ஒரு தோழி நவீன கவிதை வாசிக்க நான் கூட இருந்தேன். அவர் படிக்கப் படிக்க தன் அபிப்ராயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் "உங்களுக்கு இன்னும் சரியாகப் படிக்கத் தெரியவில்லை. ஒரு கவிதையில் உடனடியாகத் திறந்து கொள்ளாத பல தளங்கள் இருக்கும். கற்பனையால் விரிக்க வேண்டிய இடங்கள் இருக்கும். கற்பனையில் கண்டதைத் தெளிவாகச் சொல்லவும் ஒரு மொழி இருக்கிறது. இதை முறையாகக் கற்றுக் கொள்ளலாம்." என்று சொன்னேன். அவர் எப்படி என்று கேட்டார். அப்போதுதான் எனக்கு இந்த ஐடியா தோன்றியது. ஏன் இதை ஒரு இணையப் பயிலரங்காக நடத்தக் கூடாது? அதில் அவரைக் கலந்துகொள்ளச் சொல்லிவிட்டேன்.
என்னுடைய திட்டம் ஐந்து பகுதிகளாக தலா 45 நிமிடப் பயிலரங்குகள். 45 நிமிடம் முடிந்ததும் 15 நிமிடங்கள் கேள்வி-பதில். கவிதைக்கு பெரிய சந்தை மதிப்பில்லை என்பதால் கவிஞர்கள், கவிதை வாசகர்களிட கட்டணம் வாங்குவதில் அர்த்தமில்லை. ஆகையால் இது முழுக்க இலவசம்தான். நாளை மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கிறேன்.
ஏற்கனவே கவிதை எழுதுவதற்கான வகுப்புகளை நடத்தி இருக்கிறேன். ஆனால் இது அப்படியானது அல்ல. என் நோக்கம் இங்கு கவிதையெழுதச் சொல்லித் தருவதல்ல. வாசிப்பதற்கு உதவுவதும், வாசித்ததைப் பற்றிக் குறிப்பெழுதவும் பேசவும் கற்றுத் தருவதுமே. சில வகுப்புகளில் இடுபணிகள் இருக்குமென்பதால் வகுப்பில் பேசவும் தரப்பட்ட பணியை ஈடுபாட்டுடன் செய்யவும் விருப்பமுள்ளவர்கள் மட்டுமே வந்தால் போதும்.
இதில் எத்தனை பேர்களுக்குக் கலந்துகொள்ள விருப்பமோ கமெண்டில் தெரிவியுங்கள். தொடுவழியை நாளைப் பகிர்கிறேன். நன்றி.
Comments