காந்தி எப்போதும் முதலாளித்துவத்தின் நலனைக் காக்கவே விரும்பினார். காந்தி இப்போது இருந்திருந்தால் நேரடியாக அதானியிடமும் அம்பானியிடமும் பேசி, ஏழைகள் நம் நாட்டின் கண்கள் என உருக்கமாய் அறிக்கை விட்டு, குற்றவுணர்வை சுரண்டி சில பல உதவிகளை செய்யக் கேட்டு "இப்போதைக்கு பொருளாதாரம் வளர்வதற்கு மக்கள் இந்த துன்பங்களை பொறுக்கணும், பெட்ரோல் விலையை குறைத்தாலோ வேலை நீக்கங்களை தடுத்தாலோ விவசாயிகளுக்கு நேரடியான நிதியுதவி செய்தாலோ சமூகத்தின் ஆன்மா கறைபட்டு விடும், ஏனென்றால் துன்பமும் ஏழ்மையுமே நம்மை உன்னதமானவர்கள் ஆக்கும்" என உரையாற்றி, கூடவே அம்பானி, அதானிகளையும் போற்றி நன்றி கூறி இருப்பார். அதாவது ரெண்டு பக்கமும் பெரிய பாதகம் வராத மாதிரி, முதலாளிகளுக்கு நட்டமோ மத்திய வர்க்கம், கீழ்த்தட்டினருக்கு மேம்பாடோ வராத மாதிரி ஒரு அரசியலைப் பண்ணுவார். இந்த status quo அரசியலைத் தான் காந்தியார் இந்தியாவின் ஆன்மாவை சுத்திகரிக்கும் பெரும்பணி எனக் கூறிக் கொண்டிருந்தார். இந்த கார்ட்டூனில் வரும் பகடி நியாயமானதே.
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

Comments