Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சீமானின் நாஜி சிந்தனை


புத்தகக் காட்சியை மிகக் கொடூரமாக ஒருங்கிணைப்பதில் நாஜி வதைமுகாம் நிர்வாகிகளைப் போலச் செயல்படும் பபாஸியின் மேடையில் நவீன நாஜியான சீமான் தோன்றிப் பேசி சர்ச்சையானது வெகு பொருத்தமானது. உதாரணமாக, சீமான் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளரிடம் கேட்கிறார், "நீ யாரு சொல்லு, சொல்லு நீ தமிழனா? திராவிடன் தானே? உன்னை மாதிரி திராவிடர்கள்னு சொல்லிக்கிறவங்கதான் . ..". அவர் கேட்க உத்தேசித்தது " நீ என்னை ஆதரிக்கவில்லை என்றால் நீ தமிழனே அல்ல. நீ தெலுங்கனோ கன்னடனாவாக இருந்து திராவிடர் என்று முகமூடி அணிந்து ஏமாற்றி வாழ்கிறாய். என் கையில் நீ சிக்கினால் இம்மண்ணில் நீ வாழவே முடியாது." சம்மந்தப்பட்டவர் தான் தமிழனே என்றால் சில நூற்றாண்டுகளுக்கு முன் புலம்பெயர்ந்து வந்தவர்களின் வழித்தோன்றல் நீ என்று கூறுவார். இந்த மொழி அப்படியே நாஜிக் கட்சியினருடையது. எதிரிடையே உருவாக்கி வெறுப்பை விதைத்து அபத்தமான லாஜிக்கைக் கொண்டு மக்களைக் கட்டம் கட்டி அழித்து அந்த வன்முறையில் அதிகாரத்தைப் பெறும் உத்தி. இது தமிழ் தேசியமும் அல்ல. சீமான் தமிழ் தேசியத்தின் பெயரை பயன்படுத்தி முன்வைப்பது ஒரு மோசடிக் கொள்கை. அதன் பெயர் மொழிசார்ந்த இனவெறிக் கொள்கை. தமிழ் நாஜிவாதம். அதற்கும் தமிழுக்கும் கூட எந்த சம்மந்தமும் இல்லை அவர் நூற்றுகணக்கில் பணம் வாங்குவது காவி குஜராத்திகளிடம் இருந்துதானே. அதை மறைக்கத்தான் அவர் தனக்கு முன்வந்த ஒரிஜனல் தமிழ் தேசியவாதிகளின் பெயர்களை அடிக்கடி உதிர்க்கிறார். அவர்களைத் தன் பாட்டன், பூட்டன், ஐயன், மாமா, சித்தப்பா என்றெல்லாம் பெயரொட்டுக் கொடுத்து அழைக்கிறார். அவருக்கு ஈழத்தமிழரிடையே நிதிவசூலிக்க அவசியம் இருப்பதால் பிரபாகரனைத் தன் தந்தையாகச் சித்தரிக்கிறார். இவையெல்லாம் முகமூடிகள். அவரது உண்மையான கொள்கை ஒரு பொய்யான, அபத்தமான விளக்கத்தின் அடிப்படையில் தமிழரை தம் சக தமிழர் குறித்து ஐயமும் வெறுப்பும் கொள்ள வைப்பது. பிளந்து சதா அச்சத்த்தை விதைத்து அதன் மீது நின்று அதிகாரத்தை வெல்வது. உ.தா, நீங்கள் நா.த.கட்சியை ஆதரிக்கும்பட்சத்திலும் நீங்கள் ஒருவேளை தமிழர் இல்லையோ எனும் குழப்பத்திலே இருக்க வேண்டிவரும். ஏனென்றால் சீமானின் வரையறை மாறிக்கொண்டே இருக்கும். திடீரென்று ஒருவரை அண்ணன் என்பார், அடுத்த கணமே துரோகி, இன விரோதி என்பார். முருகனையும் சிவனையும் வழிபடாதவர் தமிழரே அல்லர் என்பார். அடுத்து அந்த வரையறையையும் மாற்றுவார்.
மெல்ல மெல்ல சீமான் தன்னவர் என அடையாளம் காட்டுவோர் மட்டுமே தமிழர் என்றாகும். அப்போது அனேகமாக ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் தாம் தமிழர் அல்லவோ எனும் அச்சமும் பதற்றமும் குழப்பமும் வழிநடத்தும். ஆகையால் தொடர்ந்து யாரையாவது அ-தமிழர் எனக் கட்டமைக்கத் தலைப்படுவர். இது அடிப்படையில் கண்ணைக் கட்டிக்கொண்டு நிற்பவரை ஒருவர் மற்றவரைத் தொடும்பட்சத்ததில் அவரிடம் தொடப்பட்டவர் வந்துவிடும் கண்ணாமூச்சி விளையாட்டுதான். இத்தகைய சித்தாந்தம் சைக்கோத்தனமானது - இது மொத்த சமூகத்தையும் பைத்தியம் பிடிக்கச் செய்யும்.

இந்தியாவுக்குள் மக்கள் நகர்ந்துகொண்டே இருப்பது பல நூற்றாண்டுகளின் இயல்பென்பதால் மூர்க்கமான இன வரையறைகள் எடுபடாது, அதன் பெயரிலான தேசியமும் அபத்தமாகும். சீமான் அதனால் தமிழரை இனமென்று அழைப்பதை கவனியுங்கள். மொழிக்குடும்பம் இருப்பதைப் போல மொழிசார் இனம் சாத்தியமில்லை என்பதே உண்மை. தமிழ் மொழியிலே 'சங்கம்' என்பதில் வரும் 'ஸ'வுக்கு எழுத்தில்லை என்பதை கவனியுங்கள். எப்படி வடமொழியின் ஓசை சங்கத்தமிழுக்கு வரமுடியும்? கஸப்பு என்போமா கச்சப்பு என்போமா? மோசம் என்போமா மோச்சம் என்போமா? இந்த ஸ பௌத்தர்கள் வழியாக பாலி, சமஸ்கிருதம் வழியாக இங்கு வந்தது. அவர்களுக்கும் நமது பழம் இலக்கியம், இலக்கண நூல்களுக்கும் அறுக்க முடியாத தொடர்பு உண்டல்லவா! இந்த மொழியே கலவை மொழிதானே. இதையெல்லாம் மறுத்து கறுப்பு-வெள்ளைச் சட்டகத்தில் வைதது தமிழ் சமூகத்தைப் பார்க்கவே தமிழரை ஒரு மொழிபேசும் சமூகமாக அல்லாமல் இனமாக இவர்கள் பார்க்கிறார்கள். ஏனென்றால் இனமென்று வரும்போது அங்கு ஆய்வுகளை யாரும் பண்ணி நிரூபிக்க முடியாது. மொழியென்றால் அதன் தோற்றக் கதையாடல் குறித்து பல கேள்விகளை எழுப்பலாம். அடுத்து இது தமிழராக இருந்தும் தமிழல்லாதவர் எனும் கற்பிதமான வரையறையை, மாயாவியை உருவாக்கி அச்சுறுத்த உதவுகிறது. சீமானின் மொழியில் இந்த மாயாவி திராவிடர். ஹிட்லரும் இப்படித்தான் யூதர்களை ஒரு மதத்தைப் பின்பற்றுவோராக அன்றி இனமாகவே வரையறுத்தார் என்பதை கவனிக்க வேண்டும். மதம் என்பது நெகிழ்வானது. யாரும் மதத்தைத் தழுவ முடியும். ஆனால் இனம் உறுதியானது. அதைக் கேள்விக்குள்ளாக்கவோ மாற்றவோ முடியாது. கன்னட மொழியை சில தலைமுறைகளுக்கு முன் தாய்மொழியாகக் கொண்டிருந்த ஒருவர் தமிழராகவே இங்கு இருக்க முடியும். ஆனால் அதை மறுக்க சீமான் வகையறாக்கள் அவர்கள் தமிழ் மொழியினர், தமிழ் இனத்தவர் அல்ல, இரண்டும் வேறுவேறு என்கிறார்கள். இந்த தமிழ் இனம் எனும் கருத்துருவை நீங்கள் அறிவியல் ரீதியாக விளக்கவோ நிறுவவோ முடியாது. அதை அதற்கு எதிரியாகக் கருதப்படும் கருத்துருவைக் கொண்டே நிறுவ முடியும். திராவிடர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் தெரியுமா, திராவிடர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா, யார் தெரியுமா எனப் பேசுவதன் வழியாக அப்படி பாதிக்கப்பட்டவர் தமிழர் என்று கவனத்தைத் திருப்ப முடியும். தமிழ் இனத்தவர் யாரெனக் கேட்டால் சங்க காலம், முருகன் என்று கதைவிடுவார்கள். அதன் மீதும் கேள்வியெழுப்பினால் திரும்பவும் திராவிடரை விமர்சிக்கத் தொடங்குவார்கள். எதிர்-பரப்புரை இல்லாமல் அவர்களால் தமிழ் இனத்தை நிறுவவே முடியாது. ஹிட்லரும் இப்படியே ஆரிய இனத்தை வரையறுத்தார். தன் வாழ்வின் முடிவுவரை அவரால் ஆரியவாதத்தை விஞ்ஞானபூர்வமாக நிறுவ முடியவில்லை. திராவிட இனத்தவர் தமிழ் விரோதிகள் என்பது யூதர்கள் ஆரிய விரோதிகள் என்பதைப் போன்றதே.

இதைப் போன்ற நாஜி சிந்தனையை ஒருவர் வெளிப்படுத்த நவீன சமூகத்தில் நாம் அனுமதிக்கக் கூடாது.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...