Skip to main content

2026 டிக் டிக் டிக்...


 

2025 மிகவும் சோர்வான வருடம் எனக்கு. எழுத, வாசிக்க, சிந்திக்க, செயல்பட அவகாசம் குறைவு. எழுத்துத் திட்டங்களும் தொலைவாகிப் போயின. அப்போதுதான் 2017-2020 காலகட்டம் எவ்வளவு சிறப்பானது என்று புரிந்தது. பிடித்ததைப் போல வேலை பார்க்க, எழுத, படிக்க, சிந்திக்க இயன்றது. உள்ளார்ந்த மகிழ்ச்சி இருந்தது. அதன்பிறகு நீதிமன்றம், குள்ளநரி வக்கீல்கள், நல்லியல்பான வக்கீல்கள், அலுப்பான கடினமான பயணங்கள், ஆவணங்கள், அச்சம் என என் உலகம் மாறியது. அங்கிருந்து மீண்டு வந்தபின்னர் வேலைக் களம் ஒரு வதைக்களம் ஆகியது.

என்ன நடந்தால் என்ன எனும் மனநிலையுடன் என்னால் போகிற போக்கில் ஜாலியாக இருக்க முடிவதில்லை - எப்போதுமே கடிகாரம் டிக்டிக் என ஒலித்தபடி இருக்கிறது. இன்னும் சில வருடங்கள்தாம், அதற்குள் எழுத்து இலக்குகளை எட்ட வேண்டும், எழுத்தில் இருந்து கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்றே மனம் தவிக்கிறது. இலக்கு, குறிக்கோள், எதிர்பார்ப்பு ஆகியவை இல்லாதபோது காலமே இல்லையெனும் ஒரு பிரமை ஏற்படுகிறது. போகிறபோக்கில் வாழ்வது அத்தகையோருக்கே சாத்தியம். எனக்கு அத்தகைய உலகம் மேம்போக்காக, அர்த்தமற்றதாக, அலுப்பாகத் தோன்றுகிறது.
அவ்விடத்தில் 2025 என்னை இந்த போகிற போக்கில் ஓடும் உலகுக்கு இழுத்துச் சென்றுவிட்டது. அந்த நெருக்கடிகளையும் மீறி ஒரு நாவலை எழுதினேன். இன்னொரு நாவலை 70% முடித்தேன். ஆனாலும் கடந்த இரு ஆண்டுகளில் நான் எழுதியவையும் படித்தவையும் மிகவும் குறைவு எனத் தோன்றுகிறது.
என் இருபதுகளில் இருந்தே ஒரு பழக்கம் - வரக்கூடிய 3-5 வருடங்களை வரையறுத்து முடிவில் நான் 'நிச்சயமாக' இறந்துவிடுவேன் எனத் தீர்மானம் எடுப்பேன். சாவு நெருங்கும் முன் முடிப்பதற்கான வேலைகளை நோக்கி ஓடுவேன். இந்த காலமற்ற, இலக்குகள அற்ற, எந்திரத்தனமாக, சோறு, பாதுகாப்பு, வேலை, ஓய்வு எனும் அன்றாட உலகை முறியடிக்க எனக்கு மரணத்தின் அருகாமைதான் உதவுகிறது. காலம் நிபந்தனைக்குட்டதாக மாறும்போது அதற்கு தனி அழகு கூடுகிறது. இந்த வாழ்க்கையே எல்லையற்ற காலத்திற்கும் எல்லைக்குட்பட்ட காலத்திற்குமான போட்டிதான் எனத் தோன்றுகிறது. மீண்டும் மீண்டும் நான் எனக்கு மரணத்தை நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். நிபந்தனைக்குட்பட்ட காலத்தில் நான் எனக்காக வாழ இயலும். எல்லாமே ஒரு வேடம்தான் என்றாலும் இந்த வேடம் எனக்கு சௌகர்யமாக அழகாகத் தோன்றுகிறது.
2026ஐ இவ்வாறு மதிப்புக்குரியதாக மாற்றுகிறது. ஒரு கணத்தைக் கூட வீணடிக்காமல் சிறப்பானதாக அதை அமைக்க வேண்டும். டிக் டிக் டிக்...

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...