Skip to main content

2026 டிக் டிக் டிக்...


 

2025 மிகவும் சோர்வான வருடம் எனக்கு. எழுத, வாசிக்க, சிந்திக்க, செயல்பட அவகாசம் குறைவு. எழுத்துத் திட்டங்களும் தொலைவாகிப் போயின. அப்போதுதான் 2017-2020 காலகட்டம் எவ்வளவு சிறப்பானது என்று புரிந்தது. பிடித்ததைப் போல வேலை பார்க்க, எழுத, படிக்க, சிந்திக்க இயன்றது. உள்ளார்ந்த மகிழ்ச்சி இருந்தது. அதன்பிறகு நீதிமன்றம், குள்ளநரி வக்கீல்கள், நல்லியல்பான வக்கீல்கள், அலுப்பான கடினமான பயணங்கள், ஆவணங்கள், அச்சம் என என் உலகம் மாறியது. அங்கிருந்து மீண்டு வந்தபின்னர் வேலைக் களம் ஒரு வதைக்களம் ஆகியது.

என்ன நடந்தால் என்ன எனும் மனநிலையுடன் என்னால் போகிற போக்கில் ஜாலியாக இருக்க முடிவதில்லை - எப்போதுமே கடிகாரம் டிக்டிக் என ஒலித்தபடி இருக்கிறது. இன்னும் சில வருடங்கள்தாம், அதற்குள் எழுத்து இலக்குகளை எட்ட வேண்டும், எழுத்தில் இருந்து கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்றே மனம் தவிக்கிறது. இலக்கு, குறிக்கோள், எதிர்பார்ப்பு ஆகியவை இல்லாதபோது காலமே இல்லையெனும் ஒரு பிரமை ஏற்படுகிறது. போகிறபோக்கில் வாழ்வது அத்தகையோருக்கே சாத்தியம். எனக்கு அத்தகைய உலகம் மேம்போக்காக, அர்த்தமற்றதாக, அலுப்பாகத் தோன்றுகிறது.
அவ்விடத்தில் 2025 என்னை இந்த போகிற போக்கில் ஓடும் உலகுக்கு இழுத்துச் சென்றுவிட்டது. அந்த நெருக்கடிகளையும் மீறி ஒரு நாவலை எழுதினேன். இன்னொரு நாவலை 70% முடித்தேன். ஆனாலும் கடந்த இரு ஆண்டுகளில் நான் எழுதியவையும் படித்தவையும் மிகவும் குறைவு எனத் தோன்றுகிறது.
என் இருபதுகளில் இருந்தே ஒரு பழக்கம் - வரக்கூடிய 3-5 வருடங்களை வரையறுத்து முடிவில் நான் 'நிச்சயமாக' இறந்துவிடுவேன் எனத் தீர்மானம் எடுப்பேன். சாவு நெருங்கும் முன் முடிப்பதற்கான வேலைகளை நோக்கி ஓடுவேன். இந்த காலமற்ற, இலக்குகள அற்ற, எந்திரத்தனமாக, சோறு, பாதுகாப்பு, வேலை, ஓய்வு எனும் அன்றாட உலகை முறியடிக்க எனக்கு மரணத்தின் அருகாமைதான் உதவுகிறது. காலம் நிபந்தனைக்குட்டதாக மாறும்போது அதற்கு தனி அழகு கூடுகிறது. இந்த வாழ்க்கையே எல்லையற்ற காலத்திற்கும் எல்லைக்குட்பட்ட காலத்திற்குமான போட்டிதான் எனத் தோன்றுகிறது. மீண்டும் மீண்டும் நான் எனக்கு மரணத்தை நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். நிபந்தனைக்குட்பட்ட காலத்தில் நான் எனக்காக வாழ இயலும். எல்லாமே ஒரு வேடம்தான் என்றாலும் இந்த வேடம் எனக்கு சௌகர்யமாக அழகாகத் தோன்றுகிறது.
2026ஐ இவ்வாறு மதிப்புக்குரியதாக மாற்றுகிறது. ஒரு கணத்தைக் கூட வீணடிக்காமல் சிறப்பானதாக அதை அமைக்க வேண்டும். டிக் டிக் டிக்...

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...