கிஷோர் கே சாமிக்காகவெல்லாம் அறிவுஜீவிகளில் சிலர் பேசுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் செய்கிற சில பிழைகள்:
1) ஆதிக்கவாதத்துக்கு எதிராக செயல்படும் போராளிகள், எழுத்தாளர்கள் மீது அரசும் வலதுசாரிகளும் தொடுக்கும் ஒடுக்குமுறையை கிஷோரின் கைதையும் பொதுமைப்படுத்துவது. இதை விட மோசமாக நீங்கள் மக்கள் போராளிகளை அவமதிக்க முடியாது. ஒரு மனித உயிர் என்பதைத் தாண்டி எந்த மரியாதையும் உரிமையும் கிஷோருக்குக் கிடையாது.
2) அவதூறு சட்டத்தில் கைது செய்திருக்க வேண்டும் என ஜல்லியடிப்பது. அதாவது சுலபத்தில் வெளிவரும்படி வழக்கை ஜோடித்திட வேண்டுமாம். என்ன சட்டம் என்பது முக்கியமல்ல - கிஷோர் இதுவரை செய்துள்ள அத்தனை அநீதிகளுக்குமான - பெண்களை தொடர்ந்து அவமதிப்பது, சாதி மேலாதிக்கத்தை தூக்கிப்பிடிப்பது, தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படுவது, தனிப்பட்ட பாலியல் அவமதிப்புகளில் ஈடுபட்டு மிரட்டுவது என மிக நீண்ட பட்டியல் - மொத்தமான ஒரு சவுக்கடியாகவே இந்த கைதை பார்க்கிறோம். இத்தனை நாட்களாய் பாஜகவினர், அதிமுக அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகளின் துணையுடன் அவன் ஜம்பமாக குற்றங்களை செய்தான். இப்போது அரவணைக்க ஆளில்லாததால் உள்ளே போகிறான். சசிகலாவை ஒரு கட்சித்தலைவியாக பார்ப்பது போலத்தான் கிஷோரை போராளியாக்கி அழகு பார்த்து அவனுடைய உரிமைக்காக பேசுவது. அரசியல்ரீதியாக இது தவறு.
3) அவதூறை இதுவரை திமுக செய்ததில்லையா, இவர் செய்யலையா, அவர் செய்யலையா என்பது ஒரு அபத்தம். அவதூறு என்பது பெயரளவிலானது தான் - ஆனால் அவனுடைய கைது அதற்கானது மட்டுமல்ல. அதனால் பேஸ்புக்கில் அமித் ஷாவை பகடி செய்தவனையும் கிஷோரையும் ஒப்பிட முடியாது. இறந்து போன தீப்பொறி ஆறுமுகத்தைக் காட்டி கேள்வி கேட்பதும் நியாயமல்ல. இப்போது உயிருடன் உள்ள திமுக பேச்சாளர்களில் யாராவது எதிர்க்கட்சியினரின், பத்திரிகையாளர்களின் பாலியல் வாழ்க்கை பற்றி அவதூறு பரப்புவது, சாதி துவேசத்துடன், மதவெறியுடன் தொடர்ந்து பேசுவது என செயல்பட்டால் சொல்லுங்கள். அவர்களையும் கைது செய்யக் கேட்போம். ஆனால் அதற்காக கிஷோரை ‘தியாகியாக’ முடியாது.
4) மாரிதாஸ் புள்ளிவிபரங்களுடன் பேசுகிறார் என்பதும் ஏற்கத்தக்கது அல்ல. அவர் முழுக்க முழுக்க மதவெறியைத் தூண்டும் விசயங்களையே பேசுகிறார். அல்லது சந்தேகத்துக்குரிய பாஜக வாட்சப் போலி செய்திகள உண்மை என்பதாக திரித்து பரப்புகிறார். பாஜகவினரும், அக்கூட்டணியை ஆதரிக்கும் அதிமுக ஆதரவளர்களும், பாஜகவை எதிர்க்கும் அதிமுகவினருமே மாரிதாஸின் இந்த பேச்சுகளை ரசிக்கிறார்கள். இந்துத்துவாவை பேசலாம், ஆனால் அதை தர்க்கரீதியாக தரவுகளுடன் பேச வேண்டும். அதை செய்யாத வரையில் மாரிதாஸின் வாயை மூடுவது அவசியம். அவருடைய யுடியூப் சேனலை தடை செய்ய வேண்டும். அதையும் மீறி அவர் பேசினால் அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
5) மக்களுக்கு எதிராகப் பேசுவது, மக்களின் ஆதரவின் அடிப்படையில் அமைந்த ஆட்சியை கலைத்து விடுவோம் என மிரட்டுவது, மதவெறியை, பிரிவினையை தூண்டும் விதமாக பிரச்சாரம் செய்வது, சாதி ஆதிக்கத்தை முன்னெடுப்பது, பெண்களை பொதுவெளியில் அவதூறு செய்து மிரட்டுவது ஆகிய காரணங்களுக்காக ஒருவரை கைது செய்யக் கேட்டால் “திமுகவுக்கு எதிராகப் பேசியதால் கைது” என திரிப்பதே நடுநிலை குமார்களின் வேலையாக இருக்கிறது. இந்த முறை கிஷோருக்கு எதிராக போடப்பட்ட வழக்கும், அதை செய்தி ஊடகங்கள் முன்வைத்த விதமும் அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. நாம் கவனிக்க வேண்டியது கிஷோர் கைதின் உண்மையான நோக்கம் திமுக எதிர்ப்பு அல்ல என்பது தான் - அது அவனை இப்போது உள்ளே வைப்பதற்கான ஒரு சாக்கு மட்டுமே.

Comments