தமிழில் நல்ல திரைமொழி வாய்க்கப்பட்டவர்களும் பணத்துக்காக பக்காவான வணிக சினிமா எடுக்க கிளம்பினார்கள். கலைப்படமாக தெரியும் நடுநிலை சினிமா எடுக்கிறவர்கள் கொரியர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களுடைய சினிமாவின் ஹார்ட் டிரைவையே பின்வாசல் வழியாக புகுந்து மொத்தமாக உருவி எடுத்து தம் பெயரை போட்டு படமெடுத்துக் கொண்டதும் நடந்தது. இவர்களிடையே தன் சொந்த கதையை, சொந்தமான கருத்துக்களை, பிரச்சனைகளை தனித்துவமான மொழியில் எடுக்கிற இயக்குநர்களில் ஒருவர் ராம்.
ராமின் சினிமா பார்வையாளர்களுக்கு திரைக்கும் இடையிலான கண்ணாடியை உடைப்பது. அனேகமாக, ஜெர்மனிய இயக்குநர் பிரெக்ட் நாடக மேடையில் முயன்றதை ராம் சினிமா திரையில் செய்து பார்த்தார் எனலாம். ஒரு சின்ன காதல் கதையை, அப்பா-மகள் உறவு குறித்த கதையை நாம் பொருளாதாரம், அரசியல், அறம், இயற்கை ஆகிய
பிரச்சனைகளைக் கடந்து யோசிக்க முடியாது, இவையே பின்னிருந்து நுண்ணிய இயக்கமாக நம் வாழ்வை நடத்துகின்றன என விவாதித்தவர் அவர். படத்தைப் பார்க்கும் போதே ரசித்தால் மட்டும் போதாது, பிரச்சனைகளைப் பற்றி பார்வையாளர்கள் தொடர்ந்து யோசித்தும், பேசியும் வர வேண்டும், அதுவே பரந்துபட்ட பார்வையாள அனுபவம் என பார்வையாள அனுபவத்தை மறுகட்டமைத்தவர், அதில் வெற்றியும் பெற்றவர்.
ராம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சொத்து. அவருடைய படங்கள் தொடர்ந்து வெற்றி பெற வைப்பதும், அவரைப் போன்ற கலைஞர்களை பாதுகாப்பதும் நம் பொறுப்பு.
ராமுக்கு மூன்று நாட்கள் பிந்தைய பிறந்த நாள் வாழ்த்துகள்!

கருத்துகள்