லக்னவி பிரியாணி
சுவையில் ஹைதராபாத் பிரியாணிக்கு அடுத்த இடம் லக்னவி பிரியாணிக்குத் தான் இருக்க வேண்டும் என இன்று மதியம் ஒரு ஸ்பூனை வாயில் வைத்ததும் ஒரு அட்டகாசமான மசாலா வாசனை என்னை அடித்துத் தூக்கியதே அந்த நொடியே முடிவு செய்து விட்டேன். வாசனை தான் முழுக்க முழுக்க லக்னவி பிரியாணியை தூக்கி நிறுத்துகிறது. நாம் பொதுவாக நாவால் உணவை சுவைத்து பற்களால் அரைத்து வாயில் தக்க வைத்து மெல்ல முழுங்கி முழு இன்பத்தையும் ரசிப்போம். ஆனால் லக்னவி பிரியாணியோ மூக்கால் ரசித்து வாயால் உண்ணப்பட வேண்டியது. ஒவ்வொரு ஸ்பூனிலும் நாம் அந்த சோறையோ, மசாலாவையோ அல்ல நிறைய ஜிவ்வென்ற மென்மையான மணத்தையே எடுத்து உண்கிறோம். அதுவும் தமிழ்நாட்டு பிரியாணியில் புதினா வாசனை முக்கியம் எனில், லக்னவ் பிரியாணியில் அது இல்லை. மாறாக தாழம்பூ நீர், பன்னீர், குங்குமப் பூ கலந்த பால், உடைத்த ஜாதிக்காய் ஆகியவற்றின் வாசனையே பிரதானம். சொல்லப்போனால் அவர்கள் வேறு மசாலாவே சேர்ப்பதில்லை. நெய்யும் அதிகமாக இல்லை.
இன்னொரு அருமையான அம்சம் அதன் மசாலா நன்கு ஊறிய சிக்கன் துண்டுகள். இந்த பிரியாணியில் சிக்கன் கிட்டத்தட்ட மட்டனைப் போல மிருதுவாக ஜூஸியாக இருக்கிறது. அதற்கு ஒரு தொழில்வித்தை வைத்திருக்கிறார்கள். வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி அதில் இஞ்சிப்பூண்டு பொட்டு வதக்கிய பின் அதன் மீது சிக்கன் துண்டுகளும் கடைசியாக பிரியாணி இலை, ஜாதிக்காய், தயிர், பால், காரப்பொடி, உப்பு எல்லாம் இறுதியில் சேர்க்கிறார்கள். இது வெந்த பிறகு சிக்கனை தனியாக எடுத்து வைத்த பின், மசாலாவை வடிகட்டி சாறை இன்னொரு பக்கம் எடுத்து வைக்கிறார்கள். இந்த சாறில் மிதக்கும் எண்ணெய்யையும் தனியாக எடுத்து வைக்கிறார்கள் (அதன் வாசனைக்காக). அடுத்து, வடிகட்டியதில் மீந்த வெங்காய மலாசாவுடன் மீண்டும் சிக்கன் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கி எடுக்கிறார்கள். இன்னொரு பக்கம் உப்பு, நறுக்கின பச்சை மிளகாய், பட்டை, ஏலக்காய் போட்ட நீரில் பாஸ்மதி அரிசியைப் போட்டு அரைவேக்காடு வேக வைக்கிறார்கள். அடுத்து குக்கரில் / குண்டானில் பாதி வெந்த சோறு, வதக்கின சிக்கனை அடுக்கடுக்காய் வைத்து, அதன் மீது அந்த மிதக்கும் எண்ணெய் சாறு, தாழம்பூ நீர், பன்னீர், குங்குமப் பூ கலந்த பால் ஆகியவற்றை சேர்த்து தம் வைத்து விடுவார்கள். பிரியாணி தயாரானதும் அதன் மீது பொரித்த வெங்காயத்தை தூவுகிறார்கள். இப்படித்தான் வாசனைகளின் சொர்க்கமான பிரியாணி தயாராகிறது.
இப்போது சொல்லுங்க இதை விட சிறந்த ஒரு கலைப்படைப்பு சாப்பாட்டில் இருக்க முடியுமா?
Comments