இந்த முறை சட்டமன்றத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட எம்.எல்.ஏக்களில் திமுகவினர் உளமார என்றும் அதிமுகவினர் கடவுள் அறிய என்றும் இருவேறாக மொழிந்து தம்மை முன்வைத்தது விவாதமானது. அப்போது ஒரு தரப்பு கடவுள் நம்பிக்கை உள்ளோர் கடவுள் அறிய என மொழிவதே நியாயம், அந்த உரிமை அவர்களுக்கு உண்டு எனக் கோர, இன்னொரு தீவிர வலதுசாரி தரப்பு தாம் நாத்திக கட்சி அல்ல எனக் கோரும் திமுக ஏன் “கடவுள் அறிய” என மொழிய தயங்குகிறது எனக் கேட்கிறது. கடவுள் தரப்பிலான இந்த இரண்டு கோரல்களும் பாஜக இங்கு பரப்புகிற நச்சு சிந்தனையின் விளைவு தான். குறிப்பாக, கடந்த 7 ஆண்டுகளில் நடப்பு வாழ்வில் சகல விசயங்களையும் - ஆட்சி, கொள்கை துவங்கி போலி வலதுசாரி வரலாற்றை போதிக்கும் கல்வி, கோமியம், கங்கை நீரை குடிக்க, கோ கொரோனா என கூவியபடி பேரணி செல்ல வலியுறுத்தும் மருத்துவம், தேஜஸ்வி சூர்யாக்கள் கொதிக்கும் பணி நியமனம் வரை - மதம், மரபு, நம்பிக்கை சார்ந்ததாக மாற்றி விட்டனர் பாஜகவினர். சிவில் வாழ்க்கையையும் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் தனித்தனியாக வைத்துக் கொள்ள வேண்டும், மதத்தை, சாதியை பிரகடனப்படுத்தி அதை வைத்து பொதுவாழ்வில் முடிவுகள் எடுக்கவோ சர்ச்சைகள் உருவாக்கவோ கூடாது எனும் நாகரிகத்தை நாம் இழந்து வருகிறோம். இந்த போக்கு ஒரு தரப்பால் தமிழகத்திலும் திணிக்கப்படுகிறது. “கடவுள் அறிய” விவாதம் அதற்காக உருவாக்கப்படுவது தான்.
“உளமார” உறுதிமொழிவது ஒரு நாத்திக செயல் அல்ல, அதுவே ஒரு மதசார்பற்ற தேசத்தில் அரசியல்வாதிகள் பேச வேண்டிய மொழி. ஏனென்றால் அரசு என்பது கடவுளால் நடத்தப்படுவது அல்ல. ஆக்ஸிஜன் உற்பத்திக்கும், தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோகத்துக்கும், ஏழை எளியோருக்கான சமூகநீதித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் கடவுள், மதத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நடைமுறையில் தான் நான் சொல்கிறேன். ஆனால் மாறாக மதத்தை, கடவுளை நுழைப்பது அரசு நிர்வாகத்தில் நடக்கும் பிழைகளை, ஊழல்களை மக்கள் காணாமல் தடுப்பதற்கான ஒரு தந்திரம் மட்டுமே. உணர்ச்சிவயப்படுத்தி மக்களை திசைதிருப்ப மதம் ஒரு அற்புதமான கருவி. “கடவுள் அறிய” உறுதிமொழிபவர்கள் அப்படி ஒரு வாய்ப்புக்காக ஏங்குகிறார்கள். இன்று மத்தியில் உள்ள ஆட்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணம். அவர்களுடைய நிர்வாகப் போதாமை 2019இல் தேர்தலின் போதே மக்களுக்கு உறைத்திருக்க வேண்டும். ஆனால் மதப்பற்றும் தேசிய வேறியும் கண்ணை மறைக்க வாக்குகளை அள்ளி வழங்கினார்கள். இப்போது அதே மக்கள் தமது பெற்றோர்கள், கணவர், மனைவி, பிள்ளைகள் தெருவில் கிடந்து சாவதைக் காணும் போது, பிணத்தை சரிவர எரிக்க கூட வழியில்லாமல் தவிக்கையில் திருந்துவார்களா எனத் தெரியவில்லை.
பெரும்பாலான ஆட்சியாளர்கள் இத்தகைய பேரழிவுக் குற்றங்களை இழைத்த பின் நிலைக்க மாட்டார்கள். ஆனால் ஜீ நீடிப்பார். ஏனென்றால் அவர் ஒரு பிரதமர் மட்டும் அல்ல, அவர் ஒரு கட்சித் தலைவரோ தேசத்தின் தலைமை நிர்வாகியோ மட்டும் அல்ல, அதை விட அவர் ஒரு மதத்தலைவர், சிவில் வாழ்வில் இருக்கும் ஒரு 'துறவி', அரசை நிர்வகிக்கும் ஒரு சாமியார், ஓஷோ, புட்டபர்த்தி பாபா, ஸ்ரீஸ்ரீ, ஜக்கி போன்றோரின் அரசியல் கலவை. அவரை விமர்சிப்பது தெய்வ நிந்தனையாக அவரது ஆதரவாளர்களால் பார்க்கப்படுகிறது. கொரோனா காலத்தில் இரண்டாம் அலையின் போது மிக மோசமான நிர்வாக சீர்கேட்டால் மக்கள் லட்சக்கணக்கில் மடியும் போது ஜீயின் பிம்பம் சற்று ஒளியிழக்கிறது, ஆனால் அவரால் சுலபத்தில் மதப்பற்றையும் தேசிய வெறியையும் தூண்டி விட்டு பழைய இடத்தை பிடித்து விட முடியும். ஜீயால் இன்று செய்ய முடிவதை விட சிறப்பாக, சுலபமாக நாளை ஒரு ஜக்கியால், ஸ்ரீஸ்ரீயால் ஒரு தேசத் தலைவரின் இடத்தில் நின்று நிகழ்த்த முடியும். அந்த இடத்திற்கு தான் பாஜக நம்மை நகர்த்தி செல்கிறது. அதனால் தான் சொல்கிறேன் - மதப்பற்று ஒரு தேசத்தில் தீவிரமாகி விட்டால் அதன் பெயரால் உங்கள் சொத்தைப் பிடுங்கி, மானத்தை பிடுங்கி, உயிரையே பிடுங்கினாலும் நீங்கள் கண்டுகொள்ள மாட்டீர்கள். விமர்சிப்பவர்கள் மதவிரோதிகள், தெய்வ நிந்தனையாளர்கள், கிறித்துவ, இஸ்லாமிய ஏஜெண்டுகள் என திசை திருப்பிட முடியும். அதை கணிசமான பற்றாளர்கள் ஏற்கவும் செய்வார்கள்.
அதனால் தான் சொல்கிறேன், ‘கடவுளறிய’ உறுதிமொழிபவர்கள் ‘மக்களறிய’ நல்லாட்சி தராமல் இருக்கவே அப்படி செய்கிறார்கள். இதற்கும் நம்பிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது ஒரு கண்கட்டி வித்தை மட்டுமே.
Comments