தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் எடுத்துள்ள மாட்டு வண்டி அணியைக் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள்ளன. வேறு வழியில்லாமல் ரோஹித் ஷர்மாவும் அகார்க்கரும் ஊடக சந்திப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அந்த அணியைப் பற்றி என் பார்வையை தனியாக எழுதுகிறேன்.
கீழே வருவது டி20 உலகக் கோப்பைக்கான என்னுடைய 15 வீரர்கள் கொண்ட அணி:
ஜெய்ஸ்வால்
சூர்யகுமார் யாதவ் (தலைவர்)
ஷிவம் தூபெ
ரிங்கு சிங் (பினிஷர்)
ஹர்த்திக் பாண்டியா (ஆல் ரவுண்டர்)
ஜிதேஷ் ஷர்மா (கீப்பர்)
ரவீந்திர ஜடேஜா (ஆல் ரவுண்டர்)
குல்தீப் யாதவ்
சந்தீப் ஷர்மா
அர்ஷ்தீப் சிங்
நடராஜன்
பும்ரா
ரவி பிஷ்னோய்
அபிஷேக் ஷர்மா
ரிசர்வ் வீரர்கள்
நிதீஷ் குமார் ரெட்டி (ஆல் ரவுண்டர்)
ஷஷாங்க் சிங் (பினிஷர்)
அஷுதோஷ் ஷர்மா (கீப்பர்)
சாய் கிஷோர்
திலக் வர்மா / பராக் (மத்திய வரிசை - எண் 4 வீரர்)
என்னுடைய அணியில் 180-220 ஸ்டிரைக் ரேட்டில் ஆடும் இளம் மட்டையாளர்களே துவக்க வீரர்கள். 3, 4 எண்களில் வலது, இடது கை அதிரடி வீரர்கள். அதன் பிறகு மூன்று பினிஷர்கள் வருகிறார்கள். ஒருவேளை சீக்கிரமே விக்கெட்கள் விழுந்தால் ஜடேஜாவை சூர்யாவுடன் ஆட எண் 4க்கு அனுப்பலாம். அதே போல 5 விக்கெட்டுகள் விழுந்தாலும் அவரால் அணியின் வீழ்ச்சியை கட்டுப்படுத்தி குறைவான ரன் ரேட்டில் சில ஓவர்கள் தாக்குப்பிடித்து பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியும். பந்து நின்று வராத பட்சத்தில் குல்தீப்பின் இடத்தில் ஒரு சந்தீப் ஷர்மா வருவார். எண் 7 வரை 20 ஓவர் போட்டிகளில் மட்டையாளர்கள் போதும் என்பது என் நம்பிக்கை. அதற்கு மேல் ஆல்ரவுண்டர்கள் வருவது அணியை பலவினப்படுத்துமே அன்றி வலுவாக்காது. அப்படியே ஒரு மெத்தனமான ஆடுதளத்தில் கூடுதலாக சுழலர் வேண்டுமெனில் அபிஷேக் ஷர்மாவை ரித்துராஜின் இடத்தில் எடுக்கலாம். பும்ரா, அர்ஷ்தீப், நடராஜன், ஹர்த்திக் பாண்டியா வேகவீச்சாளர்கள். ஹர்த்திக்கும் அர்ஷ்தீப்பும் பும்ராவும் துவக்க பந்துவீச்சாளர்கள். இடதுகை மட்டையாளர்கள் வரும் போது நடராஜன், அர்ஷ்தீப், பும்ரா ஆளுக்கு ஒரு ஓவர் வீசலாம். ஹர்த்திக்கும் வீசலாம். வலது கையாளர்களுக்கு ஜடேஜா. அபிஷேக்கை அணியில் வைத்திருப்பது ஒருவேளை ஹர்த்திக்குக்கு ஆட்டத்தின் நடுவே காயம்பட்டால் சமாளிக்க உதவும். (ஒருவேளை எதிரணியில் இடதுகை மட்டையாளர்களே அதிகம் எனில் ரியான் பராக்கையோ திலக்கையோ துபேவின் இடத்தில் எடுக்கலாம். துபேவின் பந்து வீச்சு பள்ளிக்குழந்தைகளுக்கு எதிராக மட்டுமே எடுபடும். இவர்கள் இருவரும் சுமாராக ஆப் ஸ்பின் போடுவார்கள்.)
அடுத்து ரிசர்வ் வீரர்கள். ஹர்த்திக்குக்கு காயம் பட்டால் தற்காலிகமாக அவரிடத்தில் நிதீஷை ஆட வைக்கலாம். அவருக்கு மட்டையாட்ட திறனும் ஓரளவுக்கு தடுப்பாட்டமாக பந்துவீசவும் வரும். அபாரமான களத்தடுப்பாளர். ஜிதேஷ் இதுவரை இந்திய டி20 அணியில் ஆட வைக்கப்பட்டதால் நான் அவருக்கு வாய்ப்பளிப்பதே சரியென நினைக்கிறேன். அவரும் ரிங்குவும் நன்றாக கூட்டணி வைப்பார்கள். ஆனால் ஜிதேஷால் சரிவர ஆட முடியாதபட்சத்தில் அஷுதோஷ் ஷர்மாவே என் தேர்வு. ஜடேஜாவுக்கு சிறிய காயம் உள்ளதென நினைக்கிறேன். அவருக்கு திடீரென காயம் ஏற்பட்டால் மாற்றாக அக்ஸரை எடுக்க முடியாதபடிக்கு அவரது பந்துவீச்சு மட்டம். அதனால் சாய் கிஷோரை எடுப்பேன். கிஷோரால் தன் பந்துவீச்சைக் கொண்டே ஒரு போட்டியை வென்றளிக்க முடியும்.
நடராஜனுக்கும் உடற்தகுதி எப்போதுமே சற்று ததிக்கிணத்தோம் தான். அவருக்கு மாற்று வீரரகாவே சந்தீப் ஷர்மாவைப் பார்க்கிறேன். அவரால் துவக்க ஓவர்களில் ஸ்விங் பண்ணவும் கடைசி ஓவர்களில் செமையாக மெதுபந்துகளை வீசி கட்டுப்படுத்தவும் முடியும்.
சூர்யாவை நான் அணித்தலைவராக பார்ப்பது அவரை கவனித்தவரை தலைமைப் பண்பு அவரிடம் நிச்சயமாக உள்ளது என்பதாலே. மேலும் அவரே இன்று உலக அளவில் சிறந்த டி20 மட்டையாளர்.
இந்த அணி தேர்வாகி இருந்தால் ஒரு கலக்கு கலக்கியிருக்கும். வென்றாக வேண்டும் எனும் நெருக்கடி இல்லாததால் ஜாலியாக ஆடி அரை இறுதியிலும் வெல்வார்கள். ஆனால் வயதானவர்களால் அது முடியாது. பழைய தோல்விகளை தவிர்ப்பதே வெற்றி என நினைப்பவர்கள் அவர்கள். சுயநலத்தின் பாதுகாப்பின்மையின் சிகரங்களாக ஆடி கடுப்பேற்றுவார்கள். அதனாலே வயதான வீரர்கள் இந்த அணியில் இல்லை.
Comments