Skip to main content

நவீன கவிதை வாசிப்பு - பயிலரங்குக் குறிப்பு 1

 


இன்றைய கவிதை வாசிப்புக்கான இணையவழிப் பயிலரங்கிற்கு வருவோர் அதில் இணையும் முன்பு இதை ஒருமுறைப் படித்து விடவும். அப்போதே உங்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும்:

நமது இப்போதைய கவிதை வாசிப்பு முறைமை உரையெழுதுவதில் இருந்து தோன்றியிருக்க வேண்டும். தொல்காப்பியம், சங்க இலக்கியத்தை நோக்குங்கால் நாம் இன்னும் ஆழமான, சுதந்திரமான வாசிப்புக்கு பழகியவர்களாக முன்பு இருந்திருந்தாலும் நவீன காலத்துக்கு வந்து நவீன கல்வியைப் பழகும் வேளையில் நாம் மனனம் செய்வதை பிரதானப்படுத்தத் தொடங்கி இருந்தோம். செய்யுள்களை மனனம் செய்வது, உரையாசிரியர்களின் விளக்கங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது என. பல்வேறு பின்னணிகளின் பொருளில் விதவிதமாக அர்த்தப்படுத்தும் சுதந்திரத்தைக் கூட இத்தகைய வாசிப்பு நமக்கு வழங்கவில்லை. கல்விப் புலத்துக்கு வெளியில் இதழ்களிலும் இலக்கியக் கூட்டங்களிலும் நாம் ரசனை சார்ந்த ஒரு வாசிப்பு முறைமையைப் பழகிக் கொண்டோம். இது வெகுஜன ஊடகத்துக்கும் ஏற்புடையதாக இருந்தது. இதன் நோக்கம் ஒரு படைப்பை அதன் உணர்வு சார்ந்த, மிகையான பகுதிகளை மட்டுமே பிரதானப்படுத்தி வாசிப்பது, வாசிப்பின் முடிவில் மானுடவாத விழுமியங்களான மனிதனின் மேன்மை, விடாமுயற்சி, உழைப்பு, தியாகம், அன்பு ஆகியவற்றின் வெற்றியைப் பிரகடனப்படுத்துதல், அரசியல் களத்தில் சமத்துவம், நீதிக்கான அறைகூவுவது என இருந்தது. அடுத்து, இதன் இன்னொரு கிளையாக கற்பனாவாத, இயற்கை வழிபாட்டு வாசிப்பும் நம்மிடையே வலுவாக இருந்தது. மானுடவாதம், இயற்கை வழிபாடு / கற்பனாவாதம் என நம் கவிதை வாசிப்பு நவீனக் காலத்தில் பிரிந்தது. காதல் கவிதைகள், புறக்கவிதைகள் / அரசியல் கவிதைகள் என்று இது பின்னர் வகைப்பட்டது. அதாவது காதலும் இயற்கையும் ஒரு பகுதியாக, அரசியலும் சமூகமும் இன்னொரு பகுதியானது. கவிதையை நாம் அதன் பேசுபொருளை ஒட்டி ரசிக்கத் தொடங்கினோம். பேசுபொருளை மிகைப்படுத்தி ரசிக்க வைக்கிற சொல்லாடல்களை, அணியை நாம் ரசித்தோம். காதல் என்றால் காதலுக்கான உருவகங்கள், உவமைகள், சொல்லாடல்கள், மிகைக் கூற்றுகள் என விதவிதமாக எதிர்பார்த்தோம்.

இதன் அடுத்த கட்டமாகவே நவீனத்துவ கவிதை தோன்றியது. நவீனத்துவ கவிதை மேற்கத்திய தாக்கத்தில் இருந்து தோன்றினாலும் அது நமது ரசனை மரபில் இருந்தும் சில விசயங்களைப் பிரதியெடுத்தது. நவீனத்துவக் கவிதையைப் புரிந்து கொள்ள நாம் மேற்கில் - குறிப்பாக இங்கிலாந்தில் - கவிதை எப்படித் தோன்றியது என விளங்கிக் கொள்ள வேண்டும்.
மேற்கில் நவீனத்துவம் கால்பதிப்பது தேவாலயத்துக்கும் சமூகத்துக்குமான நேரடிப் பந்தம் பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகள் துவங்கி பலவீனப்படுவதுடனும், அறிவியல், பகுத்தறிவுச் சிந்தனை, மானுடவாதம், தனிமனிதவாதம், மக்களாட்சி அதன் பிறகு அறிமுகமாவதுடன்தான். இதைப் புத்தொளிக்காலம் என்கிறார்கள். புத்தொளிக் காலம் அங்கு எந்திரமயமாதல், தொழில்புரட்சி, உலகப்போர்கள், மக்களாட்சி எனப் பல கட்டங்களை நோக்கி சமூகத்தைச் செலுத்தியது. மரபான சிந்தனைகளை செல்வாக்கு இழக்க வைத்தது.
கவிதையை மட்டுமே பார்த்தோமானால் 16-18ஆம் நூற்றாண்டுகள் வரைக்கும் இங்கிலாந்தில் விமர்சகர்களும் வாசகர்களும் கவிதையால் வாழ்க்கைக்குப் பயனுண்டா எனும் பிளேட்டோவின் கேள்விக்கு விடைதேடவே விழைந்தார்கள். 'கவிதைப் பேசுவது அசலான உண்மை அல்ல, அது தூய்மையான சாரம் அல்ல, மாறாக அது ஒரு நகல், பிழைபட்ட வடிவம்' என்பது பிளேட்டோவின் வாதம். இதை அவர் ரிபப்ளிக் தொகுப்பில், பத்தாவது நூலில் ஒரு விவாதத்தில் முன்வைக்கிறார். கவிஞர்களை தன் (கற்பனையான லட்சிய) தேசத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்கிறார். இதைக் கடவுள் உண்டா இல்லையா எனும் கருத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

கவிதை கடவுள் தரிசனத்துக்கு வெகுநெருக்கமாக கிரேகத்தில் இருந்தது. ஆகையால் பிளேட்டோ கவிதையை மறுக்கும்போது கடவுளையும் (அதாவது சன்னதம் கொண்ட பூசாரி நாட்டார் வழிபாட்டில் வெளிப்படுத்தும் கடவுள் அனுபவத்தை) தான் மறுக்கிறார். அவர் கடவுளின் இடத்தில் தத்துவத்தை, தத்துவஞானியை வைக்கிறார்.

கத்தோலிக்க மதம் இங்கிலாந்தில் முக்கியத்துவத்தை இழந்து புரொட்டெஸ்டெண்ட் மதம் தோன்றி, அறிவியல், பகுத்தறிவு சிந்தனைகள் வலுவான பின்னர் மதத்துக்கும் தனிமனிதனுக்குமான தொடர்பு பலவீனப்படுகிறது. இப்போது பிளேட்டோவின் அக்கேள்வி இங்கிலாந்தின் கவிஞர்களுக்கும் வாசகர்களுக்கும் முக்கியமாகிறது: வாழ்க்கைக்கு சாரமான, அசலான அர்த்தம் / உண்மை இல்லாத போது கடவுளின் / கவிஞரின் இடம் என்ன? இதற்கான பதிலை ஸ்டீபன் காஸன், பிலிப் சிட்னி ஆகியோர் (பிளேட்டோவின் கருத்துக்களை ஒட்டி) கவிதை வேண்டாம், கவிதை வேண்டும் எனும் இரு எதிரெதிர் தரப்புகளில் நின்று விவாதித்தனர். அதன்பிறகு பரவலாகக் கவிதை நமது நன்னெறிகளை பொழுதுபோக்குடன் அல்லது அழகியலுடன் அளிக்கிறது எனும் பொருள்பட அறிஞர்கள் முடிவு சொல்ல விவாதம் விரிந்தது. கவிதையின் நோக்கம் இன்பம் தருவதா நன்னெறியை போதிபதா? பத்தொன்பதாம் நூற்றாண்டில் இயற்கை வழிபாடு, தனிமனிதவாதத்தை முன்வைக்கிற கற்பனாவாத மரபு அங்கு வெர்ட்ஸ்வொர்த், கார்லிட்ஜ், ஷெல்லி, பைரன், கீட்ஸ் ஆகியோரின் கவிதைகளால் உருவாகிறது. இதன் தாக்கத்தை இன்று வரைக்கும் நாம் உலகம் முழுக்க கவிதையில் காண்கிறோம். இதை மறுத்து அங்கு நவசெவ்வியல் கவிதைகள், நவீனத்துவ கவிதைகள் தோன்றின. கடவுள் இல்லாத காலத்தில் இயற்கை வழிபாட்டுப் போக்கு, அதை மறுத்து செவ்வியல் இலக்கியக் கருத்தாக்கங்களை வழிபடுவது, பண்பாட்டைப் போற்றுவது என இன்னொரு போக்கு அங்கு தோன்றி அதன் அடுத்த கட்டமாகவே நகரமயப்பட்ட நவீனத்துவ மரபு தோன்றியது.

அடுத்து நாம் இந்திய, தமிழ்க் கவிதைகளைப் பார்த்துவிட்டு மேற்கிற்கு யு-டர்ன் எடுப்போம்.

தமிழ் மரபுப்படி இதை வைத்துப் பார்த்து விவாதம் அகம் - புறம் என விரிந்தது என நாம் பார்க்கக் கூடும் எனினும் அது துல்லியமாக இருக்காது. மேற்கத்திய மரபில் இதை அவர்கள் அகவயமான, ரசனாபூர்வமான, ஆன்மீகமான நோக்கு, புறவயமான அறிவியல் சார்ந்த, பகுத்தறிவு, தகவல் அறிவு சார்ந்த நோக்கு என இரண்டாகப் பிரித்தனர். இதை நாம் நிறுவத்தக்க ஒன்றைப் பேசும் கவிதை, நிறுவ முடியாத ஒன்றைப் பேசும் கவிதை எனப் பார்க்கலாம். மேலும் இது கிரேக்க நாடக மரபில் இருந்த இன்பியல், துன்பியல் வகைமைகளின் அடிப்படைகளையும் தழுவிக் கொண்டது. அதாவது சமூகப் பிரச்சினைகளைப் பகடி செய்யும், பகுத்தறிவுக்கு உட்பட்டு விவாதிக்கும் கவிதையும் (இன்பியல்), அகச்சிக்கல்களைச் - காதல், தனிமை, அனுபவக்கள், தனிமனிதப் பார்வை, ஆன்மீகம், கடவுள் சார்ந்த விவாதங்களைச் - சித்தரிக்கும் கவிதை எனப் பிரிந்தது.

இந்தியாவிலோ தமிழிலோ நவீன கவிதை இப்படி அறிமுகமாகவில்லை., இங்கு ஆங்கிலச் செவ்வியல், கற்பனாவாத, நவ-செவ்வியல் கவிதைகள் காலனிய கல்வி வழியாக அறிமுகமாகி மரபுக் கவிதைகளுடன் சேர்ந்தே படிக்கப்பட்டன. சுதந்திரத்துக்குப் பிறகு நவீன கல்வி பரவலான பிறகே நவீன கவிதை, புதுக்கவிதை எனும் வடிவம் நம் கைக்கு வருகிறது.

சுயமாகச் சிந்திப்பதும், அதே நேரம் உலகில் நமது தோற்றத்தை, இருப்பை, அர்த்தத்தை மதத்தின் பாற்பட்டும் மதமின்றி, கடவுள் இன்றி இயற்கையின் பாற்பட்டும் சிந்திப்பது அங்கு, குறிப்பாக இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும், முக்கியமான பேசுபொருளாகிறது. இச்சிக்கல் இந்தியாவில் பெரும்பாலும் நம் கவிதையில் ஒரு முக்கிய நெருக்கடி அல்ல. அதற்கு ஒரு காரணம் நம்மூரில் முன்பு தத்துவார்த்தமாக பகுத்தறிவு, மீமெய்யியல் எனப் பள்ளிகள் பிரிந்து விவாதித்திருந்தாலும் இரண்டு தரப்புகளின் சமரசமே நீடித்தது, பக்தி மரபுக்குப் பின் இந்தச் சிந்தனைப் பள்ளிகள் ஒன்று கலந்து, எதாவது ஒன்று மற்றொன்றை ஆக்கிரமித்தும் ஒரு போக்கு உருவானது. நம்மால் மரபிலும் நவீனத்துவத்திலும் நிலைக்க இயன்றது. நாம் சில நேரங்களில் நவீனத்துவத்தை மரபின் வேரில் இணைத்துக் கொண்டோம். நமது இந்திய நவீனத்துவ கவிஞர்கள் பெரும்பாலானோர் கடவுள் மறுப்பாளர்களோ பகுத்தறிவாளர்களோ அல்லர். தமிழிலும் இதுவே நிலை. நேரடியாகக் கடவுளை ஏற்காதவர்கள் கூட மரபின் சாரத்தை ஏற்றுக் கொண்டனர். சி.சு செல்லப்பா புதுக்கவிதையை நிறுவ முயன்றாலும் இன்னொரு பக்கம் அவர் மரபுவாதியாக விளங்கினார். சாதிச் சங்கத்தில் செயல்பட்டார். தேவதேவன் இப்போதும் கூட தன் கவிதைகள் வழியாக ஒரு புது அத்வைத மெய்யியல் மரபைப் பரிசீலித்து வருகிறார். இதன் இன்னொரு பரிணாமத்தை அபியிடம் காண்கிறோம். நகுலன் இதனிடையே இன்மையை நோக்கி கவிதையை நகர்த்தினார். யுவனிடமும் தேவதச்சனிடமும் ஜென் அழகியலைப் பார்க்கிறோம். கற்பனவாதச் சாயல் கொண்ட நவீன கவிஞர்கள் நம்மிடம் அதிகம். தலித்திய, பெண்ணிய கவிஞர்களின் பகுத்தறிவு, மார்க்ஸிய மரபின் போக்குகளும் அகவயமான போக்குகளும் இணைகின்றன. மனுஷ்ய புத்திரனிடம் ஆன்மீகக் கவிதை காதல் கவிதையாக புலப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது. இப்படி நாம் கலந்து கட்டிச் செயல்படுகிறோம்.

மேற்கில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய கற்பனாவாதம் ஒரு முக்கியமான போக்கு எனில், இருபதாம் நூற்றாண்டில் ஒரு படைப்பை ஆசிரியரின் வாழ்க்கை, காலகட்டத்தின் வரலாற்றுப் போக்குகளை வைத்துப் புரிந்து கொள்வதா அப்பிரதி எழுதப்பட்ட விதத்தை மட்டுமே வைத்துப் பார்ப்பதா எனும் விவாதம் அடுத்து வந்த முக்கியமான போக்காகிறது. அதாவது வரலாற்றுவாதம், சமூகவியல் வாசிப்பு, தன்கதை வாசிப்பு என ஒரு பக்கமும், கவிதையை அதன் வடிவத்துக்காக வாசிப்பது என இன்னொரு பக்கமும் வாசிப்புக் களம் உடைந்தது. இது பின்னர் மேத்யூ அர்னல்டின் உரைகல் முறைமை, பிரெஞ்சு உருவவியல், நடையியல், அமைப்புவாதம், பின்னமைப்புவாதம் என ஒரு தனிமரபாக வளர்ந்தது. தமிழில் க.நா.சு முன்வைத்தது ஒருவிதமான உரைகல் முறைமைதான் - சிறந்த படைப்புகளைத் தொடர்ந்து வாசித்தால் நம் ரசனை மேம்பட்டு நம்மால் மோசமான படைப்புகளைப் புறந்தள்ள முடியும், ஒப்பிட்டு வாசிக்க வாசிக்க சிறந்த படைப்புகளே மேலெழுந்து உன்னத இலக்கியத்தின் பட்டியல் (cannon) ஒன்று தோன்றும் என அவர் நம்பினார். இதை அவர் வெகுஜன ஊடக மரபுக்கு எதிராக வைத்தார். சி.சு செல்லப்பாவும் மரபுக் கவிதைக்கு எதிராக 'புதுக்கவிதையை' நிறுவும் நோக்கில் நிறைய எழுதினார். அவரது பார்வையும் ஒருவித ரசனைவாதம்தான். அதாவது தமிழில் புதுக்கவிதை, நவீன கவிதை தோன்றியபோது அதை அகவயமாக நோக்கும்பொருட்டும், மொழியைச் செறிவுபடுத்தும் நோக்கிலும் ரசனையாக அதை வளர்ப்பதை முக்கியமாக நம் நவீன கவிதைப் பிதாமகர்கள் கருதினார்கள். கவிதையை அதன் நடை, உருவத்தை வைத்துப் புறவமாக அலசுவது எந்திரத்தனமானது என அவர்கள் கருதியிருக்கக் கூடும் என நினைக்கிறேன்.

இன்னொரு பக்கம், வானம்பாடி இயக்கம், திராவிட இயக்கம் , மார்க்ஸிய இயக்கம், தமிழ் தேசிய இயக்கம் ஆகியவை கற்பனாவாத கவிதைகளை, அரசியல் முழுக்கக் கவிதைகளை, மரபுக் கவிதைகளைப் போற்றி வளர்த்தன. வானம்பாடிக் கவிதைகள் (மு.மேத்தா, வைரமுத்து, தமிழன்பன், அப்துல் ரகுமான்) பெரும்பாலும் காதல் கவிதைகளாகவோ சமூகப் பகடிகளாகவோ இருந்தன. அவற்றில் மிகையும் போலித்தனமும் இருந்தன. அவற்றை முழுக்க ரசனை பாணியிலே வாசித்தோம். அதனாலே அவை கவியரங்குகளின் வழியாகத் தம்மை நிலைப்படுத்தின. வானொலி, டிவி ஆகிய தொழில்நுட்ப ஊடகங்களின் வருகையுடன் கவிதையைப் படித்துக் கேட்டு ரசிக்க வேண்டிய ஒரு நிர்பந்தம் போய் அந்த இடத்தை திரைப்பாடல்கள், திரை வசனங்கள், விளம்பரப் பாடல்கள் எடுத்துக் கொண்டன. அத்துடன் வானம்பாடி மரபு வீழ்ந்தது. வானம்பாடி மரபில் அப்துல் ரகுமான் அறிமுகப்படுத்திய சர்ரியல்வாதம் சற்றே மேம்போக்காக இருந்தாலும் முக்கியமானது. துரதிஷ்டவசமாக நவீனத்துவ கவிதையில் அது பெரிய செல்வாக்கைச் செலுத்தவில்லை.

மார்க்ஸிய கவிதைகள் இன்னும் வாழ்க்கைக்கு நெருக்கமாக, எதார்த்தமாக, விளிம்பு நிலைக் குரல்களை முன்னிலைப்படுத்த விழைந்தாலும் அவையும் சில நேரங்களில் பிரச்சாரமாகவே அமைந்ததாலும், நவதாராளத்துவ பொருளாதாரத்தின் எழுச்சிக்கு முன்பு மார்க்ஸிய இயக்கங்கள் தளர்ந்து போனதாலும் மார்க்ஸிய கவிதைகளால் சமகாலத்தில் தம்மை நிலைப்படுத்த முடியவில்லை. அது நவீன கவிதையுடன் கலந்து மறைந்து போனது. அதாவது இன்றைய பெண்ணிய கவிதை, தலித் கவிதை, எதிர்க்கவிதை ஆகியவற்றில் மார்க்ஸிய கவிதையின் நிழலை நாம் காண முடியும்.

அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பிரான்ஸிலும் 50கள் துவங்கி எழுபதுகள் வரை ஆட்சி செலுத்திய வாசிப்புக் கோட்பாடுகள் எண்பதுகளின் பிற்பகுதியிலும் தொண்ணூறுகளிலும் தமிழில் அறிமுகமாயின. உளவியல் வாசிப்பு, மார்க்ஸிய வாசிப்பு, பெண்ணிய வாசிப்பு, வரலாற்றுவாதம், அமைப்பியல்வாதம், பின்னமைப்பியல்வாதம் என பல அலைகள் தோன்றின. இதையடுத்து பினநீவினத்துவம் வலுவாக அறிமுகமானாலும் அது கவிதையிலோ கவிதை வாசிப்பிலோ பெரிய தாக்கத்தை இன்னும் ஏற்படுத்தவில்லை.

நவீன கவிதையை வாசிக்கும் முன்பு மேற்சொன்ன விமர்சனத் தரப்புகளின் மேலோட்டமான புரிதலாவது அவசியமாக உள்ளது. ஏனென்றால் நவீன கவிதை என்று நாம் இன்று பார்க்கிற ஒன்று நவீனத்துவ, பின்நவீனத்துவப் போக்குகளை உள்வாங்கியதாகும். அதில் நவீனத்துவத்துக்கு முந்தைய போக்குகளையும் நீங்கள் காணக் கூடும். மரபான, நவீனத்துவ, பின்நவீனத்துவ விமர்சனங்களுடனே இன்றைய கவிதை தோன்றி உருக்கொண்டிருக்கிறது என்பதால் முன்னவற்றைப் புரிந்துகொள்ளாமல் பின்னதை வாசிக்க இயலாது. முழுமையாக விளங்கிக் கொள்ள இயலாது.

ஒரு இடுபணி. கீழ்வரும் கவிதையின் பின்னணிகளைக் கற்பனை செய்து பார்த்து 3-5 சொற்றொடர்களில் கொடுங்கள். பின்னணி என்று நான் சொல்வது இக்கவிதை எந்தக் கருத்தியல், சமூகவியல், வரலாற்று, தத்துவார்த்த கோணத்தில் உங்களால் வாசிக்கப்படக் கூடும் என்பது. நான் சொல்வது நேரடியான வரலாற்றுச் சம்பவமோ தகவலோ அல்ல. கவிதை இந்த நேரடித்தன்மையைக் கடந்த ஒன்று:

கோணம்
- சி. மணி

நீ கவிதை எழுதுவதும்
அவன் மலம் எடுப்பதும்
மதிப்பீட்டில் வேறானாலும்
வகையில் ஒன்றுதான்
ஒரு கோணத்தில் பார்த்தால் பார்த்தால்
அவனது
உனதைவிடச் சிறந்தது.
மேலும்
அலைவுகளை விட்டுச் செல்வதைவிட
சுவடற்று மறைவது மேல்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...