தமிழ் சினிமாவில் எழுத்தாளனை வசனம் எழுத வைத்து கிரெடிட் கொடுக்காமல் ஏமாற்றி விடுவார்கள் என சொல்வார்கள். இவ்விசயத்தில் 74 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஒருவர் ஏமாற்றப்பட்டிருக்கிறார். அப்போது அவருக்கு வயது 21. தன் தாய்மாமன் சி.எஸ் ஜெயராமனின் சிபாரிசில் எம்.ஜி.ஆர் நாயகனாக முதன்முதலாக நடித்த ஒரு படத்தில் முதன்முதலாக வசனம் எழுத வாய்ப்பு பெற்றிருந்தார். அவர் எழுதிய கூர்மையான வசனங்கள் அப்போதே கவனம் பெற்றன:
"நான் எட்டாத பழம்
ஓஹோ வெட்டும் கத்தி நான்.
வைரக் கத்தியாக இருக்கலாம். அதற்காக வயிற்றில் யாரும் குத்திக் கொள்ள மாட்டார்கள்."
இந்த வசனங்களை தான் எழுதியதாக டைட்டில் கார்டில் போட்டுக் கொண்டு ஏமாற்றியவர் இயக்குநர் ஏ.எஸ்.ஏ சாமி. இதை அடுத்து எம்.ஜி.ஆரின் அடுத்த படமான "அபிமன்யு" எனும் படத்திலும் கலைஞர் அதே நபரால் கிரெடிட் தரப்படாமல் ஏமாற்றப்பட அவர் ஒரேயடியாக அப்போதைக்கு திரைத்துறைக்கு முழுக்குப் போட்டார்.
அவர் பெயர்: கலைஞர் கருணாநிதி
படத்தின் தலைப்பு: ராஜகுமாரி
வெளியான ஆண்டு: 1947
தகவல்: "எம்.ஜி.ஆர்", பா. தீனதயாளன்

கருத்துகள்
https://antrukandamugam.wordpress.com/2016/12/25/a-s-a-samy-storyscreenplay-writerdirector/
மு.கருணாநிதி என்ற 22 வயது இளைஞர் – அன்றைய பிரபல கர்நாடக சங்கீதம் மற்றும் திரைப்படப் பின்னணிப் பாடகராகவும், இசை அமைப்பாளராகவும் புகழ் பெற்றிருந்த சிதம்பரத்தைச் சேர்ந்த சி.எஸ்.ஜெயராமனின் அறிமுகப் பரிந்துரையின் பேரில் ஈரோட்டை விட்டு கோயம்புத்தூர் வந்து ஜூபிடரில் ஏ.எஸ்.ஏ.சாமியிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அதுவரையில் நாடக ஆசிரியராக மட்டுமே இருந்தவர் சாமி மூலமாக சினிமாவிற்கு கதை வசனம் எழுதக் கற்றுக்கொண்டு, முதன் முதலாக அவருடைய ‘ராஜகுமாரி’ படத்திற்கு வசனம் எழுதலானார்.
பின்நாளில் மு.கருணாநிதியின் சினிமா 50-வது ஆண்டின் பொன்விழாவை நடிகர் விஜயகாந்த் சென்னை மெரினா கடற்கரை சீரணி அரங்கத்தில் நிகழ்த்திக் கொண்டாடிய தருணத்தில் மு.கருணாநிதி பேசும்பொழுது, ‘சினிமாவிற்கு கதை வசனம் எழுத அண்ணன் ஏ.எஸ்.ஏ.சாமியிடம்தான் நான் கற்றுத் தேர்ந்தேன்’ என்று கூறியதுடன்கூட, அவர் தமிழகத்தின் முதல்-அமைச்சர் ஆனதும் திரைப்படக் கல்லூரியில் ‘ஸ்கிரிப்ட் – டைரக்ஷன்’ துறைக்கு அவரை ‘பிரின்ஸிபல்’ ஆக்கி மாத ஊதியம் பெறச்செய்தது மட்டும் அல்லாது, சாமி பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு, நடக்க இயலாத நிலையில் இருந்தபொழுது ‘முரசொலி அறக்கட்டளை’ மூலமாக ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி தனது ஆசானுக்குச் சிறப்புச் செய்த அன்று, சாமி சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு மேடைக்கு வந்து அந்த நன்றித் தொகையினைப் பெற்றுக்கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்!