இன்றைய ஆட்டத்தில் 132 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து ஆணி இந்த 350க்கு பக்கத்தில் வருவது ஒரு அசாதாரண முயற்சி. வாழ்த்துகள்.
அதே நேரத்தில், நிச்சயமாக ஜெயிக்க வேண்டிய இடத்தில் இருந்து இந்தியா கிட்டத்தட்ட தோற்கும் நிலைக்கு சரிந்து பின்னர் மயிரிழையில் தப்பிக்க காரணம் என்ன?
முதல் முக்கியமான காரணம் மோசமான பந்துவீச்சாளர்களின் தேர்வே - குறிப்பாக நல்ல ஆட்ட நிலையில் இருந்த உம்ரான் மாலிக்கை நீக்கி அந்த இடத்தில் மட்டையாட்டத்தை காரணம் காட்டி ஷர்துல் தாகூரை உள்ளே கொண்டு வந்தது.
எதற்கு உம்ரான் மாலிக்கின் இடத்தில் பந்து வீச்சு ஆல்ரவுண்டர்? ஏனென்றால் அக்ஸர் பட்டேல் தன் உறவினரின் திருமணத்துக்காக விடுப்பெடுக்க, ராகுலும் அதே போல ஒரு காரணத்துக்காக விடுப்பெடுக்க, ஷ்ரேயாஸ் காயம் காரணமாக வெளியேற மத்திய வரிசை சற்று அனுபவம் குறைந்ததாகிறது. உடனே ரோஹித் பதற்றமாகி மட்டையாட்டத்தை பலமாக்க ஒரு பவுலரை நீக்கி தாகூரை கொண்டு வருகிறார். பிரச்சினை என்னவென்றால் எட்டாவது எண்ணில் வருகிற ஆல்ரவுண்டர் ஒரு ஜடேஜா, பிரேஸ்வெல் போன்றவர் என்றால் அது நியாயமான தேர்வு, ஆனால் தாகூர்?
இதே போலத்தான் கடந்த டி20 உலகக்கோப்பைக்கு முன்பு ஜடேஜா காயம்பட ரோஹித் பதற்றத்தில் குழம்பி பந்து வீச்சு வரிசையை மாற்றி பலவீனமான பந்துவீச்சாளர்களைக் கொண்டு வந்து அணியின் சேர்க்கையை குழப்பினார். ஒவ்வொரு முறையும் இது நடக்கிறது - ரோஹித் போதுமான அளவுக்கு தன் மட்டையாளர்களை நம்பிவதில்லை.
இதே காரணத்தினால் தான் ரோஹித் டாஸ் வென்றும் இரண்டாவது மட்டையாடி பனியின் தாக்கத்தை பயன்படுத்திக் கொள்ளாமல் முதலில் மட்டையாடினார். ஏனென்றால் இரண்டாவதாக மட்டையாடுவத்ற்கான மத்திய வரிசை தன் வசம் இல்லை என நினைக்கிறார்.
இதனாலே பனியின் தாக்கம் காரணமாக நிறைய புல் டாஸ்கள் விழுந்தன, பந்து இன்னும் வேகமாக வந்தது, பெரிய ஷாட் அடிப்பது சுலபமாகியது. அதாவது தனது மத்திய வரிசை மீதுள்ள அவநம்பிக்கையால் ரோஹித் தன் பந்து வீச்சாளர்களை பலி கொடுத்தார்.
கடைசிக் காரணம் 6 விக்கெட்டுகள் விழுந்ததும் நாம் அப்படா என இளைப்பாறியது. அவர்கள் தரப்பில் இருந்து பவுண்டரிகள் வீளாசிய போது கூட நாம் விழித்துக் கொள்ளவில்லை - மிஸ் பீல்ட் பண்ணி பவுண்டரிகள் கொடுத்தோம். அவர்கள் 100 பார்னர்ஷிப் எடுத்த பின்னரே நமக்கு நிஜம் உறைத்தது! இந்த பிரச்சினை ஏற்கனவே நமக்குள்ளது தான் - நாம் 6 விக்கெட்டுகளுக்குப் பிறகு எதிரணியை நசுக்க முயல்வதில்லை, அதற்கான பந்து வீச்சாளார்களும் இம்முறை நம்மிடம் இல்லை. இதற்கும் தீர்வு உம்ரான் / பிரசீத் கிருஷ்ணா ஒரு பந்து வீச்சாளரைக் கொண்டு வருவதும், ஹர்த்திக் பாண்டியா முழுமையான ஆட்டத்தகுதியுடன் பந்து வீசுவது (இப்போது அவருக்கு முதுகுக் காயம் உள்ளது.)
ஒரு சாதாரண பை லேட்டரல் போட்டியிலே தனது தோல்வி பயத்தை, பதற்றத்தை கட்டுப்படுத்த தெரியாத ரோஹித் வரப் போகும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் என்னவெல்லாம் செய்து சொதப்புவார்? இந்த விசயத்தில் நிச்சயமாக இந்திய வரலாற்றிலே சுத்த புள்ளபூச்சி கேப்டன் ரோஹித் ஷர்மா தான். ஐ.பி.எல் கோப்பைகளைப் பார்த்து நாமும் தேர்வாளர்களும் ஏமாந்து போனோம்!
Comments