"நாங்கள் ஒரு முறை சாக்கடைக் குழாய்க்குள் மாட்டிக் கொண்ட நாய்க்குட்டி ஒன்றை காப்பாற்றுவதற்காய் சென்றிருந்தோம். அதன் கால் ஒடிந்திருந்ததால் உள்ளே இறங்கி எடுப்பதற்குள் ரொம்ப சிரமமாகி விட்டது. நாய்க்குட்டியை நாங்கள் வெளிக்கொணரும் நேரும் அலுவலக பெண்கள் சிலரும் ஸ்பாட்டில் இருந்தார்கள். அவர்கள் எங்களுடன் சேர்ந்து நாய்க்குட்டியை கையில் வைத்துக் கொண்டு செல்போனில் புகைப்படம் எடுத்தனர். சில நிமிடங்களில் நாய்க்குட்டியை அவர்கள் சேர்ந்து எவ்வாறு காப்பாற்றினார்கள் என உணர்ச்சிகரமான அறிக்கையை எழுதி பேஸ்புக்கில் பதிவேற்றி விட்டார்கள். இது போன்ற பதிவுகளுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகளுக்கும் அதன் வழியாக லட்சக்கணக்கான தொகை நிதியும் எங்களுக்கு கிடைப்பதுண்டு. குறிப்பாக நடுரோட்டில் திரியும் பசு ஒன்றை பிடித்து லாரியில் ஏற்றிக் கொண்டு வந்து அதைக் காப்பாற்றியதாய் எழுதினால் வெளிநாட்டில் வசிக்கிறவர்களிடம் இருந்து அதைப் பற்றி விசாரித்து நிறைய குறுஞ்செய்திகளும் ஸ்பான்சர்ஷ்பிப் ஏற்றுக் கொள்ளும் விருப்பங்களும் குவியும். இந்த பசுக்களின் உரிமையாளர்கள் பின்னர் எங்களிடம் வந்து விசாரிக்கும் போது அவற்றை திரும்ப அனுப்புவதற்கு எங்கள் நிறுவனத்தார்கள் ரொம்பவே பிகு பண்ணுவார்கள். நேரடியாக தனியார் லாயங்களில் இருந்து மோசமாய் பராமரிக்கப்படுவதாய் சொல்லி மீட்கப்படும் பசுக்களை சில ஆயிரங்களாவது கட்டணம் வசூலிக்காமல் எங்கள் சி.இ.ஒ சி.கெ மகேந்திர சிங் திரும்ப அளிப்பதும் இல்லை.
இந்த கூட்டத்தில் அகல்யா போன்று ரொம்ப நாணயமான மிருகவதை போராளிகளும் உண்டு. சதா நாய்களுக்கு உணவளிப்பது, அடிபட்ட நாய்களுக்கு மருந்தளித்து காப்பாற்றுவது என நேரடியான களப்போராளி அவள். பேரழகி.
எங்கள் சி.இ.ஒ மகேந்திர குமார் முப்பது வயதுக்கு உட்பட்ட இளைஞர். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. ஓய்வெடுக்க அடிக்கடி ஸ்விட்செர்லாந்த் போகும் அளவுக்கு வளமானவர். சில வருடங்களாய் அகல்யா அவருக்கு நெருக்கமாக இருந்தாள். ஒருநாள் அவள் அவருடன் இ.சி.ஆரில் உள்ள ஒரு பங்களாவில் இருக்கையில் அவரது மனைவியும் சில உறவினர்களுமாய் அங்கு வந்து தகராறு செய்தாள். அவளை காவல்நிலையத்திற்கு கொண்டு போனார்கள். அவளை மீட்பதற்காய் சென்ற தோழிகள் மூலமாய் செய்தி அலுவலகம் முழுக்க பரவியது. "
Comments