மருத்துவர் எழிலன் எம்.எல்.ஏவை இன்று சந்தித்தேன்.
பெரிய பேச்சுப்பிரியர். சுவைபட பேசிக்கொண்டே இருக்கிறார். வற்றாத ஆற்றல். நான் அவரிடம் தனிப்பட்ட முறையில் உரையாட நேரம் வாய்த்தபோது என்னுடைய சொந்த ஊர், பெங்களூரில் வேலை பார்க்க வந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என விசாரித்தார். சொன்னேன். கூடுதலாக இந்த ஊரில் இருக்க வெளிநாட்டில் இருப்பதைப் போலிருக்கிறது, தமிழகத்தில் இருக்கிற ஒரு பண்பாட்டு உணர்வாற்றல், சக எழுத்தாளர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு தரும் தூண்டுதல்கள் தமிழ் பேசும் சூழலில் எழுத்தாளருக்குக் கிடைக்கும், அதீத உற்சாகம், ஊக்கம் பெங்களூரில் இல்லை என்றேன். அவர் அதற்கு தன் வாழ்வில் இருந்து ஒரு சுவையான உதாரணத்தை சொன்னார்.
அவர் மருத்துவராகப் பணியாற்றும் போது பாம்பின் விடத்தை பரிசோதிக்க ஆய்வகத்தில் பாம்புகளை வளர்த்திருக்கிறார்கள். அவற்றின் விடத்தை சோதித்த போது அவை வயலிலும் காட்டிலும் கிடைக்கும் பாம்பின் விடத்தில் இருந்து பல மடங்கு குறைவான வீரியத்துடன் இருப்பதாகத் தெரிய வந்ததாக சொன்னார். ஏனென்றால் இயற்கையில் இருக்கும் பாம்புகள் இயற்கையான உணவை வேட்டையாடிப் பெறும், அங்கு பல ஆபத்துகளை அனுதினமும் சந்திக்கும், ஆகையால் வீரியமான விடத்தைப் பெற்றிருக்கும். ஆய்வக பாம்புகள் கார்ப்பரேட் / வெளியூர் சூழலில் அந்நியப்பட்டு வாழும் மனிதர்களைப் போன்றவை. அவற்றுக்கு விடத்தின் அவசியம் இல்லை. 2017இல் நான் பெங்களூருக்குப் போகப் போவதாக சொன்ன போது 'ஒரு எழுத்தாளரின் படைப்பாற்றல் அகத்தில் இருந்து மட்டுமல்ல அவரது மரபுடனும் பேச்சுமொழி, பண்பாட்டு அசைவுகள் மற்றும் அரசியலுடனான சூழலுடனான நேரடித் தொடர்பில் இருந்து வருகிறது' என்று ஜெயமோகன் என்னிடம் சொன்னார். எனக்கு சட்டென்று அது நினைவுக்கு வந்தது. அதே நேரம் இந்த அந்நியப்பட்ட சூழலின் தனிமையே என்னை இன்னும் ஆவேசமாக அதிகமாக வாசிக்கவும் எழுதவும் வைத்தது.
ஒரு இனிய சுவாரஸ்யமன சந்திப்பு. நாளை மருத்துவர் எழிலன் எங்கள் பல்கலையில் ஒரு கலந்துரையாடலில் கலந்துகொள்கிறார், பேசுகிறார். அதைக் கேட்கும் ஆவலில் இருக்கிறேன்.

Comments