அசலான பாசிசம் அரசமைப்பில் அல்ல தனியாரிலே பரவலாக உள்ளது என்று நான் கூறுவது இதனாலே. இலக்கை அடையாத ஊழியர்களை மிரட்டியும் அச்சுறுத்தியும் பணிய வைப்பதைப் போல அவர்களை சுயமாகத் தண்டித்து அதை நடிக்க வைப்பது இன்னொரு நவீன பாணி. அவர்கள் தமது சுயமரியாதையை இழந்தபின்னர் எவ்வளவு வேண்டுமெனினும் சுரண்டலாம் என்பதே இந்த உபாயத்தின் நோக்கம். எனது "நிழல் பொம்மை" நாவலிலும் இப்பிரச்சினையை வேறுவிதமாக - மீசையின் அளவைப் பரிசோதிக்கும் நடைமுறையாகச் சித்தரித்துப் - பேசியிருக்கிறேன். பாசிசத்தை முதலீட்டியம் ஆதரிப்பதாலே அது மத்தியில் ஆளுகிறது!
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கருத்துகள்