முதலில் மட்டையாடும் இந்தியா 20 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் 62. நல்ல துவக்கம்.
ஆடுதளம் ஆச்சரியப்படுத்துகிறது. நிபுணர்கள் பலரும் இந்த ஆடுதளம் பச்சையாக வேகப்பந்து வீச்சுக்கு தோதாக இருக்கும் என்றார்கள். சுனில் கவாஸ்கர் கூட ஆடுதளத்தை சோதித்து விட்டு மட்டையாடுவது சவாலாக இருக்கும் என்றார். அதனாலே இன்று இந்தியா நான்கு வேக வீச்சாளர்களுடன் செல்லக் கூடும் என சொன்னார்கள். நியுசிலாந்து கூட ஒரு சுழலை எடுத்து விட்டு ஐந்து வேக, மிதவேக வீச்சாளர்களுடன் சென்றார்கள். ஆனால் ஆடுதளத்தைப் பார்த்து இந்திய நிர்வாகம் சரியான முடிவை எடுத்திருக்கிறார்கள். இதைப் பாராட்ட வேண்டும்.
இங்கிலாந்தில் வழக்கமான ஆடுதளங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆடுதளம் மெத்தனமாக, பவுன்ஸ் இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக உள்ளே பந்து வரும் இடத்தில், குச்சிகளுக்கு நேராக உள்ள பகுதியில் பந்து தாழ்வாக வருகிறது. ஆறாமல் குச்சியில் மட்டும் எகிறுகிறது. போகப் போக பந்து இன்னும் மெதுவாகும், வேகமாய் உள்ளே வரும் பந்து LBW முறையில் விக்கெட்டுகளை சாத்தியமாக்கும். ஷாமி இது போன்ற சூழலில் செமையாக வீசுவார். பும்ராவுக்கும் இது எடுபடும். ஆனால் இஷாந்துக்கு பெரிதாக கைகொடுக்காது. ஒருவேளை இந்தியா முதல் இன்னிங்ஸில் 150க்கு மேல் லீட் எடுத்து ஆட்டம் ஐந்தாவது நாளுக்கு சென்றால் இறுதியாக ஆட வரும் நியுசிலாந்தால் 220க்கு மேல் இல்லை அடிப்பது கூட சிரமமாக ஆகலாம்.
சுழலர்கள்?
உள்ளே வரும் பந்து சில நேரங்களில் குறைநீளத்தில் இருந்து எகிறுகிறது. ஜடேஜாவுக்கு சரியாக இருக்கும். ஆனால் அவர் நீளத்தை சற்று பின்னுக்கு இழுக்க வேண்டும். ஐந்தாவது நாள் அஷ்வினுக்கு பந்து சுழலலாம், கால் பக்கமாய் எகிறி ஷார்ட் லெக்கில் கேட்ச் கிடைக்கலாம். ஆனால் இதெல்லாம் நடக்க அடுத்த மூன்று நாட்களும் வெய்யில் காய வேண்டும். இன்னொரு விசயம் - ஆடுதளத்தின் உள்மடிப்புகள் ஏற்கனவே ஓரளவுக்கு காய்ந்து திடமாக இருந்தால் வெயில் ஆடுதளத்துக்கு சற்று கூடுதல் வேகத்தை கொடுத்து, இதை மட்டையாட்டத்துக்கு சாதகமும் ஆக்கலாம்.
அஷ்வினுக்குப் பதில் உமேஷ் யாதவ் கூட ஒரு நல்ல தேர்வாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியவில்லை.
இரண்டு சுழல்ர்களை தேர்ந்ததற்கான என் முந்தைய விமர்சனத்தை பின்வாங்கிக் கொள்கிறேன். இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் ஆடுதளம் தில்லி பெரோஷா கோட்லா போல இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆடுதள தயாரிப்பாளர் பிரியாணி செய்ய முயன்று சாம்பார் சாதம் போல ஆகி விட்டது.

Comments