ஏப்ரல் மாத "பேசும் புதிய சக்தியில்" கவிதா ஜெயகாந்தன் என்பவர் எழுதியுள்ள தலையங்கத்தின் ஒரு பகுதி இது. இதில் அரசு வேலை வாய்ப்புகளைப் பெருக்க என்னவெல்லாம் செய்யலாம் என அவர் தரும் பரிந்துரைகளில் ஒன்று கூரியர் சேவை. இதன் முடிவில் அவர் சொல்லுகிற விசயம் தான் என்னை வெகுவாகக் கவர்ந்தது - மருந்து, உணவு ஆகியவற்றை வீட்டுக்கே டெலிவரி செய்யும் சேவையை தமிழக அரசே ஆரம்பிக்கலாம் என்கிறார்.
தமிழக அரசு தம்வசம் உள்ள உள்கட்டமைப்பைக் கொண்டு இப்படி ஒன்றை தொடங்கினால் ஸொமோட்டோ போன்ற நிறுவனங்களை அடித்து காலி பண்ணி அந்த இடத்தை சுலபத்தில் பிடிக்க முடியும். அதன் மூலம் அரசின் வருமானம் பெருகும், ஆயிரக்கணக்கானோருக்கு அரசு வேலை கிடைக்கும். இன்றைய தனியார் டெலிவரி சேவை வேலையில் உள்ளோருக்கு இல்லாத பணி பாதுகாப்பு அவர்களுக்கு இருக்கும். டுரோன் மூலம் கூட சேவையை வழங்கலாம். அரசு சேவை வண்டிகளுக்கு டிராபிக்கில் நிற்காமல் செல்லும் சலுகையை வழங்கி மற்ற நிறுவனங்களை விட வேகமாக வாடிக்கையாளரிடம் போய் சேரலாம்; இச்சேவையை பயன்படுத்துவோருக்கு வரி சலுகை வழங்கி ஊக்கப்படுத்தலாம். அரசு நிதியில் முன்னணி நடிகர்களை வைத்து எல்லா இடங்களிலும் விளம்பரம் பண்ணலாம். ஒரு கட்டத்தில் உணவகங்களைக் கூட இதற்காக நடத்தி உணவை மக்களுக்கு வழங்க முடியும்!
இப்படியெல்லாம் செய்து சந்தையில் முதலிடம் பிடிக்கலாம்.
சொமாட்டோவின் வருடாந்திர வருமானம் 90 பில்லியன். அதில் ஒரு சிறிய பகுதியை அரசால் சம்பாதிக்க முடிந்தாலே அது நிதிச்சுமையை வெகுவாகக் குறைக்கும்.
இந்த பில்லியன் டாலர்கள் தனியாரிடம் போனால் அதை அவர்கள் கறுப்புப்பணமாக்கி, கிரிப்டோவாக்கி வெளிநாடுகளில் பதுக்குவார்கள். அரசியல்வாதிகளுக்கு கையூட்டமாக அளிப்பார்கள். தனியார் தான் ஊழலின் பிறப்பிடமே. ஆகையால் லாபம் அரசிடம் நிதியாக சேர்வதே நல்லது. அதற்கு ஒரு கணக்குவழக்கு இருக்கும். அதை அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யலாம். தவறிருந்தால் நாம் தட்டிக் கேட்கலாம். ஆனால் தனியாரிடம் போய் கேட்க முடியுமா? முடியாது.
மேலும் இத்தகைய திட்டங்களை வெற்றிகரமாக நடத்தினால் வரியை அரசால் பாதியாக குறைக்க முடியும். (வரியில்லாத ஆட்சி கூட சாத்தியம் தான்.) முழுக்க முழுக்க வரியை நம்பி இருப்பது சோம்பேறி அரசு. உற்பத்தியில் ஈடுபடாத அரசு சமத்துவத்தில் நம்பிக்கை இல்லாத அரசு.
தமிழக அரசு ஒருநாள் இத்திசையில் பயணிக்க வேண்டும். கவிதாவைப் போன்ற பத்திரிகை ஆசிரியர்கள் இத்தகைய சோசலிச பரிந்துரைகளை தொடர்ந்து வழங்க வேண்டும். பேசப் பேசத் தான் மாற்றம் வரும்.
Comments