும். அதை கணிசமான பற்றாளர்கள் ஏற்கவும் செய்வார்கள்.

அதனால் தான் சொல்கிறேன், ‘கடவுளறிய’ உறுதிமொழிபவர்கள் ‘மக்களறிய’ நல்லாட்சி தராமல் இருக்கவே அப்படி செய்கிறார்கள். இதற்கும் நம்பிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது ஒரு கண்கட்டி வித்தை மட்டுமே.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...