இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி ரொம்ப சுவாரஸ்யமாகப் போகிறது. ஆடச் சிரமமான ஆடுதளம். பந்து ஸீம் ஆகிறது (தையலில் பட்டு ஆட்டமாய் அசைகிறது), ஸ்விங் ஆகிறது (குளிர் சீதோஷ்ணம், மழை மேகமூட்டத்தால் காற்றிலே அலைகிறது). முதலில் மட்டையாடிய இந்தியா 224 எடுத்தால் அடுத்து ஆடிய இங்கிலாந்து 247. அடுத்து ஆடிய இந்தியா 75க்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. அடுத்து இந்தியா எவ்வளவு ஓட்டங்கள் எடுப்பார்கள், ஆட்டம் நான்காவது நாளுக்குப் போகுமா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் இந்த ஆடுதளத்தில் பந்தை முன்னங்காலில் விரட்டுவதோ புல் அடிப்பதோ சுலபமல்ல. பின்னங்காலுக்குப் போய் விரட்டுவதும் ரிஸ்க்தான். சில பந்துகள் அரை அடிக்கு உள்ளே வருகிறது. குறிப்பாக வலதுகை மட்டையாளர்களுக்கு. சில பந்துகள் இப்போதே தரைமட்டமாக பல்லியைப் போல ஊர்ந்து வருவதைப் பார்த்தால் மூன்றாவது நாள் ஆட்டமும் கடினமாக இருக்கும், நான்காவது நாளுக்கு ஆட்டம் சென்றால் படுபயங்கரமாக இருக்கும் எனத் தெரிகிறது. எப்போது வேண்டுமானாலும் விக்கெட் விழலாம் என்பதால் தடுத்தாடி ரன் சேர்ப்பதும் சுலபமில்லை. ஓவருக்கு ஒரு பவுண்டரியாவது அடிக்காவிடில் அழுத்தம் அதிகரித்து விக்கெட் போகிறது. எந்த ஒரு குறிப்பிட்ட ஸ்டைலிலும் (விரட்டுவது, வெட்டுவது) மட்டையாளரால் ஆட முடியாது. ஆனால் மைதானத்தின் புல்வெளிப் பரப்பானது வேகமாக உள்ளது. ஆடுதளத்தில் வேகமும் உள்ளது. அதனால் பவுண்டரி அடிப்பது சற்று சுலபம். இதனால்தான் கிடைக்கிற வாய்ப்பில் எல்லாம் நேர்மறையாக ஆடினாலே அரைசதம் கூட அடிக்க முடியும் என மட்டையாளர்கள் நினைக்கிறார்கள். சினிமாவில் புற்றுநோய் முற்றிய நிலையில் காதலர்கள் இருவரும் கல்யாணம் பண்ணிக்கொண்டே சாகலாம் என நினைப்பார்களே மட்டையாளர்களும் அப்படியே கொஞ்சம் ரிஸ்க் எடுத்து வேகமா ரன் அடிச்சே அவுட்டாகலாம் எனும் முடிவுக்கு வருகிறார்கள். இங்கிலாந்து இரண்டாவதாக மட்டையாடியபோது கிராலியும், டக்கெட்டும் பத்து ஓவர்களில் 90க்கு மேல் அடித்தார்கள். அது இல்லாவிடில் அவர்கள் 140க்கு ஆல் அவுட் ஆகியிருப்பார்கள். 100 ரன்கள் லீட் கொடுத்திருப்பார்கள். அந்த அதிரடி துவக்கமே அவர்களைக் காப்பாற்றியது. இந்தியா அடுத்து ஆட வரும்போது ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்ட உத்தியும், கொஞ்சம் அதிர்ஷ்டமும் இந்தியாவுக்கு கைகொடுத்தது. அல்லாவிடில் 30க்கு 3 விக்கெட்டுகள் கொடுத்திருப்பார்கள்.
இங்குதான் இங்கிலாந்தும் இந்தியாவும் செய்த ஆடுகள அமைப்புத் தவறுகளைச் சுட்ட வேண்டும் - இந்த ஆடுதளத்தில் துவக்கத்தில் இருந்தே உள்ளே-வெளியே ஆடுகள அமைப்பே சரியானது. மட்டையாளர் பவுண்டரி அடித்து தன் மீது அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொண்டால் பந்துவீச்சாளர் பதற்றத்தில் நீளத்தைக் குறைத்தால் விக்கெட் விழாது. இன்று ஜெய்ஸ்வாலுக்கு இந்தளவுக்கு பவுண்டரிகளைக் கொடுக்காவிடில் இந்தியா பின்னடைவு பெற்றிருக்கும். அதேபோல இங்கிலாந்து துவக்க வீரர்களை களத்தை உள்ளே அமைத்து அதிகமாகத் தாக்க முயன்றதாலே வேகமான துவக்கம் அவர்களுக்குக் கிடைத்தது. இரண்டு அணித்தலைவர்களும் தவறிழைத்து விட்டார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் போப்புக்குப் பதில் ஸ்டோக்ஸ் தலைவராக இங்கிலாந்துக்கு இருந்திருந்தால் நான்கு களத்தடுப்பாளர்களையாவது நான்காவது ஓவர் முதலே வெளியே நிற்க வைத்திருப்பார். பவுண்டரிகளை ரத்து செய்திருப்பார். ஜெஸ்வாலின் ஸ்கோர் ஆட்டநாள் முடிவில் 20ஆக இருந்திருக்கும். போப் நாளைக்கு சுதாரித்து ஆடுகளத்தை நிச்சயமாக மாற்றுவார், அத்துடன் விக்கெட்டுகள் சரியும் என நினைக்கிறேன்.
ஒருவேளை இந்தியாவால் 260-300 இலக்கை நிர்ணயிக்க முடிந்தால் உள்ளே-வெளியே ஆடுகளத்தை கில் அமைத்து ரன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். நான்கு ஸ்லிப்புகளும் கல்லியும் / டீப் பைன் லெக்கும் போதும். நான்கு பேர்களையாவது வெளியே நிற்க வைக்க வேண்டும். ஒற்றை ரட்டை ரன்களைக் கொடுக்கலாம் தப்பில்லை. மட்டையாளர்கள் பத்து ஓவர்களில் 30 ரன்கள் எடுத்தால் விக்கெட்டுகள் நிச்சயமாக விழும். ஆனால் இந்தியா 200க்குள் ஆல் அவுட் ஆனால் வெல்வதற்கு சிரமப்படும். 260-280 தாண்டினாலே வெற்றியின் கதவுகள் திறக்கும். ஆடுதளம் அந்தளவுக்கு நாளை மாறாது என எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம்.
Comments