முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு நல்ல பரிந்துரை


ஏப்ரல் மாத "பேசும் புதிய சக்தியில்" கவிதா ஜெயகாந்தன் என்பவர் எழுதியுள்ள தலையங்கத்தின் ஒரு பகுதி இது. இதில் அரசு வேலை வாய்ப்புகளைப் பெருக்க என்னவெல்லாம் செய்யலாம் என அவர் தரும் பரிந்துரைகளில் ஒன்று கூரியர் சேவை. இதன் முடிவில் அவர் சொல்லுகிற விசயம் தான் என்னை வெகுவாகக் கவர்ந்தது - மருந்து, உணவு ஆகியவற்றை வீட்டுக்கே டெலிவரி செய்யும் சேவையை தமிழக அரசே ஆரம்பிக்கலாம் என்கிறார்.

தமிழக அரசு தம்வசம் உள்ள உள்கட்டமைப்பைக் கொண்டு இப்படி ஒன்றை தொடங்கினால் ஸொமோட்டோ போன்ற நிறுவனங்களை அடித்து காலி பண்ணி அந்த இடத்தை சுலபத்தில் பிடிக்க முடியும். அதன் மூலம் அரசின் வருமானம் பெருகும், ஆயிரக்கணக்கானோருக்கு அரசு வேலை கிடைக்கும். இன்றைய தனியார் டெலிவரி சேவை வேலையில் உள்ளோருக்கு இல்லாத பணி பாதுகாப்பு அவர்களுக்கு இருக்கும். டுரோன் மூலம் கூட சேவையை வழங்கலாம். அரசு சேவை வண்டிகளுக்கு டிராபிக்கில் நிற்காமல் செல்லும் சலுகையை வழங்கி மற்ற நிறுவனங்களை விட வேகமாக வாடிக்கையாளரிடம் போய் சேரலாம்; இச்சேவையை பயன்படுத்துவோருக்கு வரி சலுகை வழங்கி ஊக்கப்படுத்தலாம். அரசு நிதியில் முன்னணி நடிகர்களை வைத்து எல்லா இடங்களிலும் விளம்பரம் பண்ணலாம். ஒரு கட்டத்தில் உணவகங்களைக் கூட இதற்காக நடத்தி  உணவை மக்களுக்கு வழங்க முடியும்!
இப்படியெல்லாம் செய்து சந்தையில் முதலிடம் பிடிக்கலாம். 

சொமாட்டோவின் வருடாந்திர வருமானம் 90 பில்லியன். அதில் ஒரு சிறிய பகுதியை அரசால் சம்பாதிக்க முடிந்தாலே அது நிதிச்சுமையை வெகுவாகக் குறைக்கும்.

இந்த பில்லியன் டாலர்கள் தனியாரிடம் போனால் அதை அவர்கள் கறுப்புப்பணமாக்கி, கிரிப்டோவாக்கி வெளிநாடுகளில் பதுக்குவார்கள். அரசியல்வாதிகளுக்கு கையூட்டமாக அளிப்பார்கள். தனியார் தான் ஊழலின் பிறப்பிடமே. ஆகையால் லாபம் அரசிடம் நிதியாக சேர்வதே நல்லது. அதற்கு ஒரு கணக்குவழக்கு இருக்கும். அதை அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யலாம். தவறிருந்தால் நாம் தட்டிக் கேட்கலாம். ஆனால் தனியாரிடம் போய் கேட்க முடியுமா? முடியாது.

மேலும் இத்தகைய திட்டங்களை வெற்றிகரமாக நடத்தினால் வரியை அரசால் பாதியாக குறைக்க முடியும். (வரியில்லாத ஆட்சி கூட சாத்தியம் தான்.) முழுக்க முழுக்க வரியை நம்பி இருப்பது சோம்பேறி அரசு. உற்பத்தியில் ஈடுபடாத அரசு சமத்துவத்தில் நம்பிக்கை இல்லாத அரசு. 

தமிழக அரசு ஒருநாள் இத்திசையில் பயணிக்க வேண்டும். கவிதாவைப் போன்ற பத்திரிகை ஆசிரியர்கள் இத்தகைய சோசலிச பரிந்துரைகளை தொடர்ந்து வழங்க வேண்டும். பேசப் பேசத் தான் மாற்றம் வரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...