அந்த பிரசித்தமான அந்த வடிவேலு-கோவை சரளா நகைச்சுவைக் காட்சியுடன் 90s ரோஹிணி, ரேவதி பாணி பெண்ணிய காட்சிகளையும் சேர்த்து மிக்ஸியில் ஓட்டினால் இந்த படம் வந்துவிடுகிறது.
இந்த படத்தின் பலம் கடைசி வரை வரும் இயல்பான செமையான டைமிங் கொண்ட நகைச்சுவை. நகைச்சுவையை எடுத்துவிட்டால் இபடத்தில் ஒன்றுமே இல்லை.
அந்த கராத்தே சண்டையை எடுத்துக் கொள்வோம் - யாராவது யுடியூபில் பார்த்து இந்தளவுக்கு கராத்தேயில் நிபுணராக முடியுமா? வாய்ப்பே இல்லை. அதே போல தனக்கு எந்த அனுபவமும் இல்லாத கறிக்கோழி தொழிலில் நாயகி களமிறங்கி பத்து நொடிகளில் தன் கணவனையே அதில் முறியடிப்பதெல்லாம் ரொம்ப ஓவராக, எதார்த்தத்துக்குப் புறம்பாக இருக்கிறது.
பொதுவாக நகைச்சுவைப் படங்களின் முடிவில் ஒன்று வலுவான சமூகப்பகடி இருக்க வேண்டும் - "சூது கவ்வும்" போல. அல்லது கதாபாத்திரங்கள் தம் குறையை உணர்ந்து திருந்த வேண்டும் அல்லது உணரவாவது வேண்டும் - கமல்-கிரேஸி மோகன் டைப் நகைச்சுவை படங்களைப் போல. முதலாவதை அரிஸ்டோபேனஸ் பாணி இன்பியல் என்றும் இரண்டாவதை மியாண்டர் பாணி இன்பியல் என்றும் பழங்கால கிரேக்க இன்பியல் ஆசிரியர்களின் பெயரை வைத்து அழைப்பார்கள். உலகம் முழுக்க பின்பற்றப்படும் பாணிகள் இவையே. இப்படம் முதலாவது பாணியில் எடுக்கப்பட்டது என்றாலும் இதன் முடிவு நகைச்சுவையாக பகடியாக இல்லை, விஜயசாந்தி ஸ்டைலில் இருக்கிறது என்பது ஒரு முக்கிய குறை.
இன்னொரு பிரச்சினை இதன் கருத்தியலில் உள்ளது:
நீதிமன்றத்தில் நீதிபதி "திருமண உறவில் ஒரு பெண்ணுக்கு மிகவும் அவசியப்படுவது நீதியும் சமத்துவமும்" என்கிறார். இதைப் போலதொரு பொய்யை வேறொங்கும் காண முடியாது. நீதியும் சமத்துவமும் இந்த உலகில் எங்காவது காணக் கிடைக்கிறதா? வேலையிடத்தில், சமூகத்தில், ஏன் நீதிமன்றத்தில் கூட? உங்களிடம் குறைந்தது 50,000 இல்லாமல் ஒரு வருடம் ஒரு வழக்கை நடத்த முடியுமா? ஏழையும் பணக்காரனும் அங்கு ஒன்றா? இந்த இடங்களில் நாம் நீதியும் சமத்துவமும் இல்லாமல் நிம்மதியாக மகிழ்ச்சியாக செயல்படுகிறோமே எப்படி? மனிதனுக்குத் தேவை அடிப்படையில் பணம், அதிகாரம் இரண்டுமே. இவை நீதியையும் சமத்துவத்தையும் தருவதில்லை, மாறாக இரண்டையும் கோராமல் இருக்கச் செய்கின்றன! இந்த படத்தில் கூட நாயகிக்கு நீதியையும் சமத்துவத்தையும் அவளுடைய அம்மாவோ அப்பாவோ வழங்குவதில்லை. அவளுக்கு அவர்களிடம் ஏன் கொலைவெறி வருவதில்லை? ஏனென்றால் அவளுடைய பிரச்சினை சமத்துவமின்மை அல்ல. உண்மையில் அவளுடைய பிரச்சினை சுயமரியாதை மறுக்கப்படுவதே. அதற்குக் காரணம் படிக்கவும் வேலை செய்யவும் வாய்ப்பு மறுக்கப்படுவது. நீதி, சமத்துவம் வேறும் சுயமரியாதை வேறு. உதாரணமாக, சாதியமைப்புக்குள்ளும் நாம் சுயமரியாதையை தக்க வைக்க முடியும் (பரஸ்பரம் மரியாதையை காப்பாற்ற முடிந்தால், திமிரில்லாமல் இருந்தால்), ஆனால் நீதியையும் சமத்துவத்தையும் அடைய முடியாது (மாற்றுசாதியில் மணமுடிக்க வாய்ப்பு இல்லாததால்). இந்த வித்தியாசம் முக்கியமானது - சமத்துவமின்மைக்குள் பேணப்படும் சமத்துவமே நாம் நாடுவது.
அடுத்து, அவள் தனக்கு நேசம் தோன்றாத ஒரு ஆணுடன் வாழ நிர்பந்திக்கப்படுகிறாள், எவ்வளவு முயன்றும் அவன் ஒரு மரியாதைக்கும் அன்புக்கும் உரியவனாக இல்லை. அதனாலே அவள் அவனை விட்டு செல்கிறாள். எப்படிப் பார்த்தாலும் அவன் அருவருக்கத்தக்க சுபாவம் கொண்டவனாக இருக்கிறான். அவன் மட்டுமல்ல இப்படத்தில் எல்லா ஆண்களுமே. ஆண்கள் கனிவும் பண்பும் கொண்டவர்களாக மாறினால் பெண்களை அவர்கள் சமத்துவத்துடன் நடத்துவார்கள் என எந்த உறுதியும் இல்லை. காவல் நிலையத்தில் கூடத்தான் பண்புடன் மரியாதையுடன் பேசுவார்கள். ஆனால் அது காவலர்களின் உண்மையான நிறம் அல்லவே! ஒரு வழக்கில் சிக்கிக் கொண்டால் அவர்கள் பேசும் விதமே மாறிவிடும். பணத்தைக் காட்டினால் இன்னொரு விதமாகப் பேசுவார்கள். ஒரு பெண்ணிடம் பொதுவெளியில் மரியாதையாகப் பழகும் ஒருவன் அவள் ஒரு பாலியல் தொழிலாளி என அறிந்தால் வேறுவிதமாகப் பேசுவான், நடத்துவான். ஏன்? இந்த கட்டமைப்பு அதைத்தான் கோருகிறது. ஆக, பணமும் அதிகாரமும் சமூகக்கட்டமைப்புமே ஒருவரது நடத்தையும் தீர்மானிக்கின்றன. ஆண்களுடைய பிரச்சினையும் இதைப் போல பண்பான நடத்தை அல்ல, அவர்கள் செயல்படும் சமூகக்கட்டமைப்பும் அங்கு செயல்படும் அதிகாரமுமே பிரச்சினை ஆகின்றன. வெளியில் சாதி பாராத ஒருவர் தன் சாதியினர் அதிகமாக உள்ள இடத்தில் சாதிய சிந்தனையை தன்னை அறியாது வரித்துக் கொள்வார். சமத்துவத்தையும் சுயமரியாதையையும் குழப்புபவர்கள் இந்த நுட்பமான சமூகவியல் காரணிகளை கவனிக்கத் தவறுகிறார்கள்.
இந்த குழப்பம் இருப்பதாலே கராத்தே கற்று, சண்டை போட்டு சொந்தமாக வியாபாரம் செய்து (அதாவது தன் கணவனை போலச் செய்து அவனையும் அவ்வழி வென்று) நாயகி நீதியையும் சமத்துவத்தையும் பெற்றுவிட்டதாக படம் தட்டையாக சித்தரிக்கிறது. மனைவியின் கருத்தைக் கேட்பது, அவளை அடிக்காமல் கனிவாக நடத்துவதே பெண்ணியம் எனக் காட்டுகிறது. ஒரு மரபான சமூக அமைப்பில் ஒரு படிநிலை இருக்கிறது. அங்கு நீங்கள் உத்தமமாக இருந்தாலும் ஒருவர் மற்றவரை நசுக்கியே ஆக வேண்டும். அது மென் அதிகாரமாகவோ வன் அதிகாரமாகவோ இருந்தே தீரும். கணவன் அதிகாரத்தை கைக்கொள்ளாவிடில் அதை மனைவி எடுத்துக் கொண்டு கணவனை நசுக்குவாள். இதுவே எதார்த்தம்.
ஆனால் மசாலா சினிமா என்பது கண்ணைத் திறந்து காணும் ஒரு கனவு அல்லவா! அதனால் இயக்குநர்கள் இந்தளவுக்குத் தான் நுண்ணுணர்வுடன் இருக்க முடியும். என்ன வடிவேலுவுக்கு கிரெடிட் கொடுத்திருக்கலாம்!
Comments