விரைவில் பிரசுரமாக இருக்கும் என் கட்டுரை ஒன்றில் (“சிவசங்கர் பாபாக்களின் பிறப்பிடம் எது?”) இருந்து:
“நம்முடைய தேசமெங்கும் பரவியிருக்கும் அத்வைதம் இந்த பொய்யர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் நம்மைத் தடுக்கிறது. ஒருவன் பொதுவிடத்தில் ஒரு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டால் அவன் ஒரு பொறுக்கி என அந்த இடத்திலேயே முடிவு செய்து விடுவார்கள். அவன் என்னதான் உன்னதமான சிந்தனையாளன், பெரும் பணக்காரன், தியாகி, வள்ளல் என்றாலும் மக்களுக்கு இவ்விசயத்தில் குழப்பமே வராது. ஆனால் ஆன்மீகம் என்றதும் ஒரு குழப்பம் வந்து விடுகிறது - ஆன்மீகவாதி நான் அந்த ‘நோக்கத்தில்’ தொடவில்லை, ஒரு ஆசீர்வாதமாக, என்னுடள் நான் உணரும் ஆன்ம அதிர்வை கடத்திடவே அப்படி செய்தேன் என்றால் மக்களுக்கு ஒருவேளை இது உண்மையோ எனும் குழப்பம் வந்து விடும். இந்த குழப்பத்தை தான் சிவசங்கர் பாபாக்களும், நித்யானந்தாக்களும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த குழப்பமே நம் மண்ணில் எண்ணற்ற சாமியார்கள் தோன்றக் காரணமாகிறது. இவர்களுக்கும் மெய்யியல் தேடலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது முழுக்க வேறொரு பிரச்சனை.
(…) இது போன்ற தில்லுமுல்லுப் பேர்வழிகளை ஒழிப்பதற்கு முதல் வழி ஆன்மா என ஒன்றில்லை எனும் கருத்தை மக்களிடம் பரவலாக கொண்டு சேர்ப்பது மட்டுமே. அடுத்தது, கார்ப்பரேட் சாமியார்கள் தம் வரவு செலவுகளுக்கு அரசிடம் கணக்கு சமர்ப்பித்து, அதற்கான சான்றுகளையும் காட்டி தம்மிடம் சேரும் பணம் சட்டபூர்வமானது என நிரூபிக்கும்படி சட்டத்தை மாற்ற வேண்டும். இப்போதுள்ள ஓட்டையை வைத்து மிகப்பெரிய அளவில் கறுப்புப்பணத்தை கைமாற்றி விடும் ‘ஆன்மீக வங்கிகளாக’ இவர்கள் செயல்படுகிறார்கள். சத்ய சாயி பாபா இறக்கும் போது அவருடைய சொத்து மதிப்பு 64,000 கோடிகள். ஜக்கி வாசுதேவின் சொத்து மதிப்பு 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள். நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு 10,000 கோடிகள். ஶ்ரீஶ்ரீயின் மதிப்பு 5 லட்சம் டாலர்கள். சிவசங்கர் பாபா ஒரு சின்ன மீனே - அவருடைய மதிப்பு 5 மில்லியன் டாலர்கள். இந்த ஆன்மீக வங்கிகள் ஒரு சில வருடங்களில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை மிரட்டியும், பணம் கொடுத்தும் வாங்கி பிரம்மாண்டமாக கோயிலளை அமைத்து, அங்கும் வியாபாரம் பார்க்கிறார்கள். ஹெலிகாப்டர், சொந்த விமானங்கள், பிரம்மாண்டமான பங்களாக்கள் என சொகுசாக இருக்கிறார்கள். இந்த சாமியார்கள் எதை செய்தாலும் அதை ஒரு கணக்குவழக்குக்கு உட்பட்டு செய்ய வேண்டும், வெளிப்படையாக இருக்க வேண்டும், முக்கியமாக அது ‘வெள்ளைப் பணமாக’, சொந்தப் பணமாக இருக்க வேண்டும். கேட்டால் இது எங்கள் பணமல்ல, பக்தர்களின் பணம் என கைவிரித்து விடுவார்கள். யாரந்த பக்தர்கள், கணக்கு காட்டு என்றால் அமைதியாகி விடுவார்கள். நாங்கள் இந்து மதத்தை பரப்புகிறோம் (ஜக்கி) அல்லது மக்களுக்கு தொண்டு செய்கிறோம் (சிவசங்கர் பாபா) என சப்பைக்கட்டு கட்டுவார்கள். இதற்கும் முடிவு கட்ட வேண்டும்.”

Comments