நாம் பாசத்தில் ‘வெளிப்படையாக’ சொல்லுகிற சில விசயங்கள் அடுத்தவரை ஊசி போல சில நேரங்களில் குத்தி விடும். நேற்றைய கே.கே.ஆர் ஆட்டம் முடிந்ததும் தினேஷ் கார்த்திக்கை பேட்டி எடுத்தார். சீக்கா வழக்கம் போல மைக்கை எடுத்து “டேய் கார்த்திக் வாடா போடா டேய்” என்று ஆரம்பித்து விட்டு “நீ இத்தனைக் காலமும் உன் திறமையை வீணடித்து விட்டாய் என வருத்தம் உண்டு. ஏனென்றால் உனக்கு திறமை மிகவும் அதிகம்” என்று புலம்பினார். தினேஷ் கார்த்திக்கின் முகத்தில் எதையோ மிதித்தது போல ஒரு உணர்வு. ஏற்கனவே மோசமாக ஆடி அவுட் ஆன வருத்தமும் களைப்பும். அதில் இந்த ஆள் வேறு பழைய பல்லவியை எடுக்கிறாரே என வருத்தம் அவருக்கு.
பந்துகளை கணித்து இஷ்டத்துக்கு அடிக்கிற திறமையை பொறுத்த மட்டில் தினேஷ் கார்த்திக் கோலியை விட மேலானவர், ரோஹித்துக்கு இணையானவர்.
அதே நேரம், திறமை நிறைவேறாமல் போன விசயத்தில் கார்த்திக் ஒரு தனி சாதனையாளர். 18 வயதிலேயே இந்திய அணிக்குள் வந்து இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக சிறப்பாக ஆடி ரன்கள் அடித்து பிறகு அவருடைய பொறுமையின்மை, சமநிலையின்மை, உணர்வுக்கட்டுப்பாடின்மை (சுருக்கமாக temperament இல்லாமை) காரணமாக ஒருநாள், டெஸ்ட் அணிகளில் இருந்து விலக்கப்பட்டார். இப்போது 18 வருடங்கள் கடந்தும் இந்த டி-20 உலகக்கோப்பையில் ஆவது தனக்கு இடம் கிடைக்குமா என ஏங்கினார். ஆனால் கிடைக்கவில்லை. கார்த்திக்கின் பிரச்சனை அவர் நன்றாக ஆடும் போது அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காது, அவரிடத்தில் அவரை விட நன்றாக ஆடும் ஒருவர் வந்து விடுவார் (தோனி) அல்லது அவருக்கு வயதாகி விட்டது என ஒரு இளைஞரை அவரிடத்தில் கொண்டு வந்து விடுவார்கள் என்பது. மற்றபடி அவருக்குள்ள திறமைக்கு அவர் ஒரு சிறந்த மத்திய வரிசை மட்டையாளராக ஒருநாள், டெஸ்ட், டி-20 போட்டிகளில் ஜொலித்திருக்கலாம். தோனி எனும் ராட்சசன் குறுக்கே வந்த பின்னரும் கூட தொடர்ந்து எண் 6இல் ஆவது ஆடி ஆட்டங்களை வென்றளித்திருக்க முடியும்.
அவரால் துவக்க எண்ணில் இருந்து ஏழாவது எண் வரை நன்றாக ஆட முடியும். அவருக்கு என்றும் உடற்தகுதியில் பிரச்சனைகள் இருந்ததில்லை. அரசியல் பண்ணுவது, வம்பு தும்பு, ஒழுங்கீனம் எதுவும் இல்லை. சுமாரான கீப்பர் என்றாலும் நல்ல களத்தடுப்பாளர். ஆனால் விதியும், மதியும் அவருடைய வாழ்க்கையில் விளையாடி விட்டன.
கார்த்திக்கின் ஆட்ட வாழ்க்கையின் ஒரே சாதனை ஐ.பி.எல்லில் தொடர்ந்து ஒரு மதிப்புமிக்க மட்டையாளராக, finisherஆக இருப்பதே. ஶ்ரீகாந்தின் பாராட்டு எனும் புலம்பல் கார்த்திக்குக்கு தன் மொத்த 18 வருட கால தோல்விகளையும் டிரைலர் போட்டு காண்பித்திருக்கும். செருப்பெடுத்து சப்பென அறைந்தது போன்ற உணர்வு. முகத்தில் அந்த அதிர்ச்சியும் வருத்தமும் மறையாமல் “சார் நீங்க பத்து வருசமா இதையே தான் சொல்லிக்கிட்டு இருக்கீங்க” என கார்த்திக் பதிலளித்தார். அப்போதும் நம் ஶ்ரீகாந்துக்கு தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என விளங்க வில்லை. “உனக்கு ரொம்ப திறமை இருக்குடா. அதான் நான் பத்து வருசமா சொல்றேண்டா. நீ இந்த முறை ஐ.பி.எல் இறுதிப் போட்டியிலாவது அடிப்பியாடா? சொல்லுடா அடிப்பியாடா?” இதுவும் பாராட்டு போன்ற ஊசிக்குத்தல் தான் - அதாவது நீ எந்த முக்கிய ஐ.பி.எல் போட்டிகளிலும் ரன் அடித்ததில்லை, இம்முறையாவது அடிப்பாயா எனக் கேட்கிறார். அந்த புள்ள சாதித்தது இதில் ஒன்றில் தான், இதிலும் ஏன் இவ்வளவு விமர்சனம் வைக்க வேண்டும் மிஸ்டர் சீக்கா என எனக்குத் தோன்றியது.
அவர் இதற்குப் பதிலாக “கார்த்திக் நீ ரொம்ப திறமையானவன். எனக்கு உன் மீது நம்பிக்கை உண்டு. நீ இந்த ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் ஒரு முக்கியமான இன்னிங்க்ஸ் ஆட வேண்டும். செய்வியா?” எனக் கேட்டிருக்கலாம். ஆனால் சீக்காவுக்கு தான் வாயில் வாஸ்து சரியில்லையே.
ஏனென்று தெரியவில்லை, எப்போதும் ஒரு விமர்சனத்தை முன்னொட்டாக வைத்து பாராட்டுவது வெறும் விமர்சனத்தை விட மக்களை அதிகமாக காயப்படுத்துகிறது.

Comments