முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோமாளித் தலைவர்



 

விஜய்யின் கிறுக்குத்தனமான பேச்சைக் கேட்டேன். ஒன்று தோன்றியது - நமது தற்போதைய சமூகத்துக்கு மிகப் பொருத்தமான தலைவர் அவர்தான். சமூகம் கேளிக்கைகளாலும் வெற்றுக் கூச்சல்களாலும் நிறைந்திருக்கும்போது இத்தகையோரே தலைவர்களாக முடியும். லோசா வேடிக்கை வினோத சமூகமாக (society of the spectacle) மாறும்போது கோமாளிகளே அங்கு மன்னர்கள் ஆக முடியும் என்கிறார். கோமாளிகளாக அல்லாதவர்கள் அங்கு தம்மைத் தக்க வைக்க கோமாளித்தனங்கள் நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பர். கோமாளித்தனம் என்று நான் சொல்வது எதையும் தீவிரமாக நம்பாமல், பற்றிக் கொள்ளாமல் கைத்தட்டையும் பாராட்டையும் சிரிப்பையும் தூண்டுவதற்காக எதையாவது ஒன்றைப் பேசுவது, செய்வது, உடல்மொழியில் தான் சொல்வது, செய்வது எல்லாம் வேடிக்கைதான், ஆனால் அதற்காக தன்னை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என சிரிக்க வைத்துக்கொண்டே எச்சரிப்பது. உணர்ச்சிவசப்பட்டு சவால் விட்டுவிட்டு அடுத்த நொடியே உடலை நெகிழ்த்தி நடனமாடுவதைப் போல கேலி பண்ணிச் சிரித்தபடிப் பேசுவது, எகிறுவது, தலையாட்டுவது. பண்படுவதன் பின்னுள்ள நிலைதான் கோமாளித்தனம். அதனாலே நாம் அதை சினிமாவிலும் நாடகத்திலும் ரசிக்கிறோம். பண்படுவதன் இறுக்கங்களை அது தளர்த்துகிறது. அதனாலே குழந்தைகளிடம் எப்போதுமே கொஞ்சம் கோமாளித்தனம் இருக்கும். அவர்களுடைய நடையில், பேச்சில், கண்களில். எப்போதாவது எதையாவது செய்து விடுவார்களோ, பேசிவிடுவார்களோ என நாம் அஞ்சிக் கொண்டே இருக்கும்படி நடந்துகொள்வார்கள். பொறுப்பாக இருக்கும்போதும் எதாவது செய்து நம்மைச் சிரிக்க வைப்பார்கள். சமூகம் இத்தகைய நிலைக்குப் போகும்போது நாம் இத்தகையோரை நோக்கி அதிகமாக ஈர்க்கப்பட்டு அவர்களில் ஒரு தலைவரைக் காண்போம்.

சீமானிடமும் நாம் இத்தகைய கோமாளித்தனத்தைப் பார்த்தாலும் அவர் நாடக மேடையில் கட்டபொம்மன் வேடம் அணியும் குழந்தையைப் போலாகிவிட்டார். விஜய்யிடம் அந்தப் பழமைவாதம் இல்லை. அதற்காக நவீனமும் கூடத்தான் இல்லை - ஒன்றுமே இல்லாததன் ஒரு வசீகரம் இருக்கிறது.
எனக்கு அவர் மேடையில் பேசுவதையும் நடந்துகொள்வதையும் பார்க்க "பேட்மேன்" படத்தில் வரும் ஜோக்கர் பாத்திரம் நினைவுக்கு வருகிறார். அவர் பேச ஆரம்பித்தாலே அடுத்து என்ன கிறுக்குத்தனமாகச் சொல்வாரோ என அவரை விரும்புவோரும் விரும்பாதவர்களும் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
அவ்விதத்தில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக ஒருவரைக் கொண்டு வருவது என முதலீட்டிய வர்க்கமும் ஒன்றிய அரசும் யோசித்தபோது எதிர்பாராமல் ஒரு சரியான தேர்வையே பண்ணியிருக்கிறார்கள். நமது இன்றைய சமூகத்துக்கு ரொம்பப் பொருத்தமானவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...