2025இல் வெளிவந்த ஒரு ஆய்வு இப்படிச் சொல்கிறது: 42% ஆண்கள் விவாகரத்தின்போது ஒன் டைம் செட்டில்மெண்டைப் பண்ணுவதற்காக வங்கியின் தனிப்பட்ட கடனை வாங்கியிருக்கிறார்கள் (எகனானமிக்ஸ் டைம்ஸ் இதழில் இதைக் குறித்த கட்டுரை வந்துள்ளது). இப்படி கடன் வாங்குகிறார்களா? இது முடியுமா?
எனக்குத் தெரிந்தே சிலர் வாங்கி செட்டில் பண்ணியிருக்கிறார்கள். அதாவது சம்பள ஆவணங்களைக் கொடுத்தோ சொத்தை அடமானம் வைத்தோ வாங்குவார்கள். சிலர் சொத்துக்களை விற்றிருக்கிறார்கள். ஆனால் அவமானம் கருதி வெளியே சொல்ல மாட்டார்கள். எதற்காக இதைச் செய்கிறார்கள்? விவாகரத்துக்காக அலைவது, அது தரும் கடும் மனவதையை அனுபவிப்பது, மாதாமாதம் வாழ்நாள் முழுக்க ஜீவனாம்சம் கொடுக்க நேரிடும் என்பதை நினைத்து அஞ்சுவது, குழந்தையைப் பணம் கொடுத்துப் பெறுவதற்கு எனப் பல காரணங்கள். முக்கியமாக, இதையொட்டி வேலையில் வரும் நெருக்கடிகள். ஒரு ஆண் விவாகரத்து வழக்குக்காக நீதிமன்றம் போவது கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்வதற்கு சமம்தான். தப்பிக்க வேண்டுமெனில் ஜட்டி வரை கழற்றிக் கொடுக்க வேண்டும். ஒருபோதும் பெண்ணுக்கு இத்தகைய இழப்புகள் விவாகரத்தின்போது வராது. சட்டங்களை அவ்வாறே அமைத்திருக்கிறார்கள். ஒரு தனிப்பட்ட கடனை வாங்குவது எவ்வளவு பெரிய சுமையென்பதை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்திருக்கிறேன். நீங்கள் வீடு வாங்கக் கடன் பெற்றால் வீடாவது எஞ்சுகிறதே என ஆறுதல் கிடைக்கும். ஆனால் இதற்காக வாங்கி கடனைச் செலுத்தப் போராடும்போது ஒவ்வொரு நாளும் கடும் மன அழுத்தம்தான் எஞ்சும்.
சரி இந்த ஆய்வு வேறென்னவெல்லாம் முடிவுகளைத் தருகின்றன?
65% குடும்பங்களில் ஏற்கனவே பணப்பிரச்சினை இருந்திருக்கிறது. மாதம் ஒருமுறையாவது பணத்தை வைத்துச் சண்டை வந்துள்ளது என 90% பேர்கள் சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் எடுத்த கணக்குப்படி 50 லட்சத்துக்கு மேல் சொத்துள்ள கணவருக்கு விவாகரத்தாகும் வாய்ப்பு 7% குறைகிறது.
நீதிமன்றச் செலவைப் பொறுத்தமட்டில் 16% பெண்கள் மட்டுமே 5 லட்சத்துக்கு மேல் செலவழித்திருக்கிறார்கள். ஆனால் 49% ஆண்கள் 5 லட்சத்துக்கு மேல் செலவழித்துள்ளார்கள். இது ஏனென்றால் பெண்களுக்கான கட்டணத்தை வக்கீல்கள் ஒன் டைம் செட்டில்மெண்டில் 10-30% எடுத்துக் கொள்கிறார்கள். இதனாலே இவ்வக்கீல்கள் செட்டில்மெண்டை நோக்கி வழக்கை நகர்த்துவதில் குறியாக இருப்பார்கள். பேரத்தின்போது ஆணை மிரட்டிப் பணிய வைப்பார்கள். ஆகையால் பெண்கள் நேரடியாகப் பணத்தைக் கொடுக்க வேண்டியதில்லை. பெண் தரப்பு வக்கீலின் கட்டணத்தையும் கணவரே மறைமுகமாகக் கொடுக்கிறார் (இதுவும் போதாதென்று சில பேராசைக்காரப் பெண்கள் மொத்த நீதிமன்றச் செலவையும் கணவர் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். அதாவது வக்கீலுக்கு செட்டில்மெண்ட் கட்டிங் + நேரடிக் கட்டணம்).
29% மேல் ஆண்கள் தம் சொத்து மதிப்பை விட அதிகமானத் தொகையை செட்டில்மெண்டாகக் கொடுத்திருக்கிறார்கள். (இதற்கு நேரடி ஆதாரங்கள் உண்டென்றாலும் இங்கே பகிர முடியாது.)
26% பெண்கள் ஆண்களின் 100% சொத்தை செட்டில்மெண்டாகப் பெற்றிருக்கிறார்கள் (இத்தகைய வழக்குகளைப் பற்றி பாதிக்கப்பட்ட சிலர் என்னிடம் நேரடியாகவே சொல்லியிருக்கிறார்கள்). எனக்குத் தெரிந்து பவேரியா கொள்ளைக்காரர்கள் கூட இதைவிட இரக்கத்துடன் நடந்துகொள்வார்கள்.
வருமானத்தில் 38%ஐ ஆண்கள் சராசரியாக ஜீவனாம்சத்துக்காக கொடுப்பதாகச் சொல்கிறார்கள். அதாவது ஒருவருடைய மாத வருமானம் 40,000 என்றால் 15, 200ஐ அவர் மாதாமாதம் கொடுக்கிறார். இந்த வருமானத்தை வைத்தே அவர் தன் வாடகையைச் செலுத்தி தன் மாதச் செலவைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது அவர் ரூ 10,000 வாடகைக்கு வீட்டில் இருந்தால் மீதச் செலவுக்கு 15,000 கூட இருக்காது. அதாவது ஒரு நாளைக்கு அவர் தன் சோற்றுக்கு 300 ரூ செலவிடலாம். ஆனால் அவர் தன் பெற்றோரைப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றால்? பெட்ரோல், மின்சாரம், மொபைல், பல்வேறு கட்டணங்கள்? திடீர் மருத்துச் செலவு ஏற்பட்டால்? வேலை இழந்துவிட்டால்? குழந்தையின் பரிபாலனத்துக்கும் 8000 கொடுக்க வேண்டும் என்று நீதிபதி சொன்னால் அவர் அம்மா உணவகத்தில்தான் சாப்பிட வேண்டுமா? இது ஒரு நவீனக் கொத்தடிமை முறை. ஜீவனாம்சத்தைச் சரிவர செலுத்தாவிட்டால் ஜெயிலுக்கு அனுப்புவார்கள். இன்றைய தேதியில் 300 ரூ வைத்துக் கொண்டு வாழ்வதற்கு ஜெயிலே நிம்மதி.
பெண்களின் தரப்புத் தரவுகளைப் பாருங்கள்:
விவாகரத்துக்குப் பின் பெண்கள் தம் வேலைப்பளு 16% குறைந்து விட்டதாகச் சொல்கிறார்கள். 30% வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருக்கிறார்கள். இது எப்படி?
சான்று:
'Nearly 42% men took loan to pay alimony': New survey reveals how divorce hits women and men in India
செப்டம்பர் 29, 2025
https://economictimes.indiatimes.com/news/new-updates/nearly-42-men-took-loan-to-pay-alimony-new-survey-reveals-how-divorce-hits-women-and-men-in-india/articleshow/124209186.cms?from=mdr
Comments