வருண் சக்கரவர்த்தியை எதிரணி மட்டையாளர்கள் அடித்துப் பிளப்பதைப் பார்த்தால் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. இந்த உலகக்கோப்பை ஆரம்பிப்பதற்கு முன்பு தென்னாப்பிரிக்கா நமக்கெதிராக டி20 தொடரை ஆடினார்கள். அப்போதே இதற்கான முயற்சியை தொடங்கினார்கள். ஆனாலும் அப்போது வருண் கொத்துக்கொத்தாக விக்கெட்டுகள் எடுத்ததால் அவர் அடிவாங்கியது பெரிதாகத் தெரியவில்லை. இந்த உலகக்கோப்பையிலோ வருணுக்கு விக்கெட்டுகளும் விழவில்லை. அவர் வந்ததுமே சிக்ஸர்களாக அடிக்கிறார்கள். அவர் முகமும் பார்க்க ஏதோ வகுப்புக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட அப்பாவி மாணவனைப் போல மாறிவிடுகிறது. அணித்தலைவர் சூரியகுமாரால் இந்த ஆட்டப்பகுதியைக் கட்டுப்படுத்தவும் முடிவதில்லை, விக்கெட் எடுப்பதும் அசாத்தியமாகிறது. பும்ரா, அர்ஷதீப்பை சீக்கிரமாகக் கொண்டு வந்தால் இறுதி ஓவர்கள் பாதிக்கப்படும். ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்தியா போவதால் இந்த ஒரு முக்கியமான கண்ணி அறுபட்டதும் தடுமாறுகிறோம். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மே.இ தீவுகள் ஆகிய அணிகள் எல்லாமே மத்திய ஓவர்களில் அதிக ரன் அடித்தது இதனால்தான். வருண் சக்கரவர்த்திக்கு என்னவாயிற்று? அவரது புதிர்மை முன்பு போல இல்லையா? அவரை சுலபத்தில் கணிக்கிறார்களா? இல்லை, வேறொரு அணுகுமுறையைக் கொண்டு வந்துள்ளார்கள். இது இப்போதைக்கு எதிரணி மத்திய வரிசை மட்டையாளர்களுக்கு கைகொடுக்கிறது.
வருணிடம் ஏகப்பட்ட மாறுபட்ட பந்துகள் உண்டு. ஆனால் இவை குச்சிகளின் பரப்புக்குள் விழுவன. அதாவது மூன்று குச்சிகளையும் விட்டு அவர் வெளியே பந்தை அதிகம் திருப்புவதில்லை. அப்படிச் செய்தாலும் பந்து வெகுவாகத் திரும்புவதில்லை. அவரது வீச்சில் மட்டையாளர்கள் எக்ஸ்டிரா கவர், லாங் ஆபில் அதிகம் கேட்ச் கொடுப்பதை நீங்கள் பார்க்க முடியாது. அவரை முன்பு பெருக்கி (ஸ்வீப்) அடிக்கப் பார்த்தார்கள். ஆனால் அவர் முழுநீளத்தை விட சற்று குறைநீளத்தில் வேகமாக வீசுவதால் ஒன்று பவுல்ட் ஆனார்கள் அல்லது எல்.பி.டபிள்யு. அல்லது பந்து குச்சிகளுக்கு மேலாகப் போகும். மட்டையில் படாது. அவரது நீளத்துக்கும் வேகத்துக்கும் இறங்கி வருவதும் சுலபம் அல்ல. அவரை இவர்களால் வாசிக்க இயலவில்லை என்பதால் தடுத்தாடுவதும் சுலபம் அல்ல. இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்கத்தான் தென்னாப்பிரிக்கர்கள் முதலில் அவரை நேராக அடிக்க முயன்றார்கள். அதாவது அவரை ஒரு உள்வரும் பந்து வீச்சாளராக ஆடினார்கள். குச்சிகளைக் காட்டிவிட்டு நின்று நேராகவோ மிட்விக்கெட் பகுதியிலோ தூக்கி அடித்தார்கள். பின்னங்காலுக்குப் போய் புல் ஷாட் ஆடினார்கள். அல்லது கட் அடித்தார்கள். வருண் பயந்து போய் பந்தை முழுநீளத்தில் வீச சிலர் ரிவர்ஸ் ஸ்வீப், லேப் அடித்தார்கள். அவர் பந்தை வெளியே கொஞ்சம் வீச அவர்கள் அங்கிருந்து வாரி எடுத்து லாங் ஆன் பகுதியில் சிக்ஸர் அடித்தார்கள். இந்த உலக்கோப்பை சூப்பர் எய்ட்ஸின் போது எதிரணி மட்டையாளர்கள் அடித்த இந்த குறிப்பிட்ட சில ஷாட்கள் சிக்ஸர்கள் போன போது வருண் கடும் அழுத்தத்திற்கு ஆளானார். அவர் மேலும் மேலும் குறைவான நீளத்தில் வீசுவதால் அவருக்கு விக்கெட்கள் விழுவதும் இல்லாமல் போனது. அவரது மாறுபட்ட பந்துகள் சுழல்வதை நிறுத்தின.
அதாவது வருணை தடுத்தாட முடியாமல் எதிரணியினர் சிக்ஸர் உத்தியைக் கையில் எடுக்க அது வருணை நிலைகுலைய வைக்கிறது. வருண் இதைச் சரி செய்ய முதலில் சிக்ஸர்களைத் தடுத்து அவர்களை ஒற்றை, இரட்டை ஓட்டங்கள் எடுக்க வைக்க வேண்டும். வருணின் பந்துகள் ஒரு கால்சுழரைப் போல வெகுவாக வெளியே சுழல்வதில்லை. அவர் கிட்டத்தட்ட கும்பிளேயைப் போல வீசுபவர். முன்பு கும்பிளேயையும் இப்படித்தான் சில மட்டையாளர்கள் நின்ற வாக்கில் நேராக சிக்ஸர் அடித்தார்கள். பின்னுக்குப் போய் கட் அடித்தார்கள். கும்பிளே தன் கால்சுழல் பந்திலும் நீளத்திலும் கவனம் செலுத்தி சமாளித்தார். இப்போது அவர் வருணுக்குப் பரிந்துரைப்பதும் இந்த உத்தியைத்தான். எனக்கு அது எடுபடாது எனத் தோன்றுகிறது. வருண் தன் பந்து வீச்சின் முறைமையை மாற்றி மீண்டு வருவதற்கான கால அவகாசம் இல்லை. அதற்குப் பதிலாக அவர் கால் பக்கமாக மட்டையாளர்களை இலக்காக்க வேண்டும் என நினைக்கிறேன். அதாவது மிதவைப் பந்துகள், கால்சுழல் பந்துகளை நடு மற்றும் கால் குச்சிகளை நோக்கி வீசி அதற்கு ஏற்ப லாங் ஆன், டீப் மிட் விக்கெட், பைன் லெக், நேரான களத்தடுப்பாளர்களை வைத்து எதிர்மறையாக வீச வேண்டும். அப்போதும் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுவார்கள். ஆனால் அதைக் குறித்து அவர் அதிகம் கவலைப்படக் கூடாது. வேண்டுமென்றால் கவர் பகுதியில் இருந்து ஒருவரை எடுத்து ஸ்வீப்பில், பாயிண்டில் வைக்கலாம். அந்த ஷாட்டில் எப்படியும் ரிஸ்க் உள்ளது. பந்து கொஞ்சம் பவுன்ஸ் ஆனால், நின்று வந்தால் விக்கெட் கிடைக்கும். அடுத்த சில போட்டிகளில் வருண் எல்.பி.டபிள்யு, பவுல்டை மறந்துவிட வேண்டும். காலில் விழும் பந்துகளை நேராக அடிப்பது சிரமம். மட்டையை வீசுவதற்கான இடமும் கொடுக்காவிட்டால் மிட்விக்கெட், நேரான சிக்ஸர்கள் வருவதும் குறையும். பந்து அதிகமாகச் சுழலும்போது மட்டும் அவர் பழையபடி குச்சிகளுக்கு நேராக வீசலாம். ஒன்றிரண்டு சிக்ஸர்கள் போனாலும் விக்கெட் விழும்.
இந்த உத்தியைத் திறம்படக் கையாள்பவர் சுனில் நரைன். அவர் பந்தை வெளியே தூக்கி அடிப்பதற்கான இடத்தையே தர மாட்டார். எல்லா பந்துகளும் கால்பக்கமாகவே போகும். வருண் அவரது ஐ.பி.எல் பந்துவீச்சை கவனித்தாலே பெரிய திறப்பாக அது அமையும்.
இப்போதைக்கு சிக்ஸர் போனதும் வருண் வெளியே வைடாக, குறைநீளத்தில், முழுநீளத்தில் என என்னென்னவோ முயல்கிறார். இந்த முயற்சிகள் அவரைப் பலவீனப்படுத்த அதிகமாக அடிவாங்குகிறார். அவர் குழப்பத்தில் இருக்கிறார். அவர் செய்ய வேண்டியதெல்லாம் தன் திசையை மாற்றுவதுதான். செய்வாரா என இறுதிப் போட்டிவரை காத்திருந்து பார்க்கலாம்.
இப்போதைக்கு துணிச்சலான இந்த அணுகுமுறையைக் கொண்டு வருணின் ஆட்டத்தை நிர்மூலமாக்கிய எதிரணி மட்டையாளர்களை, அவர்களுடைய வியூக அமைப்பாளர்களை, பயிற்சியாளர்களை, பகுப்பாய்வாளர்களை, புள்ளியியலாளர்களைப் பாராட்ட வேண்டும். சபாஷ்!
Comments