ஜெயமோகனின் சிறந்த உரை என்று இதைக் கூற முடியாது.
ஜெயமோகனின் குரலில் திரியில் நெருப்பு போல இயங்குவது ஒரு லட்சியவாதம், அவர் உறுதியாக நம்பும் ஏதோ ஒன்று. அது உள்ளே வரும் போது அவர் மிக மிக உறுதியாக சொல்லும் போது ரொம்பச் சிறப்பாக பேசுவார். இந்த உரையிலேயே அவர் விஷ்ணுபுரம் அமைப்பைப் பற்றி பேசுகையில் அது உள்ளே வந்து சாருவைப் பற்றி பேசுகையில் வெளியே போய் விடுகிறது. திரி அணைந்து இருள் சூழ்கிறது.
அதே நேரம் ஜெமோவின் தளத்தில் வெளியாகியிருந்த ஒரு சில கட்டுரைகளில் சாருவை தத்துவார்த்தமாகவும் வரலாற்றுரீதியாகவும் வரையறுக்கிற முயற்சி இருந்தது. ஜெயமோகனாலும் அப்படிப் பேச இயலும். இப்போதெல்லாம். அப்படி சிந்திப்பதே தனக்கு ஒவ்வாமை என்றால் அவர் தன் வழமையான ரசனை விமர்சனத்தின் அடிப்படையில் சாருவின் பிரதிகளில் இருந்து சில பத்திகளை வாசித்துக் காட்டி விளக்கமாகப் பேசியிருக்கலாம். அதையும் செய்யவில்லை. அதற்குப் பதிலாக சாருவைப் பற்றி எழுதப்பட்ட ஒன்றிரண்டு சிறுபத்திரிகைக் கட்டுரைகளை - குறிப்பாக சாருவின் தளத்திலே வெளிவான அந்த புனைவுமொழி கொண்ட கட்டுரையை - பகடி செய்ய பத்து நிமிடங்கள் ஏன் எடுத்துக்கொண்டார் எனப் புரியவில்லை. ஒருவேளை "பிறர் விரிவாகப் பேசட்டும் நான் சுருங்க உரைத்து அமர்கிறேன்" என நினைத்தாரோ தெரியவில்லை.
ஆனால் ஒரு சின்ன தயக்கம் - அவரது நம்பிக்கைகளை, உறுதிப்பாடுகளுக்கு அவை ஒத்துவருமா எனும் தயக்கம், ஒரு அரசியல் தயக்கம் - அவரைத் தடுக்கிறது, மடை திறந்து பாயவிடவில்லை என நினைக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் சாருவை ரசனை விமர்சனம், தன்வரலாற்று விமர்சனம் கொண்டு விளக்க முடியாது. ஹெலன் சிக்ஸு, தெரிதா போன்ற பின்னமைப்பியலாளர்கள், லக்கான் போன்ற பின்னமைப்பியல் உளவியாளர்களின் தர்க்கம் கொண்டோ அல்லது சாருவை ஒத்த லத்தீன் அமெரிக்க, பிரஞ்சு படைப்பாளிகளுடன் ஒப்பிட்டோ விவாதிப்பதே துல்லியமாக அமையும். ஜெயமோகன் ஓரிடத்தில் சாருவின் எழுத்தின் பிரதான அடையாளங்களாக மையமின்மை, தன்னை மறுத்தல், பிரதியாக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். சிறப்பு! ஆனால் அவற்றுக்கு தத்துவத்தில் உள்ள இடமென்ன என்றும் பேசியிருக்க வேண்டும். இன்னொரு இடத்தில் நவீனத்துவ இலக்கிய மரபில் தனக்கிருந்த போதாமைகளே சாருவுக்கும் இருந்ததாக சொல்லுகிறார். ஆனால் சாருவைப் போல் அல்லாது ஜெயமோகனால் முழுமையாக மையத்தையோ, தன்னிலையையோ மறுக்க முடிவதில்லை, இது ஏன், இதன் அரசியல், தத்துவ, வரலாற்றுக் காரணிகள் என்னவென அங்கு யாராவது பேசி இருக்க வேண்டும்.
சரி உங்களுக்குத் தான் மேற்கத்திய அறிவு மீது ஒவ்வாமை வந்துவிட்டது. அதற்குத் தான் இருக்கிறாரே அசல் இந்த தத்துவவியலாளர் நாகார்ஜுனர், அவரைப் போன்ற பௌத்த தத்துவவாதிகள். அவர்களைக் கொண்டு சாருவை நிறுவலாமே? ஏன் செய்யவில்லை? அது மண்ணின் மரபில்லையா? இல்லை தத்துவமே கூடாதா?
இலக்கியத்துக்கு இலக்கியம் மட்டும் போதும், எந்த அறிவு மரபும், தத்துவ சிந்தனையும் கூடாது எனும் பிடிவாதம் இந்த அமைப்பை ஆட்டிப் படைக்கிறது. ஆனால் தூய இலக்கியம் என ஒன்றுள்ளதா? மொழி முதலில் தூய்மையாக, சாராம்சமாக இருக்கிறதா? மொழியில் தான் எல்லா சங்கதிகளும் வந்து கலக்கின்றனவே!
இதனால் யாருக்கு நட்டம்? அறிவு மரபுக்கா? இல்லை அங்கிருக்கும் 500 பேருக்குத் தான். தூய இலக்கியம் என ஒன்று இனி சாத்தியமே இல்லை. இலக்கியத்தை எப்படி வாசித்து மொழிக்குள் கொண்டு வந்து ரசிப்பது, அதன் வழியாக விடுதலையை எப்படி அடைவது எனக் காண்பதற்கே தத்துவம் அவசியமாக இருக்கிறது. நான் இதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அவர்கள் இதில் உள்ள உண்மையைப் பார்ப்பதில்லை, விமர்சனத்தால் மட்டும் நோகிறார்கள், திரும்ப என்னை வெறுக்கிறார்கள். ஆனால் உங்களை நீங்களே வேலியிட்டுக் கொள்வதால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் சிலநேரம் என்னால் சாமர்த்தியமாக வாயை மூடிக்கொண்டு நிற்க முடியவில்லை. அதனால் சொல்லி விடுகிறேன். எனக்கு ரொம்ப வயதாகி நாம் சாமர்த்தியசாலியாகி கனியும் போது அமைதியாகி விடும். அதுவரை சொல்லிக் கொண்டு தான் இருப்பேன்.
வெறுமனே இலக்கியத்தை மட்டும் படிப்பவர்கள் இலக்கியத்தினால் பலனடைய இயலாது! தத்துவம் இன்றி இலக்கியம் வாசிப்பது வெறும் கையால் கிணற்றைத் தோண்டுவதைப் போன்றது. தோண்டலாம், ஆனால் நகங்கள் பேர்ந்து விடும்.
மற்றபடி விஷ்ணுபுரம் அமைப்பு புதிய வாசகர்களுக்கு இலக்கியத்தை அறிமுகப்படுத்துவது, தங்கள் பள்ளியை சேராத சாருவைக் கொண்டாடுவது, விருதளிப்பது பாராட்டத்தக்கது. சாருவைக் குறித்து ஒரே நேரத்தில் இவ்வளவு கட்டுரைகள் வருவது இதுவே முதல்முறை என நினைக்கிறேன். விஷ்ணுபுரம் அமைப்பின் அறிவொழுக்கம் (அது அக்கிரகாரத்தை விட்டு நீங்கா ஒழுக்கமாக சிலநேரங்களிக் இருந்தாலும்) மெச்சத்தக்கது!

Comments