மெல்ல மெல்ல சீமான் தன்னவர் என அடையாளம் காட்டுவோர் மட்டுமே தமிழர் என்றாகும். அப்போது அனேகமாக ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் தாம் தமிழர் அல்லவோ எனும் அச்சமும் பதற்றமும் குழப்பமும் வழிநடத்தும். ஆகையால் தொடர்ந்து யாரையாவது அ-தமிழர் எனக் கட்டமைக்கத் தலைப்படுவர். இது அடிப்படையில் கண்ணைக் கட்டிக்கொண்டு நிற்பவரை ஒருவர் மற்றவரைத் தொடும்பட்சத்ததில் அவரிடம் தொடப்பட்டவர் வந்துவிடும் கண்ணாமூச்சி விளையாட்டுதான். இத்தகைய சித்தாந்தம் சைக்கோத்தனமானது - இது மொத்த சமூகத்தையும் பைத்தியம் பிடிக்கச் செய்யும்.
இந்தியாவுக்குள் மக்கள் நகர்ந்துகொண்டே இருப்பது பல நூற்றாண்டுகளின் இயல்பென்பதால் மூர்க்கமான இன வரையறைகள் எடுபடாது, அதன் பெயரிலான தேசியமும் அபத்தமாகும். சீமான் அதனால் தமிழரை இனமென்று அழைப்பதை கவனியுங்கள். மொழிக்குடும்பம் இருப்பதைப் போல மொழிசார் இனம் சாத்தியமில்லை என்பதே உண்மை. தமிழ் மொழியிலே 'சங்கம்' என்பதில் வரும் 'ஸ'வுக்கு எழுத்தில்லை என்பதை கவனியுங்கள். எப்படி வடமொழியின் ஓசை சங்கத்தமிழுக்கு வரமுடியும்? கஸப்பு என்போமா கச்சப்பு என்போமா? மோசம் என்போமா மோச்சம் என்போமா? இந்த ஸ பௌத்தர்கள் வழியாக பாலி, சமஸ்கிருதம் வழியாக இங்கு வந்தது. அவர்களுக்கும் நமது பழம் இலக்கியம், இலக்கண நூல்களுக்கும் அறுக்க முடியாத தொடர்பு உண்டல்லவா! இந்த மொழியே கலவை மொழிதானே. இதையெல்லாம் மறுத்து கறுப்பு-வெள்ளைச் சட்டகத்தில் வைதது தமிழ் சமூகத்தைப் பார்க்கவே தமிழரை ஒரு மொழிபேசும் சமூகமாக அல்லாமல் இனமாக இவர்கள் பார்க்கிறார்கள். ஏனென்றால் இனமென்று வரும்போது அங்கு ஆய்வுகளை யாரும் பண்ணி நிரூபிக்க முடியாது. மொழியென்றால் அதன் தோற்றக் கதையாடல் குறித்து பல கேள்விகளை எழுப்பலாம். அடுத்து இது தமிழராக இருந்தும் தமிழல்லாதவர் எனும் கற்பிதமான வரையறையை, மாயாவியை உருவாக்கி அச்சுறுத்த உதவுகிறது. சீமானின் மொழியில் இந்த மாயாவி திராவிடர். ஹிட்லரும் இப்படித்தான் யூதர்களை ஒரு மதத்தைப் பின்பற்றுவோராக அன்றி இனமாகவே வரையறுத்தார் என்பதை கவனிக்க வேண்டும். மதம் என்பது நெகிழ்வானது. யாரும் மதத்தைத் தழுவ முடியும். ஆனால் இனம் உறுதியானது. அதைக் கேள்விக்குள்ளாக்கவோ மாற்றவோ முடியாது. கன்னட மொழியை சில தலைமுறைகளுக்கு முன் தாய்மொழியாகக் கொண்டிருந்த ஒருவர் தமிழராகவே இங்கு இருக்க முடியும். ஆனால் அதை மறுக்க சீமான் வகையறாக்கள் அவர்கள் தமிழ் மொழியினர், தமிழ் இனத்தவர் அல்ல, இரண்டும் வேறுவேறு என்கிறார்கள். இந்த தமிழ் இனம் எனும் கருத்துருவை நீங்கள் அறிவியல் ரீதியாக விளக்கவோ நிறுவவோ முடியாது. அதை அதற்கு எதிரியாகக் கருதப்படும் கருத்துருவைக் கொண்டே நிறுவ முடியும். திராவிடர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் தெரியுமா, திராவிடர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா, யார் தெரியுமா எனப் பேசுவதன் வழியாக அப்படி பாதிக்கப்பட்டவர் தமிழர் என்று கவனத்தைத் திருப்ப முடியும். தமிழ் இனத்தவர் யாரெனக் கேட்டால் சங்க காலம், முருகன் என்று கதைவிடுவார்கள். அதன் மீதும் கேள்வியெழுப்பினால் திரும்பவும் திராவிடரை விமர்சிக்கத் தொடங்குவார்கள். எதிர்-பரப்புரை இல்லாமல் அவர்களால் தமிழ் இனத்தை நிறுவவே முடியாது. ஹிட்லரும் இப்படியே ஆரிய இனத்தை வரையறுத்தார். தன் வாழ்வின் முடிவுவரை அவரால் ஆரியவாதத்தை விஞ்ஞானபூர்வமாக நிறுவ முடியவில்லை. திராவிட இனத்தவர் தமிழ் விரோதிகள் என்பது யூதர்கள் ஆரிய விரோதிகள் என்பதைப் போன்றதே.
இதைப் போன்ற நாஜி சிந்தனையை ஒருவர் வெளிப்படுத்த நவீன சமூகத்தில் நாம் அனுமதிக்கக் கூடாது.
Comments