Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பிளேஷ்பேக்



தமிழ் சினிமாவில் மிக மிக மோசமாக பயன்படுத்தப்படும் உத்தி பிளேஷ் பேக். பெரும்பாலான நல்ல படங்களில் இந்த பிளேஷ்பேக் எனப்படும் தொப்பை நம்மை தொந்தரவு பண்ணுவதில்லை. மோசமான படங்கள் பலவற்றில் பிளேஷ்பேக்கை தூக்கி விட்டால் திரைக்கதை வடிவமும் சிக்கென்று இருக்கும். கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் வெளிவந்த ரஜினி படங்களில் பிளேஷ்பேக் ஆரம்பித்தாலே நான் தூங்கி விடுவேன். எனக்கு மிகவும் பிடித்த படமான “காலாவில்” அந்த பிளேஷ்பேக்கை அனிமேஷனில் காட்டி சமாளித்து விட்டார்கள். ஆனாலும் அந்த ஹூமா குரேஷியின் காதல் பகுதி கூட செம போர் தான். “பாட்ஷாவில்” கூட பிளேஷ் பேக் பகுதி செம மாஸாக இருக்கும் என்றாலும் நான் அதை பின்கதை அளவுக்கு வெகுவாக ரசிக்கவில்லை. “தளபதியில்” முதல் ஐந்து நிமிடத்திலே கடந்த காலத்தை முடித்து விட்டு கதைக்கு வந்து விடுவார் மணிரத்னம். “முள்ளும் மலரும்” படத்துக்கு ஒரு மோசமான இயக்குநர் திரைக்கதை எழுதி இருந்தால் படத்தில் ஒரு அரை மணி நேரத்தை குழந்தை ரஜினியும் குழந்தை ஷோபாவுமாக எப்படி வளர்ந்தார்கள் என்பதை பாடலுடன் காட்டி இருப்பார்கள். ஆனால் அதற்கு அவசியமே இல்லை என மகேந்திரன் அறிந்திருந்தார் - ரஜினியையும் அவருடைய தங்கையும் நடந்து கொள்வதைக் கண்டதுமே நாம் அவர்களுடைய கடந்த காலத்தை ஊகித்து விட முடிகிறது.

 

“பேட்ட” படத்திலும் பிளேஷ் பேக் காட்சிகள் ஒரு ஸ்பீட் பிரேக்கர் தான். பிளேஷ் பேக் விசயத்தில் மிக மட்டமான உதாரணம் “அண்ணாத்தெ”.

 

“கஜினியில்” மட்டும் தான் எனக்குத் தெரிந்து பிளேஷ் பேக் காட்சிகள் நேரடியான மற்ற காட்சிகளை விட வெகுசுவாரஸ்யமாக, உயிரோட்டமாக இருக்கும். மொட்டை சூர்யா வந்ததும் படம் அலுப்பூட்டும். (ஆனால் “மொமெண்டோவில்” முழுக்கதையும் நான்-லீனியரில் செம திகிலாக செல்லும்.)

 

எனக்குத் தெரிந்து தமிழின் கறுப்பு வெள்ளைப் படங்களில் பிளேஷ்பேக் அனேகமாக இல்லை. முன் கதையை படத்தின் துவக்கத்திலே சொல்லி விடுவார்கள். பாலசந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா படங்களிலும் இவ்வளவு பெரிய அலுப்பூட்டும் பிளேஷ்பேக்குகளைப் பார்த்த நினைவில்லை. அதன் பின்னர் வேறெப்போதோ தான் இந்த ‘பிளேஷ்பேக் பைத்தியம்’ நம் இயக்குநர்களுக்கு பிடித்திருக்கிறது.

 

பிளேஷ்பேக்கை 15-20 நிமிடத்திற்கு (அல்லது அண்ணாத்தெவில் போல ஒன்றரை மணிநேரத்துக்கு) தனி எபிசோடாக வைக்காமல் சில வசனங்கள் வழியாக சுருக்கமாக சொல்வது ஒரு நல்ல உத்தி. ஏனென்றால் திரைப்படம் - நாடகம், சிறுகதையைப் போன்று - ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் நடக்கிற கதை. ஒரு நாளுக்குள் நடக்கிற திரைக்கதை சுமாராக எழுதப்பட்டு எடுக்கப்பட்டாலும் விறுவிறுப்பாக இருப்பது இதனாலே. கதை நடக்கும் காலம் நாட்களாக, மாதங்களாக விரிய விரிய கதை சோர்வடைந்து விடும். ஆகையால் கதையோட்டத்தின் ஊடே வசனம் வழியாக முன்கதை / பிளேஷ்பேக் சொல்லப்படும் போது வடிவ ஒழுக்கம் கெடுவதில்லை. மிஷ்கினின் “ஓநாயும் ஆட்டுக்குட்டிகளும்” இதற்கு சிறந்த உதாரணம். ஏன் ஓநாய் அந்த குடும்பத்தைக் காப்பாற்ற பாடுபடுகிறான் என்பதை அந்த உருக்கமான monologueஇல் மிஷ்கினின் பாத்திரம் சொல்லும் போது ஒட்டுமொத்த திரையரங்கும் உறைந்து போயிருந்து அதைக் கேட்டதை கண்டேன்.

 

“மூடர் கூடம்” படத்தில் பிளேஷ்பேக்கை மனிதர்களின் போலியான சுயவரலாற்றை பகடி செய்ய பயன்படுத்தி இருப்பார்கள். அதில் அந்த Great Dane நாய்க்கு கூட ஒரு பிளேஷ் பேக் வைத்து இயக்குநர் நவின் அதகளம் பண்ணி இருப்பார்.

 

“கைதியில்” பிளேஷ்பேக்கே இல்லை என்பது படத்தின் நாயகனுக்கு ஒரு தனி வசீகரத்தை அளித்தது.

 

ஒரு அதிநாயகன், சீரியல் கில்லர், பயங்கரவாதி போன்ற பாத்திரங்களின் வாழ்க்கையை மட்டும் பேசும் படங்களில் தான் பிளேஷ்பேக் செமையாக வேலை செய்கிறது. உ.தா., “பேட்மேன்” தொடர்வரிசைப் படங்கள். வில்லன் “ஜோக்கரைப்” பற்றின அந்த படத்தில் கூட முன்கதை அவ்வளவு சிறப்பாக இருந்தது. தமிழில் ராமின் “கற்றது தமிழ்”, “தரமணி” போன்ற படங்களில் விளிம்பில் வாழுகிற ஒரு சாமான்ய மனிதன் தான் ஏன் அவநம்பிக்கை மிக்கவனாக, பொறுக்கியாக மாறினேன் என அவனுடைய குரலிலே சொல்லுவதாக அமையும் பிளேஷ் பேக் காட்சிகள் சிறப்பாக இருந்தன. ஆனால் இதில் ஒரு தவிர்க்க முடியாத விதி கதை முழுக்கவே அந்த எதிர்மறையான, சைக்கோவான பாத்திரத்தைப் பற்றி இருக்க வேண்டும் என்பது. அவனை ஒரு வில்லனாக மாற்று ஹீரோவுக்கு அதிக இடமளிக்கும்பட்சத்தில் அவனுக்கான வில்லன் பிளேஷ்பேக் எடுபடுவதில்லை. இதற்கு மிஷ்கினின் “சைக்கோ” ஒரு சிறந்த உதாரணம்.

இதுவே உறவுகளைப் பற்றின, தனிமனித சிக்கல்களைப் பேசுகிற தமிழ் படங்களில் பிளேஷ்பேக் வைத்தால் அது கதையை தொய்வாக்கி விடுகிறது.   

 

சிவசங்கரியின் நாவல் ஒன்றைத் தழுவி மலையாளத்தில் பத்மராஜன் “இந்நலே” (நேற்று) என்றொரு படமெடுத்தார். ஒரு இளம்பெண்ணுக்கு விபத்தில் தன் கடந்த காலம் முழுக்க மறந்து போகிறது. தன் பெயரென்ன, ஊரென்ன, திருமணமாகி விட்டதா எதுவும் நினைவில்லை. ஒரு புதிய பெயருடன் அடையாளத்துடன் புதிய வாழ்க்கை ஒன்றை அமைத்துக் கொள்கிறாள். தன்னைக் காப்பாற்றிய இளம் மருத்துவரை காதலித்து அவரைத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறாள். திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் சில புகைப்படங்களுடன் அவளைத் தேடி வருகிறார். அப்பெண் தன்னுடைய மனைவியாக இருக்கக் கூடும் எனக் கோரி அவளைப் பார்த்து ஊர்ஜிதம் செய்வதற்காக காத்திருக்கிறார். அப்போது அவர் அவளுக்கு திருமணப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்கிறார். அவளுடைய படங்களையும் அங்கு காண்கிறார். அவருக்கு எதுவோ புரிந்து போகிறது. அப்பெண் தன்னைப் பார்க்க வருமுன் அவர் கிளம்பி சென்று விடுகிறார். பிளேஷ்பேக்கை இப்படி சொல்லாமலே சொல்லி படத்தை சுவாரஸ்மாக, விறுவிறுப்பாக பத்மராஜன் எடுத்திருப்பார். பிளேஷ்பேக் மட்டும் வந்து விட்டால் அப்படம் காணாமல் போய் விடும். ஒரு மனிதனின் வாழ்வில் பிளேஷ்பேக் காணாமல் போய்விட்டால், அது கிட்டத்தட்ட கிடைக்க வாய்ப்பு அமைந்து பின்னர் நிகழாது போனால் என்னவாகும் என்பதே அப்படத்தின் ஒற்றை வரி என்று கூறலாம்.

 

Lion என்றொரு மிகவும் உணர்வுபூர்வமான படம் இருக்கிறது. A Long Way Home என்கிற வாழ்க்கைக் கதையை தழுவி எடுக்கப்பட்டு 2016இல் வெளியான படம் இது. (நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது.) சரூ எனும் ஒரு ஐந்து வயது ஏழைச் சிறுவன் ரயில் நிலையத்தில் வைத்து தொலைந்து போகிறான். கொல்கொத்தாவில் அவன் தெருவிலும் அனாதை இல்லத்திலும் வாழ்ந்து பின்னர் ஆஸ்திரேலியாவில் உள்ள தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்டு அங்கு செல்கிறான். காலப்போக்கில் அவன் தன்னுடைய சிறுவயது பின்னணியை மறந்து போகிறான். இருபது வருடங்களுக்குப் பிறகு நண்பர்களுடனான ஒரு விருந்தில் ஜெலேபி சாப்பிடும் போது அவனுக்கு சட்டென்று தன்னுடைய கடந்த கால வாழ்க்கை சன்னமாக மனதில் நிழலாடுகிறது. ஆனால் ஒரு பிரச்சனை - அவனுக்கு எல்லாம் நினைவிருக்கிறது, சொந்த ஊரின் பெயரைத் தவிர. அதைக் கண்டுப்பிடித்தால் மட்டுமே சொந்த தாயையும் சகோதரனையும் அவன் கண்டுபிடிக்க முடியும். அவன் கூகிள் எர்த் இணையதளத்தை பயன்படுத்தி பல மாதங்களாகத் தேடி தன் ஊரைக் கண்டுபிடித்து சொந்த தாயைப் போய் சேர்வதே மிச்ச கதை. ஒரு குழந்தையின் நினைவில் பிளேஷ்பேக்கு இடமில்லை என்பதை வைத்தே மொத்த கதையும் பின்னப்பட்டிருக்கிறது. அந்த நினைவு மட்டும் இருந்தால் அக்கதையே இல்லை.

பிளேஷ்பேக் என்பதே பழைய நினைவை மீட்பது தானே! ஒருவேளை ஒரு கணப்பொழுதில் நாம் காணாமல் விட்ட ஒரு சம்பவம் ஒருவருடைய வாழ்க்கையை தலைகீழாக்கினால், ஒருவருடைய மரணத்துக்கு வழிவகுத்தால், அந்த இல்லாமல் போன நினைவு நம்மை பின்னர் துரத்தினால் என்னவாகும் என்பதே மிஷ்கினின் “பிசாசு”. தான் கவனிக்காமல் விட்ட அந்த நினைவை அவன் மீட்டெடுக்கிற பிளேஷ்பேக்கே அப்படத்தின் இறுதி திருப்புமுனை.

 

பிளேஷ்பேக் அடிப்படையில் நாவலுக்கான உத்தி. நாவலில் அதை எப்படி வேண்டுமெனிலும் நாம் பயன்படுத்த முடியும். முன்னுக்குப் பின்னாக காலத்தை பல நூறு பக்கங்களை கலைத்து அடுக்க முடியும். அது கதையோட்டத்தை பெரிதாக பாதிக்காது. புரூஸ்டின் In Search of Lost Time நாவல் ஒவ்வொரு நிமிடத்துக்குள்ளும், அதிலுள்ள வினாடிகளுக்கும் மடிப்பு மடிப்பாக பல நினைவுகளை பிளேஷ்பேக்கில் சொல்ல முயல்கிற படைப்பு. வெர்ஜினியா வூல்பின் Mrs Dalloway நாவலின் நனவோடை உத்தியும் சங்கிலித் தொடர் பிளேஷ்பேக்குகளின் பாணியே. ஆச்சரியமாக, தல்ஸ்தாயின் “போரும் அமைதியும்” எனும் பிரமாண்ட நாவலில் பிளேஷ்பேக்குள் மிக மிக சொற்பமே. இதையே “அன்னா கரெனினாவுக்கும்” சொல்லலாம். ஆனால் நாவலைப் போல சிறுகதையும், திரைக்கதையும் பிளேஷ்பேக்குக்காக உருவாக்கப்பட்ட வடிவங்கள் அல்ல - அவற்றில் பிளேஷ் பேக்கை பயன்படுத்துவது கத்தி மீது நடப்பதைப் போன்ற காரியம்.

நன்றி: சமயம் டாட் காம்


Comments

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

சாகும்வரை பொழுதுபோக்கு

  "Indeed, we may have reached the point where cosmetics has replaced ideology as the field of expertise over which a politician must have competent control." - Amusing Ourselves to Death, Neil Postman "ஒரு அரசியல் தலைவர் முழுமையான ஆளுகை கொண்டிருக்க வேண்டும் என நம்பிய கருத்தியலை வெளித்தோற்றம் பதிலீடாக்கி விட்ட ஒரு புள்ளியை நாம் இன்று எட்டி விட்டிருக்கிறோம்." "சாகும்வரை பொழுதுபோக்கு", நீல் போஸ்ட்மேன்