முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2026 டிக் டிக் டிக்...


 

2025 மிகவும் சோர்வான வருடம் எனக்கு. எழுத, வாசிக்க, சிந்திக்க, செயல்பட அவகாசம் குறைவு. எழுத்துத் திட்டங்களும் தொலைவாகிப் போயின. அப்போதுதான் 2017-2020 காலகட்டம் எவ்வளவு சிறப்பானது என்று புரிந்தது. பிடித்ததைப் போல வேலை பார்க்க, எழுத, படிக்க, சிந்திக்க இயன்றது. உள்ளார்ந்த மகிழ்ச்சி இருந்தது. அதன்பிறகு நீதிமன்றம், குள்ளநரி வக்கீல்கள், நல்லியல்பான வக்கீல்கள், அலுப்பான கடினமான பயணங்கள், ஆவணங்கள், அச்சம் என என் உலகம் மாறியது. அங்கிருந்து மீண்டு வந்தபின்னர் வேலைக் களம் ஒரு வதைக்களம் ஆகியது.

என்ன நடந்தால் என்ன எனும் மனநிலையுடன் என்னால் போகிற போக்கில் ஜாலியாக இருக்க முடிவதில்லை - எப்போதுமே கடிகாரம் டிக்டிக் என ஒலித்தபடி இருக்கிறது. இன்னும் சில வருடங்கள்தாம், அதற்குள் எழுத்து இலக்குகளை எட்ட வேண்டும், எழுத்தில் இருந்து கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்றே மனம் தவிக்கிறது. இலக்கு, குறிக்கோள், எதிர்பார்ப்பு ஆகியவை இல்லாதபோது காலமே இல்லையெனும் ஒரு பிரமை ஏற்படுகிறது. போகிறபோக்கில் வாழ்வது அத்தகையோருக்கே சாத்தியம். எனக்கு அத்தகைய உலகம் மேம்போக்காக, அர்த்தமற்றதாக, அலுப்பாகத் தோன்றுகிறது.
அவ்விடத்தில் 2025 என்னை இந்த போகிற போக்கில் ஓடும் உலகுக்கு இழுத்துச் சென்றுவிட்டது. அந்த நெருக்கடிகளையும் மீறி ஒரு நாவலை எழுதினேன். இன்னொரு நாவலை 70% முடித்தேன். ஆனாலும் கடந்த இரு ஆண்டுகளில் நான் எழுதியவையும் படித்தவையும் மிகவும் குறைவு எனத் தோன்றுகிறது.
என் இருபதுகளில் இருந்தே ஒரு பழக்கம் - வரக்கூடிய 3-5 வருடங்களை வரையறுத்து முடிவில் நான் 'நிச்சயமாக' இறந்துவிடுவேன் எனத் தீர்மானம் எடுப்பேன். சாவு நெருங்கும் முன் முடிப்பதற்கான வேலைகளை நோக்கி ஓடுவேன். இந்த காலமற்ற, இலக்குகள அற்ற, எந்திரத்தனமாக, சோறு, பாதுகாப்பு, வேலை, ஓய்வு எனும் அன்றாட உலகை முறியடிக்க எனக்கு மரணத்தின் அருகாமைதான் உதவுகிறது. காலம் நிபந்தனைக்குட்டதாக மாறும்போது அதற்கு தனி அழகு கூடுகிறது. இந்த வாழ்க்கையே எல்லையற்ற காலத்திற்கும் எல்லைக்குட்பட்ட காலத்திற்குமான போட்டிதான் எனத் தோன்றுகிறது. மீண்டும் மீண்டும் நான் எனக்கு மரணத்தை நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். நிபந்தனைக்குட்பட்ட காலத்தில் நான் எனக்காக வாழ இயலும். எல்லாமே ஒரு வேடம்தான் என்றாலும் இந்த வேடம் எனக்கு சௌகர்யமாக அழகாகத் தோன்றுகிறது.
2026ஐ இவ்வாறு மதிப்புக்குரியதாக மாற்றுகிறது. ஒரு கணத்தைக் கூட வீணடிக்காமல் சிறப்பானதாக அதை அமைக்க வேண்டும். டிக் டிக் டிக்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...