முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"ஜெயஜெய ஜெயஜெய ஹெ"


அந்த பிரசித்தமான அந்த வடிவேலு-கோவை சரளா நகைச்சுவைக் காட்சியுடன் 90s ரோஹிணி, ரேவதி பாணி பெண்ணிய காட்சிகளையும் சேர்த்து மிக்ஸியில் ஓட்டினால் இந்த படம் வந்துவிடுகிறது.

இந்த படத்தின் பலம் கடைசி வரை வரும் இயல்பான செமையான டைமிங் கொண்ட நகைச்சுவை. நகைச்சுவையை எடுத்துவிட்டால் இபடத்தில் ஒன்றுமே இல்லை. 
அந்த கராத்தே சண்டையை எடுத்துக் கொள்வோம் - யாராவது யுடியூபில் பார்த்து இந்தளவுக்கு கராத்தேயில் நிபுணராக முடியுமா? வாய்ப்பே இல்லை. அதே போல தனக்கு எந்த அனுபவமும் இல்லாத கறிக்கோழி தொழிலில் நாயகி களமிறங்கி பத்து நொடிகளில் தன் கணவனையே அதில் முறியடிப்பதெல்லாம் ரொம்ப ஓவராக, எதார்த்தத்துக்குப் புறம்பாக இருக்கிறது.

 பொதுவாக நகைச்சுவைப் படங்களின் முடிவில் ஒன்று வலுவான சமூகப்பகடி இருக்க வேண்டும் - "சூது கவ்வும்" போல. அல்லது கதாபாத்திரங்கள் தம் குறையை உணர்ந்து திருந்த வேண்டும் அல்லது உணரவாவது வேண்டும் - கமல்-கிரேஸி மோகன் டைப் நகைச்சுவை படங்களைப் போல. முதலாவதை அரிஸ்டோபேனஸ் பாணி இன்பியல் என்றும் இரண்டாவதை மியாண்டர் பாணி இன்பியல் என்றும் பழங்கால கிரேக்க இன்பியல் ஆசிரியர்களின் பெயரை வைத்து அழைப்பார்கள். உலகம் முழுக்க பின்பற்றப்படும் பாணிகள் இவையே. இப்படம் முதலாவது பாணியில் எடுக்கப்பட்டது என்றாலும் இதன் முடிவு நகைச்சுவையாக பகடியாக இல்லை, விஜயசாந்தி ஸ்டைலில் இருக்கிறது என்பது ஒரு முக்கிய குறை.

இன்னொரு பிரச்சினை இதன் கருத்தியலில் உள்ளது:

நீதிமன்றத்தில் நீதிபதி "திருமண உறவில் ஒரு பெண்ணுக்கு மிகவும் அவசியப்படுவது நீதியும் சமத்துவமும்" என்கிறார். இதைப் போலதொரு பொய்யை வேறொங்கும் காண முடியாது.  நீதியும் சமத்துவமும் இந்த உலகில் எங்காவது காணக் கிடைக்கிறதா? வேலையிடத்தில், சமூகத்தில், ஏன் நீதிமன்றத்தில் கூட? உங்களிடம் குறைந்தது 50,000 இல்லாமல் ஒரு வருடம் ஒரு வழக்கை நடத்த முடியுமா? ஏழையும் பணக்காரனும் அங்கு ஒன்றா? இந்த இடங்களில் நாம் நீதியும் சமத்துவமும் இல்லாமல் நிம்மதியாக மகிழ்ச்சியாக செயல்படுகிறோமே எப்படி? மனிதனுக்குத் தேவை அடிப்படையில் பணம், அதிகாரம் இரண்டுமே. இவை நீதியையும் சமத்துவத்தையும் தருவதில்லை, மாறாக இரண்டையும் கோராமல் இருக்கச் செய்கின்றன! இந்த படத்தில் கூட நாயகிக்கு நீதியையும் சமத்துவத்தையும் அவளுடைய அம்மாவோ அப்பாவோ வழங்குவதில்லை. அவளுக்கு அவர்களிடம் ஏன் கொலைவெறி வருவதில்லை? ஏனென்றால் அவளுடைய பிரச்சினை சமத்துவமின்மை அல்ல. உண்மையில் அவளுடைய பிரச்சினை சுயமரியாதை மறுக்கப்படுவதே. அதற்குக் காரணம் படிக்கவும் வேலை செய்யவும் வாய்ப்பு மறுக்கப்படுவது. நீதி, சமத்துவம் வேறும் சுயமரியாதை வேறு. உதாரணமாக, சாதியமைப்புக்குள்ளும் நாம் சுயமரியாதையை தக்க வைக்க முடியும் (பரஸ்பரம் மரியாதையை காப்பாற்ற முடிந்தால், திமிரில்லாமல் இருந்தால்), ஆனால் நீதியையும் சமத்துவத்தையும் அடைய முடியாது (மாற்றுசாதியில் மணமுடிக்க வாய்ப்பு இல்லாததால்). இந்த வித்தியாசம் முக்கியமானது - சமத்துவமின்மைக்குள் பேணப்படும் சமத்துவமே நாம் நாடுவது.
 அடுத்து, அவள் தனக்கு நேசம் தோன்றாத ஒரு ஆணுடன் வாழ நிர்பந்திக்கப்படுகிறாள், எவ்வளவு முயன்றும் அவன் ஒரு மரியாதைக்கும் அன்புக்கும் உரியவனாக இல்லை. அதனாலே அவள் அவனை விட்டு செல்கிறாள். எப்படிப் பார்த்தாலும் அவன் அருவருக்கத்தக்க சுபாவம் கொண்டவனாக இருக்கிறான். அவன் மட்டுமல்ல இப்படத்தில் எல்லா ஆண்களுமே. ஆண்கள் கனிவும் பண்பும் கொண்டவர்களாக மாறினால் பெண்களை அவர்கள் சமத்துவத்துடன் நடத்துவார்கள் என எந்த உறுதியும் இல்லை. காவல் நிலையத்தில் கூடத்தான் பண்புடன் மரியாதையுடன் பேசுவார்கள். ஆனால் அது காவலர்களின் உண்மையான நிறம் அல்லவே! ஒரு வழக்கில் சிக்கிக் கொண்டால் அவர்கள் பேசும் விதமே மாறிவிடும். பணத்தைக் காட்டினால் இன்னொரு விதமாகப் பேசுவார்கள். ஒரு பெண்ணிடம் பொதுவெளியில் மரியாதையாகப் பழகும் ஒருவன் அவள் ஒரு பாலியல் தொழிலாளி என அறிந்தால் வேறுவிதமாகப் பேசுவான், நடத்துவான். ஏன்? இந்த கட்டமைப்பு அதைத்தான் கோருகிறது. ஆக, பணமும் அதிகாரமும் சமூகக்கட்டமைப்புமே ஒருவரது நடத்தையும் தீர்மானிக்கின்றன.  ஆண்களுடைய பிரச்சினையும் இதைப் போல பண்பான நடத்தை அல்ல, அவர்கள் செயல்படும் சமூகக்கட்டமைப்பும் அங்கு செயல்படும் அதிகாரமுமே பிரச்சினை ஆகின்றன. வெளியில் சாதி பாராத ஒருவர் தன் சாதியினர் அதிகமாக உள்ள இடத்தில் சாதிய சிந்தனையை தன்னை அறியாது வரித்துக் கொள்வார். சமத்துவத்தையும் சுயமரியாதையையும் குழப்புபவர்கள் இந்த நுட்பமான சமூகவியல் காரணிகளை கவனிக்கத் தவறுகிறார்கள்.

இந்த குழப்பம் இருப்பதாலே கராத்தே கற்று, சண்டை போட்டு சொந்தமாக வியாபாரம் செய்து (அதாவது தன் கணவனை போலச் செய்து அவனையும் அவ்வழி வென்று) நாயகி நீதியையும் சமத்துவத்தையும் பெற்றுவிட்டதாக படம் தட்டையாக சித்தரிக்கிறது. மனைவியின் கருத்தைக் கேட்பது, அவளை அடிக்காமல் கனிவாக நடத்துவதே பெண்ணியம் எனக் காட்டுகிறது. ஒரு மரபான சமூக அமைப்பில் ஒரு படிநிலை இருக்கிறது. அங்கு நீங்கள் உத்தமமாக இருந்தாலும் ஒருவர் மற்றவரை நசுக்கியே ஆக வேண்டும். அது மென் அதிகாரமாகவோ வன் அதிகாரமாகவோ இருந்தே தீரும். கணவன் அதிகாரத்தை கைக்கொள்ளாவிடில் அதை மனைவி எடுத்துக் கொண்டு கணவனை நசுக்குவாள். இதுவே எதார்த்தம். 

ஆனால் மசாலா சினிமா என்பது கண்ணைத் திறந்து காணும் ஒரு கனவு அல்லவா! அதனால் இயக்குநர்கள் இந்தளவுக்குத் தான் நுண்ணுணர்வுடன் இருக்க முடியும். என்ன வடிவேலுவுக்கு கிரெடிட் கொடுத்திருக்கலாம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...