தமிழக பாஜகவை காப்பாற்ற ஒரே வழி
இதை நான் கே.டி ராகவனை ஆதரிக்கும் பொருட்டு எழுதவில்லை. இது சரியான விதத்தில் புரிந்து கொள்ளப்படும் எனும் நம்பிக்கையில் எழுதுகிறேன்: கே.டி ராகவனின் இந்த ஆபாச வீடியோ வந்து பந்தாடப்பட்டு பதவி இழந்த பிறகு எனக்கு அவர் மீதுள்ள கோபம், எரிச்சல் எல்லாம் மறைந்து விட்டது. முன்பு அவரைப் பார்த்தாலே செம கடுப்பு வரும். ஆனால் இப்போது பாவம் எனத் தோன்றுகிறது. அவர் அதிகார துஷ்பிரயோகம் பண்ணித்தான் அந்த வெட் சாட்டில் ஈடுபட்டார், ஆகையால் பதவியில் இருந்து தூக்கப்பட்டது நியாயம் தான் என நம்புகிறேன். இருந்தாலும் அண்ணாமலை ஒரு குழந்தையை குளிப்பாட்டி குப்பைத் தொட்டியில் போட்டது போல இவரைத் தூக்கி செப்டிக் டேங்கில் போட்டு மூடி விட்டார். இனி ஒரு போதும் எழுந்து வர முடியாத வீழ்ச்சி இது. இதன் பின்னால் உள்ள நிஜமான வில்லன் ஜி.முருகனே, அவர் தான் இந்த காணொலி வெளியான பின்னர் ஊடகங்களை தொடர்புகொண்டு இதைப் பற்றி அதிகமாகப் பேசும்படி தூண்டினார் என்று நக்கீரன் பிரகாஷ் சொல்லுகிறார். இது ஒரு படுபயங்கர திருப்பம்.
பிரகாஷின் பார்வையில், முதலில் தேர்தலுக்குப் பின் ஜி.முருகன் உள்ளிட்ட பார்ப்பனரல்லாத பாஜக தலைவர்களை காலி செய்ய ராகவன் ஒரு சதித்திட்டம் தீட்டுகிறார். அவர் தினமலர் மூலம் இத்தலைவர்களின் பலான செயல்பாடுகளை பாஜக மேலிடம் அறிந்து கண்டித்தது பற்றின சேதிகளை வெளியிடுகிறது. விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும் எனக் கோருகிறது. இதன் பின்னால் ராகவனே என அறிந்து கொண்ட முருகன் தன் ஆதரவாளர்களைக் கொண்டு ராகவனின் பாலியல் அத்துமீறல்கள் பற்றின ஆதாரங்களை சேகரிக்கிறார்; அவை எப்படியோ மதனிடம் வந்து சேர்கின்றன. மதன் அண்ணாமலையிடம் போகிறார் அல்லது அண்ணாமலையே அவரிடம் வருகிறாரோ தெரியவில்லை. ஆனால் அண்ணாமலை யோசிக்கிறார்: “எப்படியும் முருகன் காலியாகி விட்டார். அவர் வீடியோவும் அகப்பட்ட நிலையில் இனி அவர் நம் பிடிக்குள். ராகவனை அப்படி கட்டியாள முடியாது. அவரை மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்தி, அசிங்கப்படுத்தி ஒரேயடியாக துரத்த வேண்டும். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்!”. அண்ணாமலை அந்த காணொலியை பதிவேற்றும்படி உத்தரவிடுகிறார். இங்கு அவர் எதிர்பாராதது எந்த எதிரியையும் அப்படி புறங்கையால் டீல் பண்ண முடியாது என்பதே. ஒரு பூனைக் கூடி எதிர்த்து சீறும். ராகவன் தன் அத்தனை தொடர்புகளையும் பயன்படுத்தி தன் மீது இதற்கு மேல் சேறு வாரி இறைக்கப்படாதபடி தற்காத்துக் கொள்கிறார். விளைவாக மதனுக்கும் அண்ணாமலைக்கும் முட்டிக்கொள்ள, மதன் அண்ணாமலையை நிர்வாணப்படுத்துகிறார். ஒரே நாளில் அண்ணாமலை ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் வில்லன் ஆகி விடுகிறார். அவர் ஒரு சிறுபிள்ளைத்தனமான குரூரமான அரசியல்வாதி, சாடிஸ்ட் எனத் தெரிய வருகிறது.
இந்த இடத்தில் தான் எனக்கும் ராகவன் மீது சற்றே soft corner வருகிறது. இப்போதெல்லாம் நானும் நண்பர்களும் கே.டி ராகவனைப் பற்றி பேசிப் பேசி சிரிக்கிறோம். அவருடைய அந்த பிரசித்தமான சிலுவை வரையும் சைகையை நான் வீட்டில் பண்ணிக் காட்டினால் அது ஆபாசமாக அன்றி வேடிக்கையாக மாறி விடுகிறது. இதற்கு முன் எந்த அரசியல் தலைவர் நமக்கு இத்தகைய வாய்ப்பை வழங்கி இருக்கிறார்? வடிவேலுவுக்கு அடுத்தபடியாக பல முத்திரைகள், பாவங்கள் காட்டி நம் பொழுதுகளை ஜாலியாக்கிய பெருமை ராகவனையே சாரும். இப்போதெல்லாம் மனம் சோர்ந்தால் ஒன்று வடிவேலு அல்லது ராகவனின் வீடியோ தான்.
இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், அடுத்தடுத்து முருகன் உள்ளிட்ட பிற பாஜக தலைவர்களின் காணொலிகளையும் வெளியிட்டு விடுங்கள் எனக் கோரத் தான். அவர்கள் மீது தமிழர்களுக்கு உள்ள வெறுப்பைப் போக்கி, உச்சுக்கொட்ட வைக்க ஒரே வழி ஒவ்வொருவரையாய் எக்ஸ்போஸ் பண்ணி பதவியை விட்டுத் தூக்குவது தான். அதனால் தான் அண்ணன் அண்ணாமலையிடம் வேண்டுகிறேன், “உங்கள் ஸ்டிங்க் ஆபரேஷன்ஸ் தொடருங்கள். பாஜகவை காப்பாற்ற ஒரே வழி அது தான்.”

Comments