வனிதா ஒரு புத்திசாலி அல்ல, அதனாலோ ஏனோ அவர் சொல்வதில் எப்போதும் வெளிப்படைத்தன்மையும் உண்மையும் இருக்கும். இங்கு வனிதா சொல்லியிருக்கும் உண்மை இன்னும் முக்கியமானது. ஏனெனில் அரசியல் சரிநிலை கருதி நாம் வாய்மூடிக் கடந்து விடும் போது அவர் உடைத்து சொல்லியிருக்கிறார், ராஜா அம்மணமாகப் போகிறார் என சிறுவன் கூவியதைப் போல.
ஆம், திருமா விக்ரமுக்காக புரொமோஷன் பண்ணுவது தப்புதான். பிக்பாஸ் என்பது மனிதர்களை ஒரு இடத்தில் பூட்டி வைத்து அவர்கள் தமக்கேற்ப ஆட வைத்து கண்காணித்து இந்த அடிமை வணிக விளையாட்டு பொழுதுபோக்கை பார்வையாளர்களை நுகர மட்டுமல்ல, அதை மறைமுகமாக நடத்துபவர்களாகவும் மாற்றும் நிகழ்ச்சி. அதாவது இந்நிகழ்ச்சி நம்மில் ஒவ்வொருவரையும் கண்காணிப்பாளனாக, சர்வாதிகாரியாக மாற்றுகிறது. உடல் மீது கண்காணிப்பின், கட்டுப்படுத்தலின் வழி அதிகாரம் செலுத்துவதை இயல்பாக்குகிறது. இது நம் சமூகத்துக்கு மிக மிக ஆபத்தான ஒன்று - இதைப் பார்த்து ஏற்றுக்கொண்டு விட்டால் அலுவலகங்களில், சமூகத்தில், குடும்பத்தில் இது நடக்கையில் அது தவறாக நமக்குத் தெரியாது என்பதை எனது பிக்பாஸ் நூலில் நான் பேசியிருக்கிறேன்.
விக்ரம் என்னதான் அறம், முறம், நீதி, அநீதி என்று பேசினாலும் அவர் இந்த கண்காணிப்பு அரசியலை, சர்வாதிகாரத்தை மறைமுகமாக ஏற்றபடியே தான் அதைச் செய்கிறார். ஒரு தனிமனிதராக அது அவரது விருப்பம். ஆனால் இதை ஒரு அரசியல் கட்சி புரொமோட் செய்யும் போது சமூகநீதி, அறம் என்பவை கேலிக்கூத்தாகின்றன.
மேலும் அரசியல் என்பது மக்களுக்காக பணி செய்தல் என்றால் அதற்கும் ஒரு ரியாலிட்டி ஷோவுக்கும் என்ன சம்மந்தம்?
என்னைப் பொறுத்தவரையில் பிக்பாஸ் என்பவர் ஹிட்லரின், முசோலினியின், மோடியின் உருவகமே. எனில் திருமா மறைமுகமாக இவர்களை, இவர்களுடைய அரசியலை ஆதரிக்கிறாரா?
இவ்வளவு யோசிக்க வேண்டுமா என்றால் கலாச்சார அரசியல் இவ்வளவு நுட்பமாக, மறைமுகமாகத் தான் இருக்கும். எம்.ஜி.ஆரி பிம்ப அரசியல் இப்படித்தான் இருந்தது. அதன் தாக்கம் இன்றும் உள்ளது.
பிக்பாஸின் தாக்கமும் அப்படியே நாம் அறிந்தோ அறியாமலோ பின்பற்றும் ஒரு கலாச்சாரமாகும். அதை எதிர்க்க வேண்டும், நம் நண்பர்களே அதில் இருந்தாலும் ஆதரிக்கக் கூடாது.
Comments