இன்றைய ஆர்.சி.பி vs சன் ரைசர்ஸ் ஆட்டம் இவ்வருட ஐ.பி.எல்லின் அட்டகாசமான த்ரில்லர்களில் ஒன்று. இறுதி ஓவரில் 13 ரன்கள் எடுக்க வேண்டும். புவனேஷ்வர் பந்துவீச்சு. முதல் பந்தை கார்டன் அடிக்கத் தவறுகிறார். அடுத்த பந்தில் ஒற்றை ஓட்டம். மூன்றாவது பந்துக்கு ஏ.பி டி வில்லியர்ஸ் ஸ்டிரைக்குக்கு வருகிறார். ஒரு புல் டாஸ் பந்தை சரியாக அடிக்க தவறுகிறார். அடுத்த பந்தை சிக்ஸர் அடிக்கிறார். இப்போது 2 பந்துகளில் 6 எடுக்க வேண்டும். அடுத்த பந்து முட்டி உயர புல் டாஸ். அதை சரியாக அடிக்கத் தவறுகிறார். கடைசி பந்தும் புல் டாஸ். அதை ஒருவாறாக டீப் எக்ஸ்டிரா கவர் பகுதிக்கு அடிக்கிறார். அங்குள்ள களத்தடுப்பாளர் அதைத் தடுத்திட ஒரு ஓட்டம் கிடைக்கிறது. 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி தோற்கிறது.
மிக சிரமமான பந்துகளை எல்லாம் 350 கோணத்தில் சிக்ஸர்களை விளாசிப் பழக்கமுள்ள டி வில்லியர்ஸா மூன்று புல் டாஸ்களை மிஸ் பண்ணுகிறார்? இதைப் பார்க்கும் சிலர் அவரது ஆட்டநிலை மோசமாக உள்ளதே இதற்குக் காரணம் என நினைக்கிறார்கள். வேறு சிலரோ கடைசி ஓவரின் நெருக்கடியை அவரால் சமாளிக்க முடியவில்லை என்கிறார்கள். எனக்கு ஆட்டத்தின் முடிவில் பேசிய போது கோலி small margins என இரண்டு மூன்று முறைகள் குறிப்பிட்டது முக்கியம் எனப் பட்டது.
டி வில்லியர்ஸ் நல்ல ஆட்டநிலையில் இருக்கும் போது கடைசி நேரத்தில் மைக்ரோ நொடி வித்தியாசத்தில் தான் பேட்டை பிடித்திருக்கும் விதத்தை சற்றே மாற்றிப் பிடித்து தன் ஷாட்டையும் மாற்றி ஆடுவதைக் கண்டிருக்கிறோம். அதுதான் அவருடைய ஆட்டத்தின் மேஜிக்கே. ஆனால் இப்போது ஆட்டநிலை சரியாக இல்லை. முதுகுக்காயம் வேறு. அதனால் எந்த இடத்தில் உத்தேசிக்கிறாரோ அங்கே மட்டுமே மட்டையை விளாசி பந்தை செலுத்துகிறார். சரியாக தொடர்பு கிடைக்காவிடில் அந்த ஷாட் வேறெந்த மேஜிக்குக்கும் உள்ளவதில்லை. உ.தா., அந்த 5வது பந்து முழுநீளமாக வரும் என டிவில்லியர்ஸ் எதிர்பார்த்திருக்கலாம். உயர புல் டாஸ் எதிர்பாராமல் வர அவரால் அந்த இறுதி நுண் நொடி மாற்றத்தை ஷாட்டுக்குள் கொண்டு வரவில்லை - பழைய டி வில்லியர்ஸ் அதே பந்தை சட்டென பின்னங்காலுக்குப் போய் டென்னிஸ் சர்வ் போல புவனேஸ்வர் தலைக்கு மேல் விளாசி இருப்பார். இப்போது அவரால் அது முடிவதில்லை. அந்த கடைசிப் பந்து அதைப் பற்றித் தன் நாம் முக்கியமாகப் பேச வேண்டும்.
அந்த ஷாட்டை அடித்த போது டி வில்லியர்ஸ் ஒருவேளை மட்டையை சற்றே திறந்த நிலையில் பிடித்திருந்தால் பந்து டீப் எக்ஸ்டிரா கவருக்கு இடப்பக்கமாக சென்று பவுண்டரிக்கு சென்றிருக்கும். ஆனால் மட்டை அப்படி இறுதிக் கட்டத்தில் திறக்கவில்லை. ஒரு சின்ன நுட்பம் தான், அது மிஸ் ஆகிவிட்டது. அத்துடன் டை செய்யும் வாய்ப்பும் பறிபோனது. ஒருவேளை அந்த பவுண்டரி சென்று சூப்பர் ஓவருக்கு ஆட்டம் சென்றிருந்தால் இன்னும் செமையாக ஆர்ப்பாட்டமாக இருந்திருக்கும்.
மறுவாய்ப்புகள் இல்லாத குரூரமான ஆட்டம் இது!
புவனேஸ்வர் டி வில்லியர்ஸுக்கு எதிராக வைடாக முழுநீளத்தில் வீசியது ஒரு நல்ல உத்தி. ஏனென்றால் டி வில்லியர்ஸின் நிலையமைதியின் அனுகூலம் லெக் ஸ்டம்பில் நின்று off and middleஇல் விழும் பந்துகளை எல்லா திசைகளிலும் அடிப்பதே. 6வது ஸ்டம்பில் வீசினால் அவரது சமநிலை பாதிக்கப்படும். Round the wicket வந்து middle and legஇல் மெதுவான பந்துகள், யார்க்கரும் வீசலாம். ஆனால் டி வில்லியர்ஸ் திரும்பி நின்று switch hit அடித்தால்? அதனால் புவனேஸ்வரின் உத்தி பாதுகாப்பானது. என்ன இவ்வளவு புல் டாஸ்கள் வீசியும் தப்பித்து விட்டார்.

Comments