Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

படைப்புக் கலை ஏன் கற்றுத் தரப்படவேண்டும் - அதிஷா

 சினிமா சார்ந்து வருடத்திற்கு 365 நாளும் 365 பயிற்சி பட்டறைகள் நடக்கின்றன. நடிப்பு, திரைக்கதை, எடிட்டிங், இசை, லைட்டிங் லொட்டு லொசுக்கு என ஏகப்பட்ட பட்டறைகளை நடத்துகிறார்கள். இந்த ஒரு நாள் பட்டறைகளுக்கு குறைந்தது ஐந்தாயிரமாவது வாங்குகிறார்கள். அதிலும் பிரபலங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். சமீபத்தில் வெற்றிமாறன் நடத்திய ஒருநாள் வகுப்புக்கு எட்டாயிரமோ பத்தாயிரமோ வாங்கியதாக கேள்விப்பட்டேன். இதைப்பற்றியெல்லாம் யாருக்கும் எந்த விமர்சனங்களும் இருப்பதில்லை. யாருமே ஒரேநாளில் இயக்கம் கத்துக்க முடியுமா, ஒரே நாளில் நடிப்பு வந்துவிடுமா என்று கேட்டு காமெடி பண்ணுவதில்லை. ஆனால் இலக்கிய பயிற்சி வகுப்பு என்றதும் ஏகப்பட்ட கேலிகள் நையாண்டிகள் வந்துவிடுகிறது.

நண்பர் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் வாசகசாலை சார்பாக ஒரு கவிதை பட்டறையை நடத்துகிறார். ஒருநாள் பயிற்சி. அதற்குரிய பாடத்திட்டத்தை நேற்று பகிர்ந்திருந்தார். அதுவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இது நவீன கவிதைக்குள் நுழைய விரும்புகிற இளம் வாசகருக்கு கவிஞருக்கு ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும். நானும் கூட நேரம் கிடைத்தால் கலந்துகொள்ள நினைத்திருக்கிறேன். அருமையான முன்னெடுப்பு இது. ஆர்வமுள்ளோருக்கு பயன்படும்.
இந்த பட்டறை ஏற்பாட்டளர்களுக்கு ஒரு தயக்கம் இருக்கிறது. அதனாலேயே இது பத்திரிகை வளர்ச்சி நிதிக்காக என்றெல்லாம் சோகமாக பேசுகிறார்கள். அதெல்லாம் தேவையே இல்லை. கவிதை கற்றுக்கொள்ள காசு கேட்டால் என்ன தப்பு… இதுபோல இன்னும் பல கட்டணப்பட்டறைகள் நடக்க வேண்டும். நவீன கவிதைகளுக்குள் எல்லோரும் வரவேண்டும்.
ஆச்சர்யமாக நண்பரும் எழுத்தாளருமான அபிலாஷூம் நாவல் எழுத பயிற்சி பட்டறைகளை நடத்த இருக்கிறார். ஒருநாள் பட்டறை அல்ல. இது இரண்டுமாதங்கள் நடக்க இருக்கிற வாரயிறுதி வகுப்புகள்.
அபிலாஷ் பல ஆண்டுகளாக கல்லூரிகளில் இலக்கியம் பயிற்றுவிக்கிற ஆசிரியர் என்பதால் நிச்சயம் அவருடைய பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். அனேகமாக தமிழில் அவர் அளவுக்கு இலக்கியத்தை டெக்னிக்கலாக பிரித்து மேய்ந்து பாகம் பிரித்தவர் யாரும் இருக்க முடியாது. சுஜாதாவில் தொடங்கி ஜெயமோகன் சாரு வரை எல்லா வகைமை எழுத்தாளர்களையும் அக்கு அக்காக பிய்த்து போட்டு தொழில்நுட்பம் பேசி இருக்கிறார். நாவல் என்பதன் வடிவம் தொடங்கி அதன் வசனங்கள் வரை எது முக்கியம் எது அவசியமில்லை என அவர் எழுதிய எண்ணற்ற கட்டுரைகளே அவருடைய திறனுக்கு சான்றாக இருக்கும். அவருடைய பட்டறையில் கலந்துகொள்வது நிச்சயம் பயன்தருவதாகவே இருக்கும். (மேலதிக தகவல்களுக்கு அவருடைய பேஸ்புக் பக்கத்தை பார்க்கவும்)
உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் இலக்கியம் என்பது கற்றுத்தரப்படுகிற ஒன்றாகத்தான் இருக்கிறது. அங்கெல்லாம் கவிதை நாவல் சிறுகதை என எல்லாமே பயிற்றுவிக்கப்படுகிறது. நம்மூரில்தான் இலக்கியம் என்றாலே ஓசிதான்! புத்தகமும் வாங்கமாட்டார்கள் காசும் கொடுக்க மாட்டார்கள் கற்றும் கொடுக்கமாட்டார்கள்.
எகத்தாளத்திற்கு பஞ்சம் இருக்காது. இலக்கியம் பயிற்றுவித்து வருவதல்ல, அது இயற்கையாக தோன்றும் என்பதெல்லாம் ஆயிரத்தில் ஒருவருக்கும் நடக்கலாம். இங்கே எழுத விரும்புகிற பலருக்கும் தயக்கமும் பயமும் இருக்கிறது, இந்த பட்டறைகள் அதை உடைக்கும். புதிதாக கதவுகளை திறந்துவிடும்!
இலக்கியம் ஜனநாயகப்படுத்தப்பட இதுபோன்ற கல்வி அவசியம். சில ஆண்டுகளுக்கு முன்பு வலைப்பதிவர்களுக்காக நடத்தப்பட்ட சிறுகதை பட்டறை பலரையும் எழுத்தாளர்களாக ஆக்கியது என்பது நினைவுக்கு வருகிறது.
இளங்கோவுக்கும் அபிலாஷூக்கும் வாழ்த்துகள். அவர்களை பின்பற்றி மற்ற எழுத்தாளர்களும் கூட இதுபோன்ற பட்டறைகளை நடத்த முன்வரவேண்டும்.









Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...