Skip to main content

“வினோதய சித்தம்” - இத்தனை பாராட்டுகளுக்கு தகுதியானதா?



நாம் சில ஓட்டல்களில் சாப்பாடு வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது “கெட்டுப் போயிருச்சோ” என யோசிப்போமே, சாப்பிட்டு முடித்த பின்னரும் சில மணிநேரங்களுக்கு ஏப்பமாக வந்து கொண்டிருக்குமோ அப்படியொரு அனுபவம் இப்படத்தை பார்ப்பது. Bruce Almightyயில் இருந்து, “அறை என் 305இல் கடவுளில்” இருந்து வேறு சில படங்கள் வரை நினைவுக்கு வருகின்றன. ஆனால் அந்த படங்களில் இல்லாத பிற்போக்கான கருத்துகள் இப்படத்தில் அதிகமாக வருகின்றன:


1) தனிமனித முயற்சி இரண்டாம் பட்சமானது. எது நடக்க வேண்டுமோ அது நடந்தே ஆகும் என்பது இப்படம் அளிக்கும் சேதி. யார் நடத்தி வைக்கிறார்? “நாங்கள்” என காலன் பாத்திரத்தில் வரும் சமுத்திரக்கனி சொல்லுகிறார். யார் இந்த “நாங்கள்”? காலனும் காலனுக்கு மேல் இருக்கும் தெய்வங்களுமா? அப்படித்தான் தோன்றுகிறது.


2) சரி நம் வாழ்க்கையை காலனும் கடவுளுமாக திட்டமிட்டு நடத்துகிறார்கள் என்றால் எந்த கணக்குப்படி? சமுத்திரக்கனி நம்முடைய கர்ம வினைகளின் கணக்கு வம்சாவழியாக தொகுக்கப்பட்டு வருகிறது, அதன் விளைவை நாம் அனுபவித்த ஆக வேண்டும் என்கிறார். இது எவ்வளவு ஆபத்தான சிந்தனை எனப் புரிகிறதா? இப்படி சொல்லித் தான் நம் சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தி வருகிறார்கள். எல்லா அநீதிகளுக்கும் முட்டுக் கொடுக்கிறார்கள். பாவ, புண்ணியம் குறித்த மூட நம்பிக்கைகள் நம்முடைய சமூகத்தில் பொதுமக்களிடையே பரவி உள்ளது உண்மை தான். ஆனால் ஒரு சினிமா இக்கருத்துக்களை ஒன்று ஆழமாக பரிசீலிக்க வேண்டும் (Ship of Theseus படத்தில் போல) அல்லது பேசாமல் விட்டுவிட வேண்டும். மீண்டும் அதே சீரழிவான நம்பிக்கைகளை அதை ஏதோ ஒரு முக்கியமான தத்துவக் கருத்து என்பதைப் போல வலியுறுத்துவது சமூகத்துக்கு கேடானது.


3) அடுத்து, இட ஒதுக்கீட்டை மறைமுகமாக கிண்டலடிக்கிறார். அது மிக நுட்பமான ஒரு சாடலாக உள்ளது. தம்பி ராமையா இளைஞராக நேர்முகத்தில் தன்னுடன் போட்டியிட்ட ஒரு புத்திசாலியான திறமையான பிராமண இளைஞரை ஏமாற்றி அவ்வேலையை பெறுகிறார். அதன் பிறகு அவருடைய மகன் பல வருடங்களுக்குப் பிறகு இவருடைய நிறுவனத்துக்கே வந்து இவருக்கு மேலதிகாரியாகி விடுகிறார், “விதி வலியது” என சமுத்திரக்கனி அவருக்கு புரிய வைக்கிறார். மறைமுகமாக, தமிழகத்தில் புத்திசாலி பிராமணர்களை இவ்வாறு விரட்டி அவர்கள் பெற வேண்டிய பதவிகளை தாழ்த்தப்பட்டவர்கள் பெற்று விட்டார்கள் எனும் கருத்து இதனுள் வருகிறது.


4) இந்த காலன் எனும் பாத்திரம் பௌத்தத்தில் காலம் எனும் சூன்யம் என ஒரு கருத்தமைவாகத் தோன்றி, அதில் இருந்து பின்னர் வைதீக மதத்தால் கடன்பெறப்பட்டு அவமரியாதைக்குரிய ஒரு கரிய உப தெய்வமாக மாற்றப்பட்டது. பூர்வ பௌத்தர்களான தலித்துகளை அவமதிக்கும் நோக்கிலே வைதீகர்கள் காலனை எருமை மீது அமர்ந்து வருகிற கொடியவனாக காட்டினர். ஆனால் பௌத்ததில் காலம் என்பது நமது இருப்பு எவ்வளவு சாராம்சமற்றது எனக் காட்டுகிற ஒன்று, காலத்தினுள் ஒரு நேர்கோட்டு போக்கை நாம் கற்பனை பண்ணி நாமாக சுயாதீனமாக ஒவ்வொன்றையும் செய்கிறோம் என ஒரு தவறான நம்பிக்கையை கொண்டிருக்கிறோம் என பௌத்தம் பேசியது. இந்த தத்துவ சாரத்தை விட்டு விட்டு வைதீகத்துக்குள் இக்கருத்து கடத்தப்பட்டு வந்த பின் இன்று நாம் மனிதனுக்கு செயலூக்கம் தேவையில்லை, நடப்பவை எல்லாம் நன்மைகே என மேம்போக்காக தவறாக புரிந்து கொள்கிறோம். புத்தர் என்றுமே சமுத்திரக்கனியைப் போல எல்லாம் மேலே இருப்பவன் பார்த்துக்குவான் என சொல்லியதில்லை. சமுத்திரக்கனி போன்றவர்களின் பிரச்சனை நான் இங்கு பேசுவது எதையும் அவர் கேள்விபட்டிருக்கவே மாட்டார், ஆனாலும் தன்னை ஒரு மாபெரும் சிந்தனையாளர் என நம்பிக் கொண்டிருப்பார் என்பதே. தமிழ் சினிமாவில் காலனை சரியாக பௌத்தத்தின் படி விளங்கிக் கொண்டு “காலா” என ஆழமாக சித்தரித்தார் ரஞ்சித் மட்டுமே. ஏனென்றால் அவருக்கு வாசிப்புப் பழக்கம் உண்டு.


5) இவ்வளவு பிரச்சனை இருந்தாலும் இப்படம் மக்களால் ரசிக்கப்பட ஒரு காரணம் ஒருவர் ஆணவத்துடன் தனக்குத் தெரிந்ததே உலகம் என நம்பிக் கொண்டிருக்க மற்றவர்களின் புரிதல், கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கையில் அது எப்படி முழுக்க வேறொன்றாக இருக்கிறது என காட்டியதே. இந்த திருப்பங்கள் ரொம்ப குழந்தைத்தனமாக சில நேரம் இருந்தாலும் ஒரு தயிர் வடை சாப்பிட்ட ரசனையான அனுபவம் தருகின்றன. நமக்கு அவ்வப்போது தயிர் வடைகளும் தேவைப்படுகின்றனவே. 


6. கதை துவங்கும் போது தம்பி ராமையாவுக்கு இருந்த அகந்தை, குறுகிய மனப்பான்மை படம் முடியும் போது மறைந்து அவர் மனிதர்களை அன்பாகவும் மரியாதையுடனும் நடத்த கற்கிறார். இந்த வடிவ ஒழுங்கு பெரிதாக எங்கும் பிசிறாமல் திரைக்கதையை எழுதி இருக்கிறார்கள், படத்தையும் எடுத்திருக்கிறார்கள். முக்கியமாக தனி நகைச்சுவை டிராக், பாடல்கள் இல்லாமல் கதையை ஒரே போக்கில் சொல்லியிருப்பதையும் பாராட்டாலாம். தமிழில் எனக்குத் தெரிந்து மிகச்சில படங்கள் தாம் இப்படி வந்துள்ளன. 


7. இன்னும் சற்று முயன்றிருந்தால் கூடுதல் நெருக்கடிகளை பாத்திரங்களுக்கு கொடுத்து, அவர்களுடைய வாழ்க்கையில் சிக்கல்களை அதிகப்படுத்தி அதில் இருந்து இறுதியில் வெளிவருவதைக் காட்டி படத்தை சுவாரஸ்யமாக்கி இருக்கலாம். ஆனால் சமுத்திரக்கனி ஒரு மேடை நாடகம் போலவே திட்டமிட்டிருப்பதால், எளிய நீதிக்கதையாக, சீரியலுக்கான அத்தனை சங்கதிகளுடனும் உருவாக்கி இருப்பதால் பத்து வயது குழந்தையின் மூளைத்திறன் கொண்டோரும் பார்க்கும்படித்தான் வந்திருக்கிறது.


8. இன்னொரு தனித்துவம் ஒட்டுமொத்தமாக இப்படத்தில் யாருமே நடிக்கவில்லை என்பது. சுத்தமாக நடிப்பே வராதவர்களாக தேர்ந்தெடுத்து சொதப்ப வைத்திருக்கிறார் சமுத்திரக்கனி. தம்பி ராமையா மிக மட்டமாக, மிகையாக நடித்திருக்கிறார் என்றால் சமுத்திரக்கனியின் முகத்தில் உணர்ச்சிகளே தெரியவில்லை. ஒருவேளை காலன் இப்படித்தான் இருக்க வேண்டும் என நினைத்து விட்டார் போல. இப்படி மொத்தமாக எல்லாரும் சொதப்புவதால் யாரும் குறிப்பிட்டு மோசமாக நடிக்கவில்லை, எல்லாரும் நடிக்கிறார்கள் போல என நமக்கு ஒரு தனியான ஏமாற்றம் வராது. இது ஒரு நல்ல உத்தி. 

9. வினோதய சித்தம் என்பதெல்லாம் அதிகம், இது ஒரு ‘பழமையான சித்தம்’ எனலாம். ஆனால் ‘லிப்டை’ விட மேலான படம் தான்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...