முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோமாளித் தலைவர்



 

விஜய்யின் கிறுக்குத்தனமான பேச்சைக் கேட்டேன். ஒன்று தோன்றியது - நமது தற்போதைய சமூகத்துக்கு மிகப் பொருத்தமான தலைவர் அவர்தான். சமூகம் கேளிக்கைகளாலும் வெற்றுக் கூச்சல்களாலும் நிறைந்திருக்கும்போது இத்தகையோரே தலைவர்களாக முடியும். லோசா வேடிக்கை வினோத சமூகமாக (society of the spectacle) மாறும்போது கோமாளிகளே அங்கு மன்னர்கள் ஆக முடியும் என்கிறார். கோமாளிகளாக அல்லாதவர்கள் அங்கு தம்மைத் தக்க வைக்க கோமாளித்தனங்கள் நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பர். கோமாளித்தனம் என்று நான் சொல்வது எதையும் தீவிரமாக நம்பாமல், பற்றிக் கொள்ளாமல் கைத்தட்டையும் பாராட்டையும் சிரிப்பையும் தூண்டுவதற்காக எதையாவது ஒன்றைப் பேசுவது, செய்வது, உடல்மொழியில் தான் சொல்வது, செய்வது எல்லாம் வேடிக்கைதான், ஆனால் அதற்காக தன்னை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என சிரிக்க வைத்துக்கொண்டே எச்சரிப்பது. உணர்ச்சிவசப்பட்டு சவால் விட்டுவிட்டு அடுத்த நொடியே உடலை நெகிழ்த்தி நடனமாடுவதைப் போல கேலி பண்ணிச் சிரித்தபடிப் பேசுவது, எகிறுவது, தலையாட்டுவது. பண்படுவதன் பின்னுள்ள நிலைதான் கோமாளித்தனம். அதனாலே நாம் அதை சினிமாவிலும் நாடகத்திலும் ரசிக்கிறோம். பண்படுவதன் இறுக்கங்களை அது தளர்த்துகிறது. அதனாலே குழந்தைகளிடம் எப்போதுமே கொஞ்சம் கோமாளித்தனம் இருக்கும். அவர்களுடைய நடையில், பேச்சில், கண்களில். எப்போதாவது எதையாவது செய்து விடுவார்களோ, பேசிவிடுவார்களோ என நாம் அஞ்சிக் கொண்டே இருக்கும்படி நடந்துகொள்வார்கள். பொறுப்பாக இருக்கும்போதும் எதாவது செய்து நம்மைச் சிரிக்க வைப்பார்கள். சமூகம் இத்தகைய நிலைக்குப் போகும்போது நாம் இத்தகையோரை நோக்கி அதிகமாக ஈர்க்கப்பட்டு அவர்களில் ஒரு தலைவரைக் காண்போம்.

சீமானிடமும் நாம் இத்தகைய கோமாளித்தனத்தைப் பார்த்தாலும் அவர் நாடக மேடையில் கட்டபொம்மன் வேடம் அணியும் குழந்தையைப் போலாகிவிட்டார். விஜய்யிடம் அந்தப் பழமைவாதம் இல்லை. அதற்காக நவீனமும் கூடத்தான் இல்லை - ஒன்றுமே இல்லாததன் ஒரு வசீகரம் இருக்கிறது.
எனக்கு அவர் மேடையில் பேசுவதையும் நடந்துகொள்வதையும் பார்க்க "பேட்மேன்" படத்தில் வரும் ஜோக்கர் பாத்திரம் நினைவுக்கு வருகிறார். அவர் பேச ஆரம்பித்தாலே அடுத்து என்ன கிறுக்குத்தனமாகச் சொல்வாரோ என அவரை விரும்புவோரும் விரும்பாதவர்களும் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
அவ்விதத்தில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக ஒருவரைக் கொண்டு வருவது என முதலீட்டிய வர்க்கமும் ஒன்றிய அரசும் யோசித்தபோது எதிர்பாராமல் ஒரு சரியான தேர்வையே பண்ணியிருக்கிறார்கள். நமது இன்றைய சமூகத்துக்கு ரொம்பப் பொருத்தமானவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...