சினிமா சார்ந்து வருடத்திற்கு 365 நாளும் 365 பயிற்சி பட்டறைகள் நடக்கின்றன. நடிப்பு, திரைக்கதை, எடிட்டிங், இசை, லைட்டிங் லொட்டு லொசுக்கு என ஏகப்பட்ட பட்டறைகளை நடத்துகிறார்கள். இந்த ஒரு நாள் பட்டறைகளுக்கு குறைந்தது ஐந்தாயிரமாவது வாங்குகிறார்கள். அதிலும் பிரபலங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். சமீபத்தில் வெற்றிமாறன் நடத்திய ஒருநாள் வகுப்புக்கு எட்டாயிரமோ பத்தாயிரமோ வாங்கியதாக கேள்விப்பட்டேன். இதைப்பற்றியெல்லாம் யாருக்கும் எந்த விமர்சனங்களும் இருப்பதில்லை. யாருமே ஒரேநாளில் இயக்கம் கத்துக்க முடியுமா, ஒரே நாளில் நடிப்பு வந்துவிடுமா என்று கேட்டு காமெடி பண்ணுவதில்லை. ஆனால் இலக்கிய பயிற்சி வகுப்பு என்றதும் ஏகப்பட்ட கேலிகள் நையாண்டிகள் வந்துவிடுகிறது.
நண்பர் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் வாசகசாலை சார்பாக ஒரு கவிதை பட்டறையை நடத்துகிறார். ஒருநாள் பயிற்சி. அதற்குரிய பாடத்திட்டத்தை நேற்று பகிர்ந்திருந்தார். அதுவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இது நவீன கவிதைக்குள் நுழைய விரும்புகிற இளம் வாசகருக்கு கவிஞருக்கு ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும். நானும் கூட நேரம் கிடைத்தால் கலந்துகொள்ள நினைத்திருக்கிறேன். அருமையான முன்னெடுப்பு இது. ஆர்வமுள்ளோருக்கு பயன்படும்.
இந்த பட்டறை ஏற்பாட்டளர்களுக்கு ஒரு தயக்கம் இருக்கிறது. அதனாலேயே இது பத்திரிகை வளர்ச்சி நிதிக்காக என்றெல்லாம் சோகமாக பேசுகிறார்கள். அதெல்லாம் தேவையே இல்லை. கவிதை கற்றுக்கொள்ள காசு கேட்டால் என்ன தப்பு… இதுபோல இன்னும் பல கட்டணப்பட்டறைகள் நடக்க வேண்டும். நவீன கவிதைகளுக்குள் எல்லோரும் வரவேண்டும்.
ஆச்சர்யமாக நண்பரும் எழுத்தாளருமான அபிலாஷூம் நாவல் எழுத பயிற்சி பட்டறைகளை நடத்த இருக்கிறார். ஒருநாள் பட்டறை அல்ல. இது இரண்டுமாதங்கள் நடக்க இருக்கிற வாரயிறுதி வகுப்புகள்.
அபிலாஷ் பல ஆண்டுகளாக கல்லூரிகளில் இலக்கியம் பயிற்றுவிக்கிற ஆசிரியர் என்பதால் நிச்சயம் அவருடைய பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். அனேகமாக தமிழில் அவர் அளவுக்கு இலக்கியத்தை டெக்னிக்கலாக பிரித்து மேய்ந்து பாகம் பிரித்தவர் யாரும் இருக்க முடியாது. சுஜாதாவில் தொடங்கி ஜெயமோகன் சாரு வரை எல்லா வகைமை எழுத்தாளர்களையும் அக்கு அக்காக பிய்த்து போட்டு தொழில்நுட்பம் பேசி இருக்கிறார். நாவல் என்பதன் வடிவம் தொடங்கி அதன் வசனங்கள் வரை எது முக்கியம் எது அவசியமில்லை என அவர் எழுதிய எண்ணற்ற கட்டுரைகளே அவருடைய திறனுக்கு சான்றாக இருக்கும். அவருடைய பட்டறையில் கலந்துகொள்வது நிச்சயம் பயன்தருவதாகவே இருக்கும். (மேலதிக தகவல்களுக்கு அவருடைய பேஸ்புக் பக்கத்தை பார்க்கவும்)
உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் இலக்கியம் என்பது கற்றுத்தரப்படுகிற ஒன்றாகத்தான் இருக்கிறது. அங்கெல்லாம் கவிதை நாவல் சிறுகதை என எல்லாமே பயிற்றுவிக்கப்படுகிறது. நம்மூரில்தான் இலக்கியம் என்றாலே ஓசிதான்! புத்தகமும் வாங்கமாட்டார்கள் காசும் கொடுக்க மாட்டார்கள் கற்றும் கொடுக்கமாட்டார்கள்.
எகத்தாளத்திற்கு பஞ்சம் இருக்காது. இலக்கியம் பயிற்றுவித்து வருவதல்ல, அது இயற்கையாக தோன்றும் என்பதெல்லாம் ஆயிரத்தில் ஒருவருக்கும் நடக்கலாம். இங்கே எழுத விரும்புகிற பலருக்கும் தயக்கமும் பயமும் இருக்கிறது, இந்த பட்டறைகள் அதை உடைக்கும். புதிதாக கதவுகளை திறந்துவிடும்!
இலக்கியம் ஜனநாயகப்படுத்தப்பட இதுபோன்ற கல்வி அவசியம். சில ஆண்டுகளுக்கு முன்பு வலைப்பதிவர்களுக்காக நடத்தப்பட்ட சிறுகதை பட்டறை பலரையும் எழுத்தாளர்களாக ஆக்கியது என்பது நினைவுக்கு வருகிறது.



Comments