முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நோய்களின் ஊற்றுக்கண்


முன்பு நாம் காலையுணவாக ஊறப்போட்ட பழைய சோற்றையே தயிருடன் உண்டோம். என்னுடைய அப்பா தன் இளமைக்காலத்தில் டிபன் எதையும் சாப்பிட்டதில்லை, இட்லி, தோசை என்பவை தீபாவளியின் போது சுடுபவை என்று சொல்லியது நினைவுள்ளது. அதன் பிறகு ஸ்டைலான காலை உணவுகள் அப்படியே பொங்கல், பூரி என நகர்ந்து பிரெட், கெலாக்ஸ் என்று மேலும் மோசமாகி விட்டன. என்னுடைய மாணவர்களுக்கு பிடித்த காலை உணவு பன் சமோஸா அல்லது பப்ஸ். விளைவு என்னவென்றால் இன்றைய பதின்வயதினருக்கு விதவிதமாக நோய்கள் வருகின்றன. ஒரு தம்பியின் மூக்கில் ரத்தம் வருகிறது என்று கழிப்பறைக்கு ஓடினார். நான் அவரை அழைத்து விசாரித்தேன். அவர் தனக்கு நுரையீரலில் பிரச்சினை, அது ஏதோ ஒரு ஒவ்வாமையால் ஏற்பட்டது என்றார். ஓட்டலில் ஏதோ ஒரு உணவை உண்ட போது ஏற்பட்ட ஒவ்வாமை மூச்சுத்திணறலிலும் மூக்கில் ரத்தம் ஒழுகுவதிலும் கொண்டுவிட்டதாகவும், மாதத்திற்கு ஒருமுறை ஆஸ்பத்திரிக்கு சென்று நுரையீரலில் 10 ஊசிகள் போட்டுக் கொள்வதாகவும் சொன்னார். அதே போல பல்வேறு நோய்த்தொற்றுகளால் அவதிப்படுகிறவர்கள், ஒவ்வாமை காரணமாக தூங்க முடியாத அளவுக்கு நமைச்சல் ஏற்பட்டு அதற்காக ஏகப்பட்ட மாத்திரைகள் சாப்பிடுபவர்கள், 12 வயதிலேயே நீரிழிவு வந்தவர்கள், மன அழுத்தத்திற்கு சிகிச்சையில் இருப்பவர்கள் என ஏகப்பட்ட பதின்வயதினரை நான் தினமும் இந்த நகரத்தில் பார்க்கிறேன். எனக்கு பல சமயங்களில் நான் இருப்பது ஒரு திறந்தவெளி மருத்துவமனையோ எனத் தோன்றுமளவுக்கு இளைஞர்கள் நோய்களை சுமந்தலைகிறார்கள்.
ஆச்சரியமாக, நான் ஊரில் கல்லூரியில் படித்த போது என் சகமாணவர்களில் ஒருவர் கூட ஒருமுறை கூட மருத்துவமனை பக்கம் எட்டிப் போய் பார்த்ததில்லை. அன்று என் ஊரில் மருத்துவமனையே இல்லை. ஜுரம் வந்தால் தக்கலையில் உள்ள ஒரே ஒரு தனியார் கிளினிக்குக்கு போவார்கள். அங்கும் குறைவானவர்களே இருப்பார்கள். அவர்களுக்கும் அந்த டாக்டர் ஒரே ரோஸ் மருந்தையே கொடுப்பார். என் அப்பாவுக்கு கடைசி காலம் வரை ஜுரமோ சளியோ வந்து நான் பார்த்ததில்லை. இன்று ஊரிலும் நிலைமை மாறிவிட்டது. இத்தனைக்கும் அன்று என் வயது இளைஞர்கள் தம் ஆரோக்கியத்துக்கு என தனியாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர்களுக்கு இப்படியான பன் சமோசாக்கள், பப்ஸ்கள் காலை உணவாக இல்லை. இரவானால் பிரைட் ரைஸ், பிரியாணி தின்ன கையில் பணமில்லை. முழுக்க முழுக்க வீட்டில் கிடைக்கும் சாப்பாடையே நம்பியிருந்தார்கள். என்று நாம் வெளியே சாப்பிட ஆரம்பித்தோமோ அன்றே நோய்களின் நடமாடும் கூடாரம் ஆகிவிட்டோம். யாராவது இந்த ஓட்டல்கள், துரித உணவுகள், கடைகளில் தொங்க விடப்படும் பாக்கெட் உணவுகளை ஒழிப்பதற்கு ஒரு இயக்கத்தை எடுத்து நடத்தினால் அது நம் மக்களின் ஆயுட காலத்தை 20 ஆண்டுகள் அதிகரிக்க உதவும். மது ஒழிப்பை விட நமக்கு உணவுக்கடைகள், துரித உணவுக் கடைகள், பாக்கெட் உணவு விற்பனையின் ஒழிப்பே தேவை. சாராய வியாபாரிகளை விட உணவு வியாபாரிகளே அதிக ஆபத்தானவர்கள், பெரிய கொலைகாரர்கள். ஏனென்றால் சிறுகுழந்தை முதல் வளர்ந்தவர்கள் வரை தவறாமல் இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு தம் ஆயுளைக் குறைத்து அதிக வியாதிகளால் துன்புறுகிறார்கள். மதுவருந்தி அவ்வாறு வாழ்க்கையை தொலைக்கிறவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவே. வியாபாரத்தை பெருக்குவதற்காக உலகம் முழுக்க அரசாங்கங்கள் மக்களின் ஆயுளை ஏலம் விட்டுக்கொண்டிருக்கின்றன. போதை மருந்து வியாபாரிகளை விட, அணு குண்டு, வெடிகுண்டு, துப்பாக்கி உற்பத்தியாளர்களை விட மனித சமூகத்தின் முதன்மை விரோதிகள் உணவு சந்தையாளர்களே.
ஏனென்றால் அவர்களே பரவலாக மக்களை பாதிக்கிறார்கள். அவர்களே விஷத்தை சிறுக சிறுக மக்களுக்கு ஊட்டுகிறார்கள். முழுக்க முழுக்க ஆரோக்கியத்துக்கு கேடான உணவுகளை தம் லாபத்துக்காக மக்களை சாப்பிட வைக்கிறார்கள். அவர்கள் வந்த பின்னரே மக்கள் அதிக நோய்களாலும் மனப்பிரச்சினைகளாலும் உடல் பருமனாலும் அவதிப்படுகிறார்கள். மாரடைப்பால் இளமையில் மரிப்பவர்கள் அதிகமாகி வருகிறார்கள்.
நாம் இந்த உணவு வியாபாரிகள் எனும் மரண வியாபாரிகளையே முதலில் எதிர்க்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...