முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாட் ஜிபிடியால் வரும் தலைவலியும் மறைமுக நன்மையும்



இன்று நான் ஒரு கூட்டத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது என் அருகில் இருந்த நண்பர் சாட் ஜிபிடி இணையதளத்துக்கு சென்று அந்த தலைப்பைக் கொடுத்தார். செயற்கை நுண்ணறிவு அரை வினாடியில் மொத்த உரையையும் கொடுத்தது. நண்பர் அந்த பேச்சாளர் பேசுவதற்கு பயன்படுத்திய பி.பி.டி சிளைடுகளைக் காட்டிரெண்டும் ஒண்ணுதானே?” என்றார். ஆமாம், ரெண்டும் ஒன்றுதான்! என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை. முன்பு நாம் ஒரு தலைப்பின் கீழ் பேசவோ கட்டுரை எழுதவோ வேண்டுமெனில் இணையத்தில் கிடைத்தும் கட்டுரைகள், விக்கிபீடியாவை பயன்படுத்தி தகவல்களைத் தொகுத்து வடிவம் கொடுக்க வேண்டும் அல்லது ஏற்கனவே இருக்கும் கட்டுரையைத் திருட வேண்டும். இந்த திருட்டை எழுத்துத்திருட்டு என்கிறார்கள். பொதுவாக கட்டுரைகளிலோ கல்விப்புல இடுபணிகளிலோ இப்படியான திருட்டை செய்தால் சுலபத்தில் கண்டுபிடிக்கும். இதற்குத் தனியாக மென்பொருளும் உள்ளது. ஆனால் சாட் ஜிபிடியைக் கொண்டு செய்யப்படும் திருட்டை அப்படி சுலபத்தில் கண்டுப்பிடிக்க இயலாது - ஏனென்றால் சாட் ஜிபிடி தகவல்களை உருவி ஒரு புதிய மொழியில் தந்துவிடுகிறது. பத்து முறை கொடுத்தால் பத்தும் புதிய மொழியாக இருக்கும்


என்னைப் போன்ற ஆசிரியர்களுக்கு இது முற்றிலும் புதியதொரு சிக்கலை உருவாக்குகிறது

  1. முதலில், நாங்கள் வகுப்பில் எந்த புதிய தலைப்பில் சென்று பேசினாலும் மாணவர்கள் அதை சாட் ஜிபிடியுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். குறிப்புகளுக்காக ஆசிரியர்களை நாடுவார்கள். எந்த தலைப்பில் போட்டாலும் சாட் ஜிபிடி அடிப்படைத் தகவல்களுடன் ஒழுங்கான சீரான வடிவில் ஒரு சிறந்த குறிப்பை அவர்களுக்கு அரை நொடியில் கொடுத்துவிடும். அதை வைத்து தேர்வுக்குப் படிக்கலாம். பல புத்தகங்களில் இருந்து, இணையதளங்களில் இருந்து குறிப்புகளை எடுத்து ஒவ்வொரு தலைப்புக்கும் பி.பி.டி தயாரித்துக்கொண்டு வரும் ஆசிரியர்கள் இத்துடன் காலாவதி ஆகிவிடுவார்கள்
  2. அடுத்து, மாணவர்கள் தமது உள்மதிப்பீட்டுத் தேர்வுக்கு இடுபணிகளைச் செய்வார்கள். பள்ளி துவங்கி பல்கலைக்கழகம் வரை மாணவர்கள் ஏராளமான எழுத்து இடுபணிகளை செய்வதும், குறிப்பிட்ட தலைப்புகளை பி.பி.டியைக் கொண்டு பேசுவதும் வழமை. இனி இந்த வேலைகளை அவர்கள் அரை வினாடியில் முடித்துவிடுவார்கள். அவர்கள் காப்பி அடிப்பதை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்
  3. அடுத்து, மாணவர்கள் இப்படி இணையத்தில் திருடுவதைத் தடுக்கும் நோக்கில் என்னைப் போன்றவர்கள் இன்று சிக்கலான கேள்விகளைக் கொடுப்போம். .தா., ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்து அதில் ஒரு உத்தியை பயன்படுத்தி எப்படி வெற்றிபெறுவது என்று கற்பனையில் எழுத வேண்டும். அல்லது தெரிதாவின் கோட்பாட்டை ஒரு கதையில் பயன்படுத்தச் சொல்வோம். இப்போது மாணவர்கள் இத்தகைய கேள்விகளுக்கு கூட குத்துமதிப்பாக ஒரு பதிலை சாட் ஜிபிடியில் பெற்றுத் தந்துவிட முடியும். அதை மிகவும் ஊன்றிப் படித்தாலே அசலா போலியா என்று கண்டிபிடிக்க முடியும். அதனால் நாங்கள் இனி மிக மிக வித்தியாசமான, சிக்கலான கேள்விகளைக் கொடுக்க வேண்டும். அது சாட் ஜிபிடி பயன்படுத்தாத நடுத்தரமான மாணவர்களை பாதிக்கும்.
  4. இறுதியாக, சில மொழிப்பாடங்களுக்கு படைப்பாக்க இடுபணிகளை செய்ய முடியும். .தா., ஒரு கோட்பாட்டை பயன்படுத்தி ஒரு கதையை எழுதி சமர்ப்பிப்பது. இனி மாணவர்களுக்கு எப்படி கதை எழுதுவது, எங்கிருந்து ஆட்டையப் போடுவது எனும் பிரச்சினையே இல்லை. சாட் ஜிபிடி வெண்ணெய் வழுக்கிக்கொண்டு போவதைப் போல கதை எழுதுகிறது. சிறுவர் கதைகள், வணிக கதை எழுதுபவர்கள் சில குறிச்சொற்களை உள்ளிட்டால் நேர்த்தியான, ஆனால் ஆழமற்ற கதைகள் வந்துவிடுகின்றன. (anti-gpt எனும் இணையதளம் இதைத் தடுக்க உள்ளதாக ஒரு நண்பர் சொன்னார். ஆனால் அதில் நீங்கள் நூற்றுக்கணக்கான இடுபணிகளில் எவ்வளவு பக்கங்களைத் தான் கொடுத்து சோதிப்பீர்கள்?)
  5. கடைசியாக, இதைப் பயன்படுத்தி முனைவர் பட்ட ஆய்வாளர்கள் - மிக மிகப் புதுமையான, கள ஆய்வு தேவைப்படும் தலைப்புகள் தவிர பொதுவான சுலப தலைப்புகள் எனில் - நிச்சயமாக தமது 180 பக்க ஆய்வேட்டில் 50 பக்கங்களையாவது சில நிமிடங்களில் எழுதி முடிக்க இயலும். குறைவான மதிப்பீட்டு முறைமைகள் கொண்ட பல்கலைகளில் முனைவர் பட்ட ஆய்வு செய்வோர் மொத்த ஆய்வேட்டையும் கூட சாட் ஜிபிடியைக் கொண்டு எழுத முடியும். நடுநடுவே சில மேற்கோள்களை அதிரிபுதிரியாக திணித்து துணைப்பட்டியலையும் இணைத்தால் போதும். இது ஒரு ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தும். (ஒருவேளை சுலபத்தில் சோதிக்கும் anti-gpt மென்பொருட்கள் வந்தால் உண்டு.) எனக்கு "எந்திரன்" படம் தான் நினைவுக்கு வருகிறது.


இனி, பதிப்புச் சமூகத்தில் சாட் ஜிபிடி ஏற்படுத்தும் விளைவுகள் இப்படியிருக்கும்:

  1. முன்பு 150 பக்கங்களில் கிழக்குப் பதிப்பகத்தில் சுவாரஸ்யமான தலைப்புகளில் புத்தகஙக்ள் வருமே அவற்றை இன்று "நரேந்திர மோடி - ஒரு புயலின் கதை" என்று தலைப்பிட்டு சில நிமிடங்களில் சாட் ஜிபிடி எழுதும். எடிட் செய்கிறவர் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்து திருத்தினால் போதும்
  2. தமிழ் செய்தித்தளங்களில் துணை ஆசிரியர்கள் பெரும்பாலும் தேவையிருக்க மாட்டார்கள்
  3. யுடியூபில் நிகழ்ச்சிகளுக்கு வெகுசாதாரணமான, தேய்வழக்கானதிரைக்கதைகளை’, வரைவுகளை எழுத பொறியியல் படித்த கண்டெண்ட் எழுத்தாளர்கள் இருக்க மாட்டார்கள்
  4. சமூக வலைதள நிர்வாகிகளின் இடத்தை சாட் ஜிபிடியே எடுத்துக்கொள்ளுமா? வாய்ப்புள்ளது.
  5. ஆங்கிலத்தில் நடிகர்களின் குரலைக் கொண்டு படங்களையும் கதையையும் எடுத்து ஒரு காணொளியாக மாற்றும் சாட் ஜிபிடி உள்ளது. எதிர்காலத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித், திரிஷா, நயன்தாரா அல்லது அவர்களுக்கு டப்பிங் பண்ணுகிறவர்கள் தம் குரல்களை வாடகைக்கு விடும் பட்சத்தில் வெகுவிரைவில் நீங்கள் சாட் ஜிபிடியில் போய் புதிதாக வரும் படத்தைப் பற்றியோ வானிலையைப் பற்றியோ ஒரு காணொளியை உருவாக்க முடியும். டிவியில் வரும் சின்னச்சின்ன விளம்பரங்களை சாட் ஜிபிடியே உருவாக்கிவிடும். கொரோனாவின் போது அமிதாப் பச்சனின் குரலுக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டதே அது இனி இருக்காது


என் நண்பர் சொன்னார், “இனிமேல் தான் ஒரிஜினலாக சிந்திப்பவர்களுக்கு ஒரு மதிப்பு ஏற்படும். ஒரு கருத்தைப் பற்றி பேசுபவருக்கு அல்ல அதைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொண்டு புதிய கோணத்தில் அதை அலசுபவர்களுக்கு தனி மதிப்புண்டாகும். தகவல்களை சேகரித்து வரிசைப்படுத்தித் தருவோருக்கு அவசியம் இருக்காது. புதிய அனுபவங்களை, பார்வைகளை, கற்பனைகளை வெளிப்படுத்தும் படைப்பாளிகளே நிலைக்க இயலும். கூகிளுக்கு முன்பு இருந்த மாதிரி ஆசிரியர்கள் இனித் தேவைப்படுவார்கள். புதியதை சொல்லிக்கொடுப்பவர்கள் அல்ல வேறெங்குமே இல்லாத ஒன்றைச் சொல்லித் தருபவர்களே இனி ஆசிரியர்கள்.”



 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...