இன்றைய இந்தியா-பாக் டி20 உலகக்கோப்பைப் போட்டியில் ரிங்கு சிங் ஆட மாட்டார் என்கிறார்கள். அவரிடத்தில் ஒரு சுழலர் ஆடக் கூடும். அதாவது வாஷிங்க்டன். அல்லது அர்ஷதீப்பின் இடத்தில் அச்சுழலர் ஆடலாம். ஆனால் ரிங்குவின் இடத்தில் சஞ்சு ஆடலாம். ஒருவேளை அவரை ஆட வைத்தாலும் அவரது இடம் வரும் போட்டிகளில் நிச்சயம் இல்லை.
ரிங்கு சிங் இந்தியாவின் மிகச்சிறந்த டி20 செயல்-தீர்வாளர் (finisher). முதலில் ஆடும்போது நிதானமாக ஆட்டத்தை கடைசி ஓவர் வரை கொண்டு போய் சாவு ஊர்வலத்தில் பட்டாசுவெடிப்பவரைப் போல அதகளம் செய்பவர். அவரால் சில நெருக்கடியான போட்டிகளில் இலக்கை விரட்டிச் செல்கையிலும் இதைச் செய்ய முடியும். இந்திய அணியில் இதற்கான மற்றொரு வீரர் இல்லை. ஹர்த்திக்கின் அதிரடியெல்லாம் 17வது ஓவர் வரைக்கும்தான். துவக்க வீரர்களும் இதற்கும் விடைபெறுவர். நமது ஆல்ரவுண்டர்களால் தனியாக ஆடி வெல்ல முடியாது - நீயா நானா கோபி நாத் போல இப்படின்னா இப்படியும் போலாம், அப்படீன்னா அப்படியும் போலாம் எனத்தான் அவர்களால் ஆட முடியும். அதனாலே ரிங்கு தவிர்க்க முடியாத ஒரு வீரர். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.
1) ஐ.பி.எல்லில் கூட செயல்-தீர்வாளர்களுக்கென ஒரு இடம் இப்போதெல்லாம் இருப்பதில்லை. சர்வதேச டி20 போட்டிகளிலும் இந்தியா ஆட்டத்தை இந்த தீர்வாளர்கள் வருமுன்னே முடிக்கலாம் என நினைக்கிறார்கள். அதாவது - தட்டையான ஆடுதளங்களில் -டி20 ஒரு 15 ஓவர் ஆட்டமாக நம் கண்ணுக்கே தெரியாமல் மாறிவருகிறது.
2) மாற்றுவீரர் விதிமுறை (impact player rule) காரணமாக நிபுணர்களின் இடம் காணாமல் போகிறது. நீங்கள் ஒரு வீச்சாளரின் இடத்தில் ஒரு மட்டையாளரை உபரியாக ஆடினால் தீர்வாளர்கள் ஆடும் ஓவர்கள் குறைந்து போகும். இதுவும் அவரது ஐ.பி.எல் தாக்கத்தைக் குறைத்தது.
3) கடைசியாக ரிங்குவின் பலவீனமான சுழல். அவருடைய ஆட்டம் பந்தின் வேகத்தைப் பயன்படுத்தி அதிக தூரம் அடிப்பதுதான். குறிப்பாக முன்ங்காலில் விழும் வேகப்பந்தை அவரால் சமநிலை குலையாமல் சிக்ஸர் அடிக்க முடியும். பின்னங்காலுக்குப் போய் வெட்டவும் முடியும். களத்தடுப்பில் உள்ள வெற்றிடங்களை இலக்காக்கி எதிர்பாராத ஷாட்களை ஆட முடியும். ஆனால் அவரால் சுழல் பந்தின் பாதையை சரியாக வாசித்து காலாட்டத்தைக் கொண்டு அதை மட்டுப்படுத்தி வலுவாக சிக்ஸர் அடிக்க முடியாது. இதனால் அவரது ஓட்டமெடுக்கும் வேகம் குறைந்து போகிறது. மெத்தனமான ஆடுதளங்களில் ரிங்கு கடற்கரை மணலில் சிக்கிய சக்கரநாற்காலியைப் போலாகிறார்.
ரிங்கு ஒருநாள் போட்டிகளில் கூட ஆட வேண்டியவர்தான். ஆனால் அதற்கு அவர் டி20யில் தன் இடத்தை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு அவர் ஒரு திறனில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. அவர் ஒரு நல்ல சுழலரிடம் போய் ஆப் ஸ்பின், லெக் ஸ்பின், காரம் பந்து எல்லாம் வீசப் பயில வேண்டும். தன் புதிர் சுழலை ஐ.பி.எல்லில் முயல வேண்டும். அப்படி அவரால் இந்திய அணிக்குள் வந்து இரண்டாவது அல்லது மூன்றாவது சுழலராக முடியும். குறிப்பாக அக்ஸர் ஆட முடியாதபோது.
அல்லாவிடில் சுழலுக்கு எதிரான ஆட்டத்தை வலுப்படுத்தி 4வது எண்ணில் இறங்கி ஆடி சதங்கள், அரைசதங்கள் குவிக்க வேண்டும். ஆனால் அதைவிட மேலே சொன்னது எளிது.
ரிங்கு தன் ஆட்டவாழ்வின் மிக நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறார் எனத் தோன்றுகிறது - நன்றாக ஆடினால்கூட அவரால் தன்னிடத்தை துண்டு போட்டு வைக்க முடியாது. சமகாலத்தின் நகைமுரண்களில் ஒன்று இது. நன்றாகப் பாடுகிறவர்களால் பாடகர் ஆக முடிவதில்லை, சமையல் நிபுணர்களால் சமைக்க முடிவதில்லை, ஆண்களால் ஆண்மையுடன் இருக்க முடிவதில்லை, எழுத்தாளர்களால் எழுத முடிவதில்லை - அந்த இடத்தை எல்லாம் கோமாளிகள் எடுத்துக் கொள்கிறார்கள். வேறு வழியில்லை.
Comments