Skip to main content

டி20 உலகக்கோப்பை அணி


 

இதுதான் வரப் போகும் டி20 உலகக்கோப்பைக்காக இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தேர்வு செய்துள்ள அணி:

ரோகித் சர்மா (கேப்டன்),
யஷஸ்வி ஜெய்ஸ்வால்,
விராட் கோலி,
சூரியகுமார் யாதவ்,
ரிஷப் பந்த்( விக்கெட் கீப்பர்),
சஞ்சு சாம்சன்( விக்கெட் கீப்பர்),
ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்),
ஷிவம் துபே,
ரவீந்திர ஜடேஜா,
அக்சார் பட்டேல்,
குல்தீப் யாதவ்,
யுவேந்திர சஹல்,
அர்ஷ்தீப் சிங்,
ஜஸ்பிரித் பும்ரா,
முகமது சிராஜ்
மாற்று வீரர்கள்:
சுப்மன் கில்
ரிங்கு சிங்
கலீல் அஹ்மத்
ஆஷிஷ் கான்
இந்த அணியின் தேர்வே செம உதை வாங்கி வருகிறது. அந்தளவுக்கு எந்த லாஜிக்கும் இல்லாத தேர்வுகள் கொண்டிருக்கிறது. முதல் பிரச்சினை கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச டி20 போட்டிகளில் ஆடாத ரோஹித்தும் கோலியும் தேர்வாகி இருப்பது. இதனால் அவர்கள் இல்லாத போது ஆடி வந்த இந்திய அணியை முழுக்க மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் அணியில் சமநிலை குலைந்துவிட்டது என பி டாக் பிரசன்னா சொல்வதே என் கருத்தும். கடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்த இரண்டு சீனியர் மட்டையாளர்களும் நன்றாக ஆடி இறுதிப்போட்டி வரை கொண்டு வந்தனர். ஆனால் 50 ஓவர் வடிவத்தில் புகழ் மங்கிவிட்டது, அது வருங்காலத்தில் குறைவாகவே ஆடப்படும் என இவர்கள் அறிவார்கள். அதனால் இன்னொரு உலகக்கோப்பையில் ஆட வேண்டும் எனும் ஆசை வந்துவிட்டது. கூடவே அடுத்த 3-5 ஆண்டுகள் ஐ.பி.எல்லில் ஆடி சம்பாதிக்க வேண்டும். சர்வதேச போட்டிகளில் டி20 ஆடாவிட்டால் ஒருவேளை தம் ஐ.பி.எல் மதிப்பு போய்விடுமோ என அஞ்சுகிறார்கள். மேலும் இருவருடைய மோசமான ஸ்டிரைக் ரேட் குறித்து இப்போதே பரவலான அதிருப்தி இருக்கிறது. 2026இல் ரோஹித் ஷர்மாவை ஏலத்தில் எடுக்க மாட்டார்கள். கோலியின் ஏல மதிப்பும் வீழ்ந்துவிடும். இதைத் தடுப்பதற்காகவே இவர்கள் வரும் உலகக்கோப்பையில் ஆட முடிவெடுக்கிறார்கள். முழுக்க முழுக்க சுயநலமான முடிவு. இவர்கள் நட்சத்திர வீரர்கள், அணித்தலைவர், முன்னாள் அணித்தலைவர் என்பதால் இவர்களுடைய இடத்தில் ஆடிய இளம் வீரர்களையும் அணியில் சமநிலையையும் பலிகொடுக்க தேர்வாளர்களும் வாரியமும் முடிவு செய்தனர்.
பொதுவாக ஒரு மூத்த வீரரிடம் புதிய அணியை ஒப்படைத்தால் அவர் தன்னுடன் ஆடி வந்த அதே வயதான மாடுகளைத் தான் வண்டியில் பூட்ட விரும்புவார். பலவீனமானவர்கள் தம்முடன் பலவீனமானவர்கள், நிலைபெறாதவர்களையே வைத்துக்கொள்ள விரும்புவர். அதுவே பாதுகாப்பின்மையின் உளவியல். அப்போதுதான் ரோஹித்துகள் மீது விமர்சனம் இருக்காது. ரோஹித்தின் மட்டையாட்டம் மெதுவாக இருந்தால், சொதப்பினால் பிற சொதப்பல் பேர்வழிகளுடன் சேரும் போது அது ஓக்கேவாக தெரியும். தோல்வியைப் பகிர்வது சற்று ஆறுதலாக இருக்கும். ரோஹித் தேர்ந்துள்ள அணி இப்படியானதே.
சரி இந்த அணியின் பலவீனங்கள் எவை:
1) ஜெய்ஸ்வாலையும் துபேவையும் விட்டால் சுழலர்களை சிக்ஸ் அடிக்க ஆட்கள் வேறு இல்லை.
2) சூர்யாவை விட்டால் வேகவீச்சை சிக்ஸ் அடிக்க ஆளில்லை.
இம்மூவரையும் விட்டால் நல்ல டி20 சாதனை வரலாறு கொண்டவர்கள் யாருமில்லை. கோலியும், ரோஹித்தும் 50 ஓவர் போட்டிகளில் ஆடும் அளவுக்கு டி20யில் சோபிப்பதில்லை. ஒற்றை ஓட்டமும் நான்குமே அவர்களுடைய வலிமைகள். மெத்தனமான ஆடுதளங்களில் இந்த வலிமையும் மாயமாகிவிடும். ரோஹித்துக்கு மொத்த ஸ்டிரைக் ரேட் 139. 2022இல் தான் கடைசியாக அதிக போட்டிகள் ஆடினார். 29 போட்டிகளில் 24.29 சராசரி. ஸ்டிரைக் ரேட் 134 (மூன்றே போட்டிகள் ஆடி 121 ரன்கள் எடுத்த 2024 ஆம் ஆண்டை நான் பொருட்படுத்தவில்லை.) 2022இல் கோலி 55.78 சராசரியில் 781 ரன்கள் அடித்தாலும் அவரது ஸ்டிரைக் ரேட் 138 மட்டுமே. பொதுவாக குறைவாக ரிஸ்க் எடுக்கும் மட்டையாளர்களால் நல்ல சராசரியில் நிறைய ரன் அடிக்க முடியும். ஆனால் அது அவர்களுடைய அணியின் மொத்த ஸ்கோரை 40-50 ரன்கள் குறைத்து விடும். அதன் பெயரே தன்னல ஆட்டம். கோலி நம் டி20 யுகத்தின் அதீத சுயநலவாதி.
3) ஷிவம் தூபெ நல்ல தேர்வே. ஆனால் ரிஷப் பண்டின் டி20 சாதனை வரலாறு மோசமானது. இதை ஒரு செண்டிமெண்டல் தேர்வு எனலாம்.
4) 66 போட்டிகளில் 22 சராசரி. ஸ்டிரைக் ரேட் 126. பண்டின் சாதனைகள் டெஸ்டில் மட்டுமே. ஏனெனில் டி20களில் பவுண்டரியில் களத்தடுப்பாளர்கள் அதிகம். பண்டால் அந்த கள அமைப்பை மீறி ரன் அடிக்க முடிவதில்லை. தொடர் தோல்விகள் காரணமாக அவர் இப்போது உயர்வான ஸ்டிரைக் ரேட்டில் ஆடுவதும் இல்லை. ஐ.பி.எல் சாதனைகளை வைத்து அவரை மதிப்பிடலாம் என்றால் அதிலும் அவரது ஸ்டிரைக் ரேட் 145 தான். 66 போட்டிகளில் ஆடி தோல்வி அடைந்தவரை ஏன் நேரடியாக உலகக் கோப்பை அணியில் கொண்டு வர வேண்டும்.
5) சஞ்சு சாம்சன் திறமையானவர் என்றாலும் சர்வதேச போட்டிகளில் அவர் கவனமாக நிதானமாக அடிப்பதில்லை. தன்னம்பிக்கையின்மையா கவனமின்மையா எனத் தெரியவில்லை. ஆனால் இவ்வளவு வாய்ப்புகள் கிடைத்தும் 25 போட்டிகளில் 18 சராசரியில் 133 ஸ்டிரைக் ரேட்டில் அடித்துள்ளவரை 9 போட்டிகளில் 147 ஸ்டிரைக் ரேட்டில் ஆடிய இளைஞரின் (ஜிதேஷ் ஷர்மா) இடத்தில் ஏன் எடுக்க வேண்டும்? அதுவும் இந்த ஐ.பி.எல்லிலே ஒரு தலைவராக ஒரு போட்டியை வேண்டுமென்றே எதிரணிக்கு விட்டுக்கொடுக்க தயாரான ஒரு வீரரரை எந்த நம்பிக்கையில் இந்திய அணிக்கு எடுக்க முடியும்?
6) ஹர்த்திக்கும் ஜடேஜாவும் சரியான மட்டையாட்ட ஆட்டநிலையில் இல்லை. ஆனாலும் ஆல்ரவுண்டர்களாக உதவுவார்கள்.
ஆனால் ஜடேஜாவின் மாற்றாக அக்ஸரை எடுத்திருப்பது மட்டமான முடிவு. டி20யில் அவரால் போட்டிகளை வெல்ல முடியாது. ரோஹித்தே அவரது 50 ஓவர் ஆட்டத்தை வைத்து எடுத்திருப்பதாக சொல்கிறார். எனில் பூஜாராவின் டெஸ்ட் ஆட்டத்தை வைத்து அவரது 50 ஓவர்கள் அணியில் சேர்க்கலாமா? அதுவும் உலகக் கோப்பையின் போதுதான் சோதனைகள் செய்ய வேண்டுமா?
7) சஹலின் தேர்வும் முட்டாள்தனமான வியூகம். அவரையும் குல்தீப்பையும் சேர்த்து ஆட வைக்க முடியாது. அது மட்டையாட்டத்தை மட்டுமல்ல களத்தடுப்பையும் பாதிக்கும். மேலும் இருவரும் ஆடினால் மத்திய ஓவர்களில் அவர்களில் ஒருவர் சிக்ஸர்களுக்குப் போனால் கடைசி 5 ஓவர்களை வீச பும்ரா, அர்ஷ்தீப்பின் ஓவர்கள் மீதமிருக்காது. இது பெரிய ரிஸ்க்காகும்.
😎 இளமையும் வலுவான ஸ்டிரைக் ரேட்டுமே டி20 போட்டிகளை வெல்ல உதவும். வயதும் அனுபவமும் ரன்களும் அல்ல. 60 பந்துகளில் அடிக்கப்படும் 80ஐ விட 20 பந்துகளில் அடிக்கப்படும் 40 மேலானது. இது நான் சொல்வது அல்ல. உலகம் முழுக்க டி20 அணிகளின் உத்தி இதுதான். இந்திய அணி மட்டும் தான் டி20யை 50 ஓவர் பாணியில் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால நாம் வீரர்களின் நட்சத்திர மதிப்பும், ஊடக வியாபாரத்தின் தேவையுமே முக்கியமென நினைக்கிறோம். வெல்வது ரெண்டாம் பட்சமே. இந்த அணி உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு மிக மிக குறைவே என அகார்க்கருக்கும் தெரியும். ஆனால் அவரது கைகள் கட்டப்பட்டுள்ளன.
9) பந்துவீச்சில் சிராஜின் தேர்வு ரோஹித்துக்கு அவர் மீதுள்ள பாசத்தைத் தாண்டி எந்த ஞானத்தையும் காட்டவில்லை. சிராஜ் எந்தளவுக்கு மட்டமான டி20 வீச்சாளர் என உலகமே அறியும். ஆவேஷ் கான் மட்டுமே ஓரளவுக்கு சுமாரான ஆட்ட வரலாற்றைக் கொண்டவர். ஆனால் கலீல் அஹமது இந்த ஐ.பி.எல்லின் நன்றாக வீசினாலும் அவர் இதுவரை ஒரு சர்வதேச டி20யிலும் ஆடியதில்லை.
10) மூன்று வேகவீச்சாளர்களையும் 5 சுழலர்களையும் எடுத்ததன் லாஜிக்கும் புரியவில்லை. ஆடுதளங்கள் ஸ்விங் ஆகவோ சுழலவோ செய்யாது என ஐ.ஸி.ஸியே சொல்லிவிட்ட பிறகு எந்த நம்பிக்கையில் இதை செய்கிறார்கள்? நீங்கள் கடைசியாக எந்த உலகக் கோப்பைத் தொடரில் பந்து திரும்பியதைப் பார்த்தீர்கள்? 1996இல்? 2014இல்? காலம் அதன் பிறகு வெகுவாக மாறிவிட்டது. ஆனால் ரோஹித்தும் அகார்க்கரும் ஐயோ பாவம் சஹலும் அக்ஸரும் இதற்கு மேல் எப்போது உலகக்கோப்பையில் ஆடுது என செண்டிமெண்டலாக யோசித்து தேர்வு செய்திருக்கிறார்கள்.
11) ஸ்குவாடில் மூன்றே வேக வீச்சாளர்கள் உள்ள நிலையில் ஒரு போட்டியில் இரண்டு வேகவீச்சாளர்களுடன் ஆடும் ஒரு போட்டியின் பாதியில் ஹர்த்திக் காயம் அடைந்தால் எங்கு போவார்கள்?
12) மேற்சொன்ன சீனியர்களின் ரிடையர்மெண்ட் பிளான் அனுதாப முடிவுகளின் விளைவாகத் தான் கடந்த ஓராண்டாக இந்தியாவின், உலகின் தலைசிறந்த பினிஷராக விளங்கிய ரிங்கு சிங்கை பிரதான 15 பேர் ஸ்ஸ்குவாடில் எடுக்கவில்லை.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...