Skip to main content

நாவலாசிரியரின் குறிப்புகள் - 14


 

நாவலென்பதை நமது அகத்தின் - இன்னும் துல்லியமாகக் கூறுவதானால் நமது பிரக்ஞையின் - உருவகம் என்று அழைக்கலாம். நாவலில் வரும் கதையமைப்பு, களம், காட்சிகள், பாத்திரங்கள், கருத்துகள் நேரடியாகவே அவ்வாறு நம் மனத்தில் வந்து விழுவதில்லை. பிலிப் ராத்தின்மார்புநாவலில் நாயகன் ஒரு பெரிய சைஸ் முலையாகி விடுகிறான். அடுத்து அவனுக்கு என்னவெல்லாம் இடர்கள், அபத்தமான சந்தர்பங்கள் ஏற்படுகின்றன என்பதே அந்நாவலின் கதையமைப்பு. நவீன நகரயமான சூழலே அதன் களம். அந்நியப்பட்ட தனிமனிதர்களே பாத்திரங்கள். இதில் வரும் கருத்துகள் நம் தாராளவாத முதலாளித்துவ சமூகத்தில் உள்ள தனிமை, சுதந்திரமின்மை, அர்த்தமின்மை, வெறுமை, அச்சம், புலனின்பத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தும் போக்கு ஆகியவை. நாம் நாவலைப் படிக்கையில் நேரடியாகவோ நிஜமாகவோ நம் புலனுலகில் இவை தோன்றுவதில்லை. ஒரு மிகப்பெரிய முலையாகிவிட்ட நாயகன் நம் வாசிப்பில் முலையல்ல. அவன் என் வாசிப்பில் தனிமனிதனின் அபத்தமான அந்தரங்கமாகத் தென்படலாம்அல்லது வேறுவிதங்களில் அது தோன்றும் காட்சியைப் பொறுத்துத் தெரியலாம். பாத்திரங்கள் இன்ன இடத்தில் நேரத்தில் இப்படித் தோன்றி இவ்வாறு செய்து அதன் விளைவாக இன்ன இடத்தைச் சென்று அடைவார்கள் எனும் கதைத் திட்டமிடலும் அவற்றின் அகப்பயணமாக நமக்குத் தோன்றக் கூடும். இக்காரணங்களினாலே நம்மால் ஒரு நாவலைச் சுலபத்தில் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதற்கு ஒரு முக்கியமான காரணம் அந்த நாவலில் வரும் மேற்சொன்ன பகுதிகள் எழுத்தாளரின், வாசகரின் பிரக்ஞையின் அடுக்கடுக்கான அமைப்புகளையே நமக்குக் குறிப்புணர்த்தக் கூடும். படிக்கப் படிக்க ஒரு நாவலின் அகக்கட்டமைப்பு நம் அகக்கட்டமைப்புடன் பொருந்தி அதை உருமாற்றுவதை நாம் உணர முடியும்

பிரக்ஞையை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு அவசியமானதாகிறது - பிரக்ஞை என்பது மனத்தின் தன்னுணர்வு அல்ல. அது ஒரு மனம் தன் சூழலுடனும் நேரத்துடனும் உறவாடும்போது தன் நினைவுகளாலும் கருத்துக்களாலும் எண்ணங்களாலும் உணர்வுகளாலும் பல படிவங்களையும் நிலைகளையும் உருவாக்கி தன்னுற்பத்தி பண்ணுவதாகும். தன்னைத்தானே கட்டமைக்கிற ஒரு கண்ணாடி மாளிகையை நம் பிரக்ஞையுடன் ஒப்பிடலாம். உலகில் அசைவனவும் தோன்றுவனவும் அந்த மாளிகையிலும் பிரபலித்துத் தெரியும். பிரக்ஞை மொழியாலானது. ஆனால் அது நிரந்தரமான அமைப்பும் அல்ல. நான் இப்போது இக்கணம் எப்படி என்னைக் குறித்து உணர்கிறேன் என்பது நான் என்னை எப்படிப் பார்க்கிறேன் (தன்னுணர்வு), பார்க்க விரும்புகிறேன் (விழுமியம் / நம்பிக்கை), என் பழைய நினைவுகள், உடனுக்குடன் கிடைக்கும் அனுபவங்கள், நான் இருக்கும் சூழலில் இருந்து கிடைக்கும் தூண்டுதல்கள் ஆகியவற்றில் இருந்தே மலர்கிறது. என்னுடைய தன்னுணர்வை மட்டுமே எடுத்துக் கொண்டாலும் அதன் பின்னால் என்னுடைய அறிவு, புரிதல், எண்ணங்கள், நினைவுகள், அழகியல் தேர்வு, பண்பாடு, மொழிமொழியின் நினைவுகள், எல்லாவற்றை அள்ளியணைத்து ஒன்றாக்குகிற என் கற்பனை எனப் பலவும் உண்டு. இப்படி ஒவ்வொன்றும் மற்றொன்றைப் பிரதிபலித்துப் பின்னால் சென்று கொண்டே இருக்கிறது. இதை அப்படியே ஒரு நாவலுடன் - நாவலின் குறியீடுகள், உருவகங்கள், தீவிரமான உணர்ச்சிகள், பாத்திர அமைப்பு, பாத்திரங்களின் செயல்கள், அவற்றின் அடுக்கு, அந்த அடுக்கு ஏற்படுத்தும் தோற்றம், உரையாடல்கள் ஆகியவற்றுடன் - ஒப்பிடலாம். ஒரு நாவலுக்குள் இவை ஒன்றையொன்று பிரதிபலித்தும் குறிப்புணர்த்தியும் தோன்றுகின்றன. “குற்றமும் தண்டனையும்நாவலில் ரஸ்கோல்நிக்கோவ் ஜுர வேகத்தில் தன் அறைக்குள் முன்னும் பின்னுமாக நடக்கும்போது நமக்கு ஊசல் நினைவுக்கு வருகிறது. அவன் மனதுக்குள் ஊசலாடுகிறான் எனத் தோன்றுகிறது. இப்போது அவன் நடப்பது ஊடலாடும் தோற்றத்தைக் குறிப்புணர்த்தி அந்த ஊசலாட்டம் அவன் அகத்தின் சஞ்சலத்தைக் குறிப்புணர்த்துகிறது. அவன் அகத்தின் அலைபாய்ச்சல், ஓய்வற்ற அலைப்பாய்ச்சல் எதைக் குறிப்புணர்த்துகிறது? அவன் இயல்பையா, அவன் ஆன்மாவையா, அவனது அதுவரையிலான வாழ்வையா? இது நாவலின் ஒரு கருப்பொருள் என்றால் அக்கருப்பொருள் ஒரு கருத்தா குறியீடா? அக்கருத்து எனும் குறியீடு அவனது கதைக்களத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. அது அவன் கதைக்களத்துக்கு ஒரு குறியீட்டுத்தனத்தை அளிக்கிறது. ஒட்டுமொத்த நாவலையும் ரஸ்கோல்நிக்கோவின் அகமாக, அகத்தின் குறியீடாகக் கருத முடியுமெனில் அவன் அகமே ஒரு குறியீடுதானே? எனில் அவன் அந்நாவலுக்குள் எதை நிகழ்த்துகிறான், நான் அதில் எதைக் காண்கிறோம்? இப்படி நாவலின் அமைப்பே ஒன்றை மற்றொன்றில் இருந்து பிரிக்க முடியாதபடி அது இருக்கிறது.

நான் என்னுடைய நாவலின் பாத்திரம் ஒன்றின் வினோதச் செயலொன்றை நம்பும்படியாக வர்ணிக்க வேண்டியிருந்தது. ஆனால் நான் அதுவரை உருவாக்கியிருந்த கதைக்களம், கதைமொழிக்குள் அது பொருத்தமாக, நம்பகத்தன்மையுடன் அமையவில்லை. ஆகையால் நான் பின்னதை மாற்ற வேண்டி வந்தது. அதாவது ஒரு கதாபாத்திரத்துக்காக கதைக்களத்தையும் கதைமொழியையும் மாற்றினேன் எனப் பொருளில்லை. பின்னவை என் கதாபாத்திரத்தின் அகப்பயணத்தைக் குறிப்புணர்த்தும் உருவகங்கள் மட்டுமே. என் பாத்திரத்தின் பயணம் சரிவர நடைபெறவில்லை என்றால் நான் அதற்கான உருவகங்களையே மாற்ற வேண்டும் என நினைத்தேன். அடுத்து நான் இதைச் செய்தபோதுதான் என் பாத்திரத்தின் அகவுலகின் பல நெருக்கடிகளும் உண்மையான சிக்கல்களும் புரிய வந்தன. (என்னாலே அதற்கு ஒரு சுலபமான தீர்வை இதுவரைக்கும் கண்டறிய இயலவில்லை.) இதன்பிறகே நான் கதைசொல்லியான மற்றொரு பாத்திரத்தின் உலகுக்குப் போக வேண்டி வந்தது. அவனிடமும் நான் பல மாற்றங்களைச் செய்தேன். இன்னும் நான் அவனை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றாலும் என் கதையுலகின் குறியீட்டுத்தன்மையைக் கொண்டு என்னால் ஒருநாள் அவனது ஆழத்துக்குள் போக முடியுமென ஒரு நம்பிக்கை உள்ளது. சரி, நான் சொல்ல வந்த விசயத்துக்கு இப்போது வருகிறேன் - நேற்று நான் என் தனிப்பட்ட வாழ்வு குறித்த கேள்விகளை எனக்குள் விசாரித்து அலசி ஆராய்ந்து கொண்டிருந்தேன். செய்யறிவிடமும் அதைக் குறித்துக் கேட்டுக் குடைந்து கொண்டிருந்தேன். நான் ஒரு பொருட்டாகவே எப்போதும் கருதாத சில கேள்விகள் ஏன் நேற்று திடீரென பேருருவெடுத்து என்னை ஆட்கொண்டன? நான் ஏன் உணர்வுரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு கலங்கிப் போய் நின்றிருந்தேன்? இரவு தூங்கப் போகும்போது எனக்குக் காரணம் சட்டெனப் புலப்பட்டது. நான் என் நாவலின் கதைசொல்லிக்கு நடப்பதாக எழுதியிருந்த ஒரு மிகுபுனைவுக் காட்சி என்னை வெகுவாக அசைத்து விட்டது. ஏனென்றால் அக்காட்சி என் வாழ்க்கையில் நேரடியாகச் சம்மந்தமுள்ளது என்பதைவிட அது சுட்டுகிற குறியீட்டுப்பொருள் எனக்கு மிகவும் அவசியமானது. ஆனால் நான் அதைக் குறித்து என் நேரடி வாழ்வில் வருத்தம் கொள்ளும்போது அதன் குறியீட்டுப் பொருளைக் கருதவில்லை. என் நாவலில் அது மிகுகற்பனையான நிகழ்வாகும்போது நடப்புலகில் நான் அதைக் குறித்து நேரடியாகவும் பகுத்தறிவு சார்ந்துமே கவலைப்படுகிறேன். மிகுபுனைவு மொழியில் அது ஒரு குறியீடாகவும் நடப்பு மொழியில் மற்றொரு குறியீடாகவும் உள்ளது. என் நடப்புலகின் சாத்தியங்களுக்குள் என்னால் அவ்வாறு மட்டுமே அதைக் கையாள முடியும். அதேநேரத்தில், என் கதைக்குள் நான் உருவாக்கும் குறியீட்டு உலகம் என் நடப்புலகையும் அவ்வாறு மாற்றப் பார்க்கிறது. அதனாலே மிச்ச நேரங்களில் மிகச்சாதாரணமாகக் கருதிக் கடக்கும் ஒன்றை சட்டென ஒளிகொண்டு துலங்க வைக்கிறது. அதை நோக்கி என் கவனத்தை ஈர்க்கிறது.

 இந்த தற்பண்பு சுட்டும் (self-referential) தன்மையானது நாவலின் தனித்துவமான சுபாவம் என்று தோன்றுகிறது. மனிதப் பிரக்ஞைக்கு ஈடான குறியீட்டு உலகம் ஒன்றை அது மொழிக்குள் கட்டமைக்கிறது, அது பழகி அதில் திளைத்தபின்னர் அதில் இருந்து வரும் குறியீடு நமது மனதில் இருந்து எழுந்து வரும் அதே போன்றதொரு அல்லது அதுவேயான குறியீட்டுடன் உறவாடி ஒரு பாலத்தை படைப்புலகப் பிரக்ஞைக்கும் (படைப்புலகமே பிரக்ஞைதான் என்றாலும் ஒரு வசதிக்காகச் சொல்கிறேன்) நம் பிரக்ஞைக்கும் இடையில் அது ஏற்படுத்துகிறது. அதன்பிறகு படைப்புலகின் நீர்மை நம் நடப்புலகிலும் பரவத் தொடங்குகிறது. மழையின் போது சுவர்கள் ஈரமாகி அதை நம்மால் தொட்டுணர முடிவதைப் போல.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்

  முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இய...