ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பையில் பனிப்பொழிவும், ஆடுதளங்களின்வினோதமான பண்பும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றன. இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து, குவிண்ட், டெக்கன்கிரானிக்கல் என பல நாளிதழ்களில், இணையதளங்களீல் இது குறித்த கட்டுரைகள் பிரசுரமாகி உள்ளன. இதுவரையிலான 14 ஆட்டங்களில் 4 ஆட்டங்களில் மட்டுமே முதலில் மட்டையாடிய அணி வென்றுள்ளதுஎன்பதே விமர்சகர்கள் சுட்டிக் காட்டும் பிரச்சனை (அதாவது 2 நவம்பர் வரை). இலங்கை-இங்கிலாந்து போட்டி நடைபெற்ற போது தமிழ்வர்ணனையில் அபினவ் முகுந்த் முதலில் மட்டையாடுகிற அணியும் இரண்டாவதாக மட்டையாடுகிற அணியும்எதிர்கொள்ளுகிற முற்றிலும் மாறுபட்ட சூழல்களை, அதனால் முதலில் பந்து வீசுகிற அணிக்கு கிடைக்கிறஅதிகமான அனுகூலங்களைப் பற்றி விவாதித்தார். ஆக இது இப்போது எல்லா தளங்களிலும் கவனம் பெற்றுவரும், ஆட்டத்தின் தரத்தை பெரிதும் பாதிக்கிற ஏற்றத்தாழ்வான நிலையாக இருக்கிறது.
இது என்ன பெரிய பிரச்சனையா என்று சிலருக்குத் தோன்றலாம். ஆனால் மாலையில் நடக்கும் போட்டிகளைக்கண்டாலே சில மணிநேரங்களில் சூழல் அடியோடு மாறுவதன் தாக்கத்தை உணர முடியும். அமீரக ஆடுதளங்கள்பொதுவாகவே மெத்தனமாக உள்ளவை. இவற்றை வேகப்படுத்த அதிகமாக நீரைத் தெளிக்கிறார்கள் களஅமைப்பாளர்கள். அங்கு வெயிலின் உக்கிரம் மிக அதிகமாக இருப்பதால் நீரின் அளவும் ஆடுதளம் காயவிடப்படும் கால அளவும் துல்லியமாக இராவிடில் ஆடுதளத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு விடும்; இப்போதுநடந்துள்ளதைப் போல, குறைவாக காய்ந்து விட்டாலோ ஆடுதளத்தின் மேற்பகுதி மட்டும் உலர்வாகவும், கீழடுக்குகள் லேசான ஈரத்துடன், சரியாக இறுகாமலும் இருக்கும். விளைவாக இத்தகைய ஆடுதளங்களில்பந்து நின்று வரும்; பவுன்ஸ் ஒன்று குறைவாக இருக்கும், அல்லது மெதுவாக துள்ளி வரும் பவுன்சாக இருக்கும். இதனால் முதலில் மட்டையாடுகிற அணிக்கு பந்தை டைம் செய்வது சிரமமாக இருக்கிறது. எதிரணி நேராகநல்ல நீளத்தில் தொடர்ந்து வீசினால் ரன்களே வராமல் மட்டையாட்ட அணிக்கு நெருக்கடி அதிகமாகிவிக்கெட்டுகள் தாமே விழும். அல்லது இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-நியுசிலாந்த் போட்டிகளில் நடந்ததுபோல முதலில் பந்து வீசும் அணிக்கு ஓரளவுக்கு தாமதமான ஸ்விங் (late swing) கிடைக்கும். ஒரு பக்கம் மட்டைக்கு வராத பந்து, இன்னொரு பக்கம் தாமதமான ஸ்விங். தடுத்தாடியே ஆக வேண்டும் எனும் அழுத்தம்மட்டையாளர்களுக்கு ஏற்படும். இதுவே இரண்டாவதாக மட்டையாட ஒரு அணி வரும் போதோஒளிவிளக்குகளின் வெளிச்சத்தினாலோ பனிப்பொழிவினாலோ ஆடுதளம் சட்டென வேகமெடுத்து விடுகிறது. ஸ்விங்கும் மறைகிறது. முழுக்க மட்டையாட்டத்துக்கு சாதகமாகிறது. விளைவாக இரண்டாவதாக மட்டையாடும் அணியால் 140-150 போன்ற இலக்குகளை விரட்டி செல்வது சுலபமாகிறது.
ஆடுதளங்கள் இப்படி “விண்ணைத் தாண்டி வருகிறேன்” திரிஷா போல கணிக்க முடியாதபடி ஆகிப் போனதன்ஒரு காரணம் ஆடுதள அமைப்பாளர்கள் இவை ரொம்ப வெயிலில் காய்ந்து வெடித்துப் போய் சுழலுக்குசாதகமாகி விடக் கூடாது என அச்சப்படுவதே. ஆனால் அவ்வாறு சுழலும் ஆடுதளங்களை அவர்கள்அமைத்திருந்தால் கூட இதை விட சுவாரஸ்யமான ஆட்டங்கள் நிகழ்ந்திருக்கும் என்று சொல்லியாக வேண்டும். அதாவது இரவு 9:30 மணிக்கு பனிப்பொழிவு துவங்கினாலும் இளகின தன்மையில் உள்ள, வெடிப்புகள்அதிகமாக கொண்ட ஒரு ஆடுதளத்தில் சுழலர்களால் முதல் பத்து ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளையாவதுவீழ்த்தி ஆட்டத்தை சமநிலையில் வைக்க முடியும்; கடைசி பத்து ஓவர்களில் மட்டையாட்ட அணியால்மீள்வருகை நிகழ்த்தும்படியாக பனிப்பொழிவு அதிகமானால் ஆட்டம் இன்னும் சுவாரஸ்மாகும். ஆனால் பந்துசுழலக் கூடாதே எனும் ஆடுதள தயாரிப்பாளர்களின் பரிதவிப்பும், அச்சமும் இந்த ஆட்டங்களை டாஸைவெல்லும் அணிக்கு சாதகமாக, ஒருதலைபட்சமாக மாற்றி விட்டன.
இதை சொல்லுகிற அதே நேரம், என்னதான ஆட்டச்சூழல் முதலில் பந்து வீசுகிற அணிக்கு சாதகமாகஇருந்தாலும் ஆடுகிற அணிகளின் திறமை, கவனம், திட்டமிடல் ஆகியவையும் வெற்றியை தீர்மானிக்கிறசங்கதிகளாக இருக்கின்றன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். நவம்பர் ஒன்றாம் தேதி நடந்த இலங்கை-இங்கிலாந்து போட்டி இதற்கு ஒரு சிறந்த உதாரணம். இப்போட்டியில் இங்கிலாந்து டாஸை இழந்து முதலில்மட்டையாடியது. முதல் ஆறு ஓவர்களில் ரன்களை சரளமாக அடிக்க அது திணறியது, மூன்றுவிக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஆனால் அதன் பிறகு துவக்க மட்டையாளர் ஜோஸ் பட்லரும்அணித்தலைவர் மோர்கனுமாக ஒரு நிதானமான கூட்டணியை உருவாக்கி 13 ஓவர்கள் ஆடினர். 112 ஓட்டங்களை அவர்களுடைய கூட்டணி சேர்த்தது. பட்லர் சரியான நேரத்தில் அடித்தாடத் துவங்கி 130க்கு முடியவேண்டிய இன்னிங்ஸை 163 வரை கொண்டு சென்றார். அவர் 67 பந்துகளில் அடித்த 101 உலக கிரிக்கெட்டில்டி20 போட்டிகளில் ஆடப்பட்ட தலைசிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று.
இதைச் சொல்லுகிற அதே நேரம் இந்த போட்டியில் இலங்கை பந்து வீசும் போதே ஆச்சரியமாக முதல் 10 ஓவர்களுக்குப் பிறகு சிறிது பனிப்பொழிவு தலைகாட்டத் தொடங்கியது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அத்தோடு இலங்கையின் வேகவீச்சாளர்களுக்கு கட்டுப்பாடோ நிதானமோ இல்லாமல் போக அவர்களுடையகுழப்பத்தையும் தடுமாற்றத்தையும் பட்லர் நன்றாக பயன்படுத்திக் கொண்டார். இங்கிலாந்து பந்து வீச வந்தபோதும் பனிப்பொழிவு இருந்தது. ஆனால் அவர்கள் சரியான நீளத்தில் திசையில் தொடர்ந்து வீசி பனிப்பொழிவுஅதன் உச்சத்தை எட்டும் இரவு பத்தரை மணிக்குள் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டனர். அதன் பிறகுஇலங்கையின் அணித்தலைவர் ஷனகாவும், ஆல்ரவுண்டர் ஹசரங்காவும் ஒரு சமயோஜிதமான கூட்டணியைஅமைத்த போது இலக்கு அவர்களுக்கு எட்டும் தொலைவிலே இருந்தது. பந்தும் வேகமாக மட்டைக்கு வரசிக்ஸர் அடிப்பது சுலபமாக இருந்தது. இவர்களைப் போல இலங்கையின் முதல் நான்கு மட்டையாளர்களும்ஆடியிருந்தால் இப்போட்டியை இலங்கை சுலபத்தில் வென்றிருக்க முடியும். ஆனால் வெல்ல வேண்டியநிலையில் இருந்து 137க்கு ஆல் அவுட் ஆகியது இலங்கை.
ஆக இலங்கை-இங்கிலாந்து போட்டி ஒன்றைக் காட்டுகிறது - என்னதான் ஆட்டச்சூழல் இரண்டாவதாகமட்டையாடுகிற அணிக்கு சாதகமாக இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக முதல் மூன்றுஎண்களுக்குள் ஆடும் மட்டையாளர்கள் புத்திசாலித்தனமாக நிதானமாக நீடித்தாட வேண்டும். குறைந்தது ஒருஅரை சதமாவது அடித்து ஒரு கூட்டணியை அமைக்க வேண்டும். சில நேரம் தேர்வுகளின் போது கண்காணிக்கவரும் ஆசிரியர்கள் காப்பி அடிக்க விட்டு விடுவார்கள். மாணவர்கள் பிட்டுகளை வெளியே எடுப்பார்கள். ஆனால்எந்த கேள்விக்கு எந்த விடை என்று தெரியாமல் திணறுவார்கள். விளைவாக என்னதான் வாய்ப்பளித்தாலும்அதை பயன்படுத்தி தேர்வடையவோ நல்ல மதிப்பெண் பெற முடியாமல் போய் விடும். சாதகமான சூழலிலும்சொதப்பிய இலங்கையின் ஆட்டம் இதையே எனக்கு நினைவுபடுத்தியது. அதே நேரம், இங்கிலாந்தின்அணுகுறையில் இருந்து இந்தியாவைப் போன்ற மற்ற அணிகள் கற்றுக் கொள்ள ஒரு முக்கிய பாடம் உள்ளது.
என்னதான் டாஸை இழந்தாலும் முடிந்தளவுக்கு போராடினால், நிதானமாக சமயோஜிதமாக ஆடி 150க்கு மேல்ஒரு இலக்கை அமைத்தால் அடுத்து பந்து வீசும் போது பனிப்பொழிவு இருந்தாலும், சரியான நீளத்தில்திசையில் தொடர்ந்து வீசி நெருக்கடியை ஏற்படுத்த முடியும், எதிரணி தவறுகள் செய்யும் பட்சத்தில்விக்கெட்டுகளும் கொத்தாக விழும். சிறப்பான களத்தடுப்பும் அவசியம். டாஸை இழந்ததும் தலையில்கைவைத்து உட்கார வேண்டியதில்லை.

Comments