எனக்கு சுஜாதாவின் அவதானிப்பு, புத்திசாலித்தனம், மொழி விளையாட்டு, ஆச்சரியப்படுத்தும் போக்கு, துண்டுத்துண்டான பாணி மீது மிகுந்த வியப்பும் மரியாதையும் உண்டு.
ஆனால் வெகுஜன எழுத்தாளர்களிலேயே அவர் ஒரு பொன்சாய் என நினைக்கிறேன் - சுஜாதாவின் பார்வை என்ன? உலகம் பற்றி, இருப்பு பற்றி, வாழ்க்கை பற்றி, தமிழ் சமூகம், தமிழ் பண்பாடு, இந்திய சிந்தனைப் போக்குகள் பற்றி? அவரது புனைவுகளில் வெளிப்படும் வாழ்க்கைச் சிக்கல்கள், பார்வைகள் எவை? இந்த கேள்விகளுக்கு எந்த சுஜாதா வாசகராலும் பதிலளிக்க முடியாது. ஆனால் வெகுஜன எழுத்தாளராக இருந்தாலும் பாலகுமாரன் வாசகர்களால் இக்கேள்விகளில் ஒன்று ரெண்டுக்காவது பதில் சொல்ல முடியும்.
சுஜாதா கட்டிப் போடப்பட்ட ஒரு நாய்க்குட்டியாக தன்னை மாற்றிக் கொண்டாரோ என இப்போது தோன்றுகிறது. எதிலும் பட்டுக்கொள்ளாமல், ஒட்டிக்கொள்ளாமல், உணர்ச்சிவசப்படாமல் வெளிச்சமூட்டப்பட்ட தொட்டிக்குள் வளைய வளைய வந்து நம்மை சிலாகிக்க வைக்கும் ஒரு மீனைப் போல. பக்கத்து வீட்டுக்காரர் வாங்கிய விலைமதிப்பான சோபாவில் நாம் பட்டும்படாமல் உட்கார்வதைப் போல பல விசயங்களை லேசாகத் தொட்டுவிட்டு ஓடி வந்து விடுவதைப் போல அவர் பிரச்சினைகளை டீல் பண்ணுகிறாரோ எனத் தோன்றுகிறது.
அவரது கட்டுரைகளைப் படித்து முடிக்கும் போது இன்னும் ஆரம்பிக்கலையே, தண்ணீரை மொண்டு இன்னும் தலையில் ஊத்தலையே பாஸ் எனத் தோன்றும். அவரது சிறுகதைகளைப் படிக்கையில் சரக்கை இப்போதானே கோப்பையில் ஊற்றியிருக்கிறோம், அதற்குள் ஸ்மெல் பண்ணிட்டு சாய்ந்திட்டாரே, ஒரு இரவு முழுக்க இருக்கிறதே இன்னும் எனத் தோன்றும். நாவல்களைப் படிக்கையில் கதை இன்னும் ஆரம்பிக்கலையே, ஏன் வி.தா.வருவாயா ஜெஸ்ஸியைப் போல டேடி கோவிச்சுப்பார், உனக்கும் எனக்கும் செட்டாகாது கார்த்திக், நாம பிரிஞ்சிரலாம் என அதற்குள் வாசகனிடம் சொல்கிறாரே என்று தோன்றும்.
கோகுல் பிரசாத்தின் மொழியில் சொல்வதானால், அழகான உடல் அமைப்பு கொண்ட பெண் ஒரு படம் முழுக்க சேலையில் வளைய வளைய வருவதைப் போல் அல்லாமல் அவர் இன்னும் கொஞ்சம் துணிச்சலாக, நிறைய ரிஸ்க் எடுத்து இந்த ஆட்டத்தை ஆடியிருக்கலாம், தன் இதயத்தை எழுத்துக்குள் இன்னும் பெரிதாக திறந்து வைத்திருக்கலாம். தான் ரசித்த உலக இலக்கியத்தை ஒட்டி ஒரே ஒரு படைப்பையாவது தந்திருக்கலாம். சுஜாதா யார் எனும் கேள்விக்கு தன் அத்தனை முட்டாள்தனங்களையும் முரண்பாடுகளையும் வெளிபடுத்தி பதில் தந்திருக்கலாம். அந்த புத்திசாலித்தனத்தை கழற்றி லாண்டிரி பின்னில் போட்டிருக்கலாம்.
ஆனாலும் எனக்கு சுஜாதாவைப் பிடிக்கும்!ஒரு வாசகனாக அவரது நினைவுகள் இனிமையாக எனக்குள் என்றும் நிறைந்திருக்கும்!
Comments