விஜய்யின் கிறுக்குத்தனமான பேச்சைக் கேட்டேன். ஒன்று தோன்றியது - நமது தற்போதைய சமூகத்துக்கு மிகப் பொருத்தமான தலைவர் அவர்தான். சமூகம் கேளிக்கைகளாலும் வெற்றுக் கூச்சல்களாலும் நிறைந்திருக்கும்போது இத்தகையோரே தலைவர்களாக முடியும். லோசா வேடிக்கை வினோத சமூகமாக (society of the spectacle) மாறும்போது கோமாளிகளே அங்கு மன்னர்கள் ஆக முடியும் என்கிறார். கோமாளிகளாக அல்லாதவர்கள் அங்கு தம்மைத் தக்க வைக்க கோமாளித்தனங்கள் நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பர். கோமாளித்தனம் என்று நான் சொல்வது எதையும் தீவிரமாக நம்பாமல், பற்றிக் கொள்ளாமல் கைத்தட்டையும் பாராட்டையும் சிரிப்பையும் தூண்டுவதற்காக எதையாவது ஒன்றைப் பேசுவது, செய்வது, உடல்மொழியில் தான் சொல்வது, செய்வது எல்லாம் வேடிக்கைதான், ஆனால் அதற்காக தன்னை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என சிரிக்க வைத்துக்கொண்டே எச்சரிப்பது. உணர்ச்சிவசப்பட்டு சவால் விட்டுவிட்டு அடுத்த நொடியே உடலை நெகிழ்த்தி நடனமாடுவதைப் போல கேலி பண்ணிச் சிரித்தபடிப் பேசுவது, எகிறுவது, தலையாட்டுவது. பண்படுவதன் பின்னுள்ள நிலைதான் கோமாளித்தனம். அதனாலே நாம் அதை சினிமாவிலும் நாடகத்திலும் ரசிக்கிறோம். பண்படுவதன் இறுக்கங்களை அது தளர்த்துகிறது. அதனாலே குழந்தைகளிடம் எப்போதுமே கொஞ்சம் கோமாளித்தனம் இருக்கும். அவர்களுடைய நடையில், பேச்சில், கண்களில். எப்போதாவது எதையாவது செய்து விடுவார்களோ, பேசிவிடுவார்களோ என நாம் அஞ்சிக் கொண்டே இருக்கும்படி நடந்துகொள்வார்கள். பொறுப்பாக இருக்கும்போதும் எதாவது செய்து நம்மைச் சிரிக்க வைப்பார்கள். சமூகம் இத்தகைய நிலைக்குப் போகும்போது நாம் இத்தகையோரை நோக்கி அதிகமாக ஈர்க்கப்பட்டு அவர்களில் ஒரு தலைவரைக் காண்போம்.
சீமானிடமும் நாம் இத்தகைய கோமாளித்தனத்தைப் பார்த்தாலும் அவர் நாடக மேடையில் கட்டபொம்மன் வேடம் அணியும் குழந்தையைப் போலாகிவிட்டார். விஜய்யிடம் அந்தப் பழமைவாதம் இல்லை. அதற்காக நவீனமும் கூடத்தான் இல்லை - ஒன்றுமே இல்லாததன் ஒரு வசீகரம் இருக்கிறது.
எனக்கு அவர் மேடையில் பேசுவதையும் நடந்துகொள்வதையும் பார்க்க "பேட்மேன்" படத்தில் வரும் ஜோக்கர் பாத்திரம் நினைவுக்கு வருகிறார். அவர் பேச ஆரம்பித்தாலே அடுத்து என்ன கிறுக்குத்தனமாகச் சொல்வாரோ என அவரை விரும்புவோரும் விரும்பாதவர்களும் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
அவ்விதத்தில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக ஒருவரைக் கொண்டு வருவது என முதலீட்டிய வர்க்கமும் ஒன்றிய அரசும் யோசித்தபோது எதிர்பாராமல் ஒரு சரியான தேர்வையே பண்ணியிருக்கிறார்கள். நமது இன்றைய சமூகத்துக்கு ரொம்பப் பொருத்தமானவர்.
Comments