புக்காவஸ்கியை வாசிப்பது எப்போதுமே மிகச்சிறந்த மதுவை அருந்தும் அனுபவம். அவரது மிகச்சிறந்த படைப்புகள் செக்ஸில் திளைப்பதற்கு ஈடான புலனின்பத்தைத் தருவதுண்டு. ஆனால் "ஹாலிவுட்" ஒரு தரமான மது மட்டுமே. ஒரு நாவலாக இது எழுந்து வரவில்லை. அவரது அனுபவங்களின் குறிப்புகள் அவரது திரைக்கதை படமாக்கப்பட்டதை ஒட்டித் தொகுக்கப்பட்டுள்ளன. படத்துக்கான திட்டமிடலிலும் துவங்கி படம் எடுத்து வெளியாகி அதை ஒரு மாதத்திற்குப் பின் புக்காவஸ்கி ஒரு திரையரங்கில் குறைவான பார்வையாளர்கள் மத்தியில் பார்த்துவிட்டு ஒருவித நிறைவற்ற நிறைவுணர்வுடன் வெளிவருவதுடன் நாவல் முடிகிறது. ஆனால் அது சரியான முடிவு அல்ல. நாவலின் மையச் சிக்கலை அவர் கண்டடையவே இல்லை. முழுக்கவே வெளியுலகின் அலைகழிப்புகள் மத்தியில் அவர் தன்னைக் கண்டடையும் தத்தளிப்பு தெரிகிறது. ஒரு படைப்பாளியாக அவரது வலிமை இந்த அகவுலகம்தான். அவரது அந்தரங்கமான அன்றாட உலகம்தான். சினிமா உலகின் பல சிக்கல்களை, வேடிக்கைகளை, அபத்தங்களை, தனிமனிதர்களுக்கு அது இழைக்கும் கொடூரங்களைப் பற்றிப் பேசும் கவனம் புக்காவஸ்கியின் ஆதாரமான நெருக்கடிக்குள் நாவலைக் கொண்டு செல்ல விடாமல் தடுக்கிறது. இப்புறவுலகிலும் அவர் ஒரு அர்த்தத்தைக் கண்டுபிடித்து வடிவமைக்க முயலவில்லை. போதையில் உடலுறவு கொள்ள முயன்று தோல்வி அடைவதைப் போல நாவலின் முயற்சி ஆகிவிடுகிறது.
இந்நாவலின் சிறப்பு அவர் வாழ்வில் கண்ட சில படைப்பாளிகள், இயக்குநர்கள், நடிகையரை அவர் (பெயர்களை மாற்றி) பகடியாகவும் எதார்த்தமாகவும் சித்தரிக்கும் பகுதிகள். மிகவும் நகைச்சுவையான, வாசகரை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் வர்ணனைகள்.
புக்காவஸ்கியின் நாவல் சுமாராக இருந்தாலும் அதை நாம் சோர்வாக கசப்பாக கீழே வைக்க மாட்டோம். இந்நாவலும் அப்படித்தான். முடித்ததும் என் முகத்தில் ஒரு புன்னகை இருந்தது. அதன்பிறகு ஒரு தூக்கம் போட்டேன். அப்போது வந்த கனவிலும் இன்பம் ஒரு மின்சாரமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. விழித்தபின்னரும் என்னால் அவரது எழுத்தின் அதிர்வை உணர முடிந்தது.
இந்நாவலில் மனதை மிகவும் வருத்த வைக்க வேண்டிய சில சம்பவங்கள் வருகின்றன. ஆனால் எழுத்தினுள் எங்குமே துயரம் இல்லை. இதைக் குறித்தே நான் தொடர்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன். அதெப்படி துயரத்தை துயரமின்றி எழுதுகிறார்? ஒரு கதாபாத்திரம் தம் விரலை மின்ரம்பத்தால் அறுக்கப் போவதாகச் சொல்லும்போதும், ஒரு குப்பையான சேரியில் ஒரு இயக்குநர் தங்கிக் கொண்டு பல சிரமங்களுக்கு ஆட்பட்டு பைத்தியம் பிடிக்கிற நிலைக்குப் போகும்போதும் அதில் ஒரு நகைச்சுவையை புக்காவஸ்கி கொண்டு வந்துவிடுகிறார். அவரது விட்டேத்தியான எழுத்து அணுகுமுறை இதைச் சாத்தியப்படுத்துகிறது. இது எனக்குக் கிடைத்த ஒரு முக்கியமான திறப்பு.
Comments