முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்



 

முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இயலும். பாராளுமன்ற தேர்தலிலும் இது அவர்களுக்கு இங்கிருந்து கூடுதல் இடங்களாகப் போகக் கூடும்.

அதேநேரம் ஸ்டாலின் சொல்லாமல் விட்ட ஒரு பிரச்சினை உண்டு - நமது பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் சமூகம் முழுக்க சமமாகப் பரவவில்லை. அது இங்கே ஒரு திடீர் உயர்வர்க்கத்தினரை உருவாக்கியுள்ளது. உயர்மத்திய வர்க்கத்திற்கு சிறிது உதவியுள்ளது. இந்த வளர்ச்சி சில நகரங்களைத் தாண்டி பிற இடங்களுக்குப் பரவவும் இல்லை. இது என் கருத்து அல்ல. மேற்சொன்ன ஊடகங்களில் இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே வந்த அலசல்தான்.

அதாவது தமிழ்நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது; ஆனால் அது வர்க்கரீதியானது. அது சமத்துவத்துக்கு வழிவகுக்கவில்லை. ஏழ்மையை ஒழிக்கவில்லை. மத்திய வர்க்கமும் கீழ்மத்திய வர்க்கமும் கடும் நெருக்கடியில் உள்ளது. வளர்ச்சி அவர்களின் சட்டைப் பையில் பணமாகச் சென்று சேரவில்லை. அவர்களே திமுக மீது அதிருப்தியில் உள்ளார்கள். திமுக அரசின் நலத்திட்டங்களும் ஒருபக்க சார்பாகவே உள்ளன (கர்நாடகாவில் நிகழ்வதைப் போல). கடந்த பத்தாண்டுகளில் வேலைக்குப் போகிற, படித்து முடிக்கிற மக்களில் பெண்களே ஆண்களை விட அதிகம். இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகையில் பெண்களே ஆண்களைவிட அதிகமாக உள்ளனர் - 1020 பெண்களுக்கு 1000 ஆண்கள் விதம் உள்ளனர் (2019-21 National Family Health Surveyபடி). ஆகையால் மாநில, ஒன்றிய அரசுகள் மகளிருக்கான திட்டங்களாக அள்ளி வீசுகிறார்கள். மத்திய, கீழ்மத்திய வர்க்கத்தினரிடையே ஒருவித கசப்பை இது ஏற்படுத்தியுள்ளது. மகளிருக்கு இலவசப் பேருந்து திட்டம் உள்ளதால் தனக்கு வருமானம் குறைந்துவிட்டது என ஒரு ஆட்டோக்காரர் பேசும் காணொளியைப் பார்த்தேன். இது ஏற்கத்தக்க வாதமாகத் தோன்றவில்லை என்றாலும் அவர் தன் வருமானம் செலவுக்குப் போதவில்லை எனும் வருத்தத்தில் பேசுகிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். இத்தகைய கோபத்தை நான் கர்நாடகாவிலும் ஆட்டோக்காரர்கள் மத்தியில் காண்கிறேன்.

இதற்குத் தீர்வு நலத்திட்டங்களை வயது (மாணவர்கள்), பாலின (பெண்கள்) அடிப்படையில் உருவாக்காமல் வர்க்க அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதே. மாநிலத்தின் வருமானத்தை கீழ்நோக்கித் திருப்புவது அவசியம். இல்லாவிட்டால் ஒரு வர்க்கத்திடம் மட்டும் நிறைய பணம் சேரும். மக்கள் அதிருப்தியாக எரிச்சலாக இருப்பார்கள். இதனால் குற்றங்கள் பெருகும்; அநீதிகள் வலுக்கும். மதவாதம் தலைவிரித்தாடும். ஏழைச் சமூகத்தை விட ஏற்றத்தாழ்வான சமூகம் ஆபத்தானது.

ஆனால் இந்தப் பேச்செல்லாம் திமுக ஆட்சியில் இருக்கும் வரையில் மட்டுமே எடுபடும். அதிமுக வந்தால் இப்போது கிடைத்துள்ள வளர்ச்சியில் இருந்து 3 சதவீதமாவது குறைத்து விடுவார்கள். கோமாளிகள் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்தால் மாநிலம் ஒரு மனநல விடுதியாகும். அதனால் திமுக வரவேண்டும், வந்தபின் அவர்களுடைய பொருளாதார முடிவுகளை, நலத்திட்டங்களை சற்றே மாற்ற வேண்டும் என்றே விரும்புகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...