Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ரிங்கு சிங் - வளையத்துக்குள் குதிக்க வேண்டிய சர்க்கஸ் சிங்கம்


 

இன்றைய இந்தியா-பாக் டி20 உலகக்கோப்பைப் போட்டியில் ரிங்கு சிங் ஆட மாட்டார் என்கிறார்கள். அவரிடத்தில் ஒரு சுழலர் ஆடக் கூடும். அதாவது வாஷிங்க்டன். அல்லது அர்ஷதீப்பின் இடத்தில் அச்சுழலர் ஆடலாம். ஆனால் ரிங்குவின் இடத்தில் சஞ்சு ஆடலாம். ஒருவேளை அவரை ஆட வைத்தாலும் அவரது இடம் வரும் போட்டிகளில் நிச்சயம் இல்லை.

ரிங்கு சிங் இந்தியாவின் மிகச்சிறந்த டி20 செயல்-தீர்வாளர் (finisher). முதலில் ஆடும்போது நிதானமாக ஆட்டத்தை கடைசி ஓவர் வரை கொண்டு போய் சாவு ஊர்வலத்தில் பட்டாசுவெடிப்பவரைப் போல அதகளம் செய்பவர். அவரால் சில நெருக்கடியான போட்டிகளில் இலக்கை விரட்டிச் செல்கையிலும் இதைச் செய்ய முடியும். இந்திய அணியில் இதற்கான மற்றொரு வீரர் இல்லை. ஹர்த்திக்கின் அதிரடியெல்லாம் 17வது ஓவர் வரைக்கும்தான். துவக்க வீரர்களும் இதற்கும் விடைபெறுவர். நமது ஆல்ரவுண்டர்களால் தனியாக ஆடி வெல்ல முடியாது - நீயா நானா கோபி நாத் போல இப்படின்னா இப்படியும் போலாம், அப்படீன்னா அப்படியும் போலாம் எனத்தான் அவர்களால் ஆட முடியும். அதனாலே ரிங்கு தவிர்க்க முடியாத ஒரு வீரர். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.
1) ஐ.பி.எல்லில் கூட செயல்-தீர்வாளர்களுக்கென ஒரு இடம் இப்போதெல்லாம் இருப்பதில்லை. சர்வதேச டி20 போட்டிகளிலும் இந்தியா ஆட்டத்தை இந்த தீர்வாளர்கள் வருமுன்னே முடிக்கலாம் என நினைக்கிறார்கள். அதாவது - தட்டையான ஆடுதளங்களில் -டி20 ஒரு 15 ஓவர் ஆட்டமாக நம் கண்ணுக்கே தெரியாமல் மாறிவருகிறது.
2) மாற்றுவீரர் விதிமுறை (impact player rule) காரணமாக நிபுணர்களின் இடம் காணாமல் போகிறது. நீங்கள் ஒரு வீச்சாளரின் இடத்தில் ஒரு மட்டையாளரை உபரியாக ஆடினால் தீர்வாளர்கள் ஆடும் ஓவர்கள் குறைந்து போகும். இதுவும் அவரது ஐ.பி.எல் தாக்கத்தைக் குறைத்தது.
3) கடைசியாக ரிங்குவின் பலவீனமான சுழல். அவருடைய ஆட்டம் பந்தின் வேகத்தைப் பயன்படுத்தி அதிக தூரம் அடிப்பதுதான். குறிப்பாக முன்ங்காலில் விழும் வேகப்பந்தை அவரால் சமநிலை குலையாமல் சிக்ஸர் அடிக்க முடியும். பின்னங்காலுக்குப் போய் வெட்டவும் முடியும். களத்தடுப்பில் உள்ள வெற்றிடங்களை இலக்காக்கி எதிர்பாராத ஷாட்களை ஆட முடியும். ஆனால் அவரால் சுழல் பந்தின் பாதையை சரியாக வாசித்து காலாட்டத்தைக் கொண்டு அதை மட்டுப்படுத்தி வலுவாக சிக்ஸர் அடிக்க முடியாது. இதனால் அவரது ஓட்டமெடுக்கும் வேகம் குறைந்து போகிறது. மெத்தனமான ஆடுதளங்களில் ரிங்கு கடற்கரை மணலில் சிக்கிய சக்கரநாற்காலியைப் போலாகிறார்.
ரிங்கு ஒருநாள் போட்டிகளில் கூட ஆட வேண்டியவர்தான். ஆனால் அதற்கு அவர் டி20யில் தன் இடத்தை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு அவர் ஒரு திறனில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. அவர் ஒரு நல்ல சுழலரிடம் போய் ஆப் ஸ்பின், லெக் ஸ்பின், காரம் பந்து எல்லாம் வீசப் பயில வேண்டும். தன் புதிர் சுழலை ஐ.பி.எல்லில் முயல வேண்டும். அப்படி அவரால் இந்திய அணிக்குள் வந்து இரண்டாவது அல்லது மூன்றாவது சுழலராக முடியும். குறிப்பாக அக்ஸர் ஆட முடியாதபோது.
அல்லாவிடில் சுழலுக்கு எதிரான ஆட்டத்தை வலுப்படுத்தி 4வது எண்ணில் இறங்கி ஆடி சதங்கள், அரைசதங்கள் குவிக்க வேண்டும். ஆனால் அதைவிட மேலே சொன்னது எளிது.
ரிங்கு தன் ஆட்டவாழ்வின் மிக நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறார் எனத் தோன்றுகிறது - நன்றாக ஆடினால்கூட அவரால் தன்னிடத்தை துண்டு போட்டு வைக்க முடியாது. சமகாலத்தின் நகைமுரண்களில் ஒன்று இது. நன்றாகப் பாடுகிறவர்களால் பாடகர் ஆக முடிவதில்லை, சமையல் நிபுணர்களால் சமைக்க முடிவதில்லை, ஆண்களால் ஆண்மையுடன் இருக்க முடிவதில்லை, எழுத்தாளர்களால் எழுத முடிவதில்லை - அந்த இடத்தை எல்லாம் கோமாளிகள் எடுத்துக் கொள்கிறார்கள். வேறு வழியில்லை.

Comments

Popular posts from this blog

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா

  சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா (CIBF) சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒன்று என்பதை வெளியில் இருந்து பார்க்கையில் புரிந்துகொள்ள முடியாது. நானே அதை நிதி வீணடிப்பு என்றே ஆரம்பத்தில் கருதினேன். ஆனால் இந்த ஆண்டு அதில் கலந்து கொண்டபோது என் எண்ணம் மாறியது. குறிப்பாக அரசின் நடவடிக்கை மீது பதிப்பாளர்களுக்கு உள்ள மரியாதையினால் எழுத்தாளர்களுக்கு சில பயன்கள் கிடைக்கின்றன. ஒரு சின்ன விசயத்தைக் குறிப்பிடுகிறேன் - பதிப்பாளர்கள் முன்வைக்கும் நூல்கள் அரசின் நூற்பட்டியலில் வண்ணப்படங்களுடன் வழவழ தாளில் வெளியிடப்படுகின்றன. இந்த பட்டியல் நூலில் படைப்புகள் அந்தந்த எழுத்தாளர்களின் முகவர்களின் கீழ் பகுக்கப்பட்டு தரப்பட்டுள்ளார்கள். இந்த படைப்புகளை நூலில் பார்க்கும் அயல்மொழி, அயல்நாட்டுப் பதிப்பாளர்கள் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்கிறார்கள். அவர்கள் அப்படைப்புகளை மொழிபெயர்க்க முன்வருகிறார்கள். நீங்கள் அவர்களிடம் உங்கள் புத்தகங்களைக் காட்டி விளக்கினாலும் அவர்களுக்கு உங்கள் படைப்பின் முக்கியத்துவம் விளங்காது. ஏனென்றால் அவர்கள் வேறு ஊரை, மொழியைச் சேர்ந்தவர்கள். தமிழ் இலக்கியத்தில் நடப்பன வெளியாட...

அரசியல் சினிமாவில் இருந்து கட்சி சினிமா - புதிய போக்கு

சுதந்திரப் போராட்டத்தின்போது நாடகக் கலைஞர்கள் பிரச்சாரத்துக்குப் பயன்பட்டார்கள். அச்சூழலில் பிரச்சார நாடகங்களுக்கு மக்களிடையே மவுசிருக்கும் என்று தெரிந்தேதான் சில குழுக்கள் அத்தகைய நாடகங்கள் பக்கமாக நகர்ந்தார்கள். அதன்பிறகு திராவிட அரசியல் தேர்தல் களத்தில் வெல்ல நாடகங்களும் சினிமாவும் பெருமளவில் உதவின. அல்லது இந்நாடகங்களும் சினிமாக்களும் வெல்ல திராவிடக் கொள்கைகளின் புகழும் மக்கள் ஏற்பும் உதவின. இந்த பரஸ்பரச் சார்பு கவனிக்கத்தக்கது. இதுவே பின்னர் மாறப் போகிறது. (அதாவது இன்று மாறியுள்ளது) இதன் பிறகு நமது தேசிய (காங்கிரஸ்), துணைத்தேசிய (உள்ளூர் கட்சிகள்) அரசியல் களங்கள் பெரும்பளவில் நிலைப்பெற்ற தடத்திலே ஓடின. பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களின் பிரச்சாரத்தையே நம்பியிருந்தன. எழுபதுகளில் இந்திரா காந்திக்கு எதிரான ஜனதா தளத்தின் போராட்டங்களில் கூட சினிமாவும் நாடகமும் பெரிய பங்காற்றவில்லை, மாணவர் அமைப்புகளும் தொழிலாளர் அமைப்புகளுமே அப்போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினர் என நினைக்கிறேன். அடுத்து, உலகமயமாக்கல் வரும்போது இந்தியாவை ஒரு வளரும் தேசமாக முன்வைக்க சினிமா உதவியது என்றாலும் அது கட்சிப் பிரச...

செம்மொழி விருது

  //குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும்.முதற்கட்டமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராட்டிய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த படைப்புகளுக்கு, ஆண்டுதோறும், 'செம்மொழி இலக்கிய விருது' என்ற பெயரில் அந்த விருது வழங்கப்படும்.விருதுடன், தலா 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். படைப்புகளின் இலக்கிய தரத்தையும், வெளிப்படையான தேர்வு முறையையும் உறுதிசெய்யும் விதமாக, புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். - முதல்வர் ஸ்டாலின்// நல்ல முன்னெடுப்பு. ஆனால் செம்மொழி அடையாளம் இதன் தேசிய, உலகளாவிய விரிவை அனுமதிக்காமல் குறுக்கி விடுகிறது. இந்திய அளவிலான இலக்கிய விருதென்றோ சர்வதேச விருதென்றோ முன்வைத்திருக்கலாம். இன்னும் பெரிய அளவில் தாக்கம் இருக்கும். சொல்லப்போனால் தேசிய விருதுடன் நின்று விடாமல் நாம் சர்வதேச விருதுகளை உருவாக்க வேண்டும். செம்மொழி போன்ற அரசியல் கட்டமைப்புகளை மீற வேண்டும். ஏனென்றால் எந்த சர்வதேச விருதுக்கும் இத்தன்மை இராது. நோப...