Skip to main content

சறுக்கல்



 இது சும்மா ஒரு கணிப்புதான். எனக்கு ஆரம்பத்தில் விஜய் 7% வாக்குகளைப் பெறுவார் என்று தோன்றியது. இப்போதுள்ள பரபரப்பைப் பார்க்க திமுக மீதுள்ள அதிருப்தி வாக்குகள் அவரிடம் கொஞ்சம் அதிகமாகப் போகும் எனத் தோன்றுகிறது - அதாவது 12-15% உச்சபட்சமாக. அதுவே ஒரு பெரிய சாதனைதான். குறைந்தது 10%.

இதனால் விஜய்க்கு என்ன லாபம் என்பதைவிட திமுகவுக்கும் அதிமுகவுக்கும் என்னவிதமான பாதகங்கள் என்பதையே பலரும் பேசுகிறார்கள். திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட சற்று அதிகம் பெற்று ஆட்சியமைப்பதற்கு இது வழிவகுக்கும். அதாவது ஒரு சற்றே பலவீனமான அரசு அமையும். எதிர்க்கட்சிகள் பலமடையும்.
எப்போதுமே அரசியலில் ஒரு பலத்த குற்றச்சாட்டு வந்தால் அதை மறுக்காமல் பரிசீலிப்பதாக 'நடிக்க' வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்தீகரிப்பதாக ஒரு சடங்கில் ஈடுபட வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில் கவனமாக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக 'ஊழல் எதிர்ப்பு' பற்றிப் பேச வேண்டும். மக்களுக்கு அள்ளிக் கொடுப்பதான பிம்பத்தை உருவாக்க வேண்டும். அப்போதே அரசு தன்னைப் புதுப்பிக்க இயலும். மக்களுக்கு அந்த அரசு மீதான அபிமானம் அப்போது பலமடங்கு அதிகரிக்கும். இந்த முறை திமுக செய்த முக்கியமான தவறு 'செந்தில் பாலாஜி' - ஒன்று அவரை சிறையிலே வைத்திருந்திருக்க வேண்டும். அல்லது அவர் வெளிவந்த பிறகு பதவி கொடுத்திருக்கக் கூடாது. அதேபோல ஓராண்டுக்கு முன்னரே சில அமைச்சர்களைப் பதவி நீக்கி ஊழலைத் தண்டித்ததாகக் காட்டியிருக்க வேண்டும். ஒரு புதிய முகத்தை உருவாக்கி இருக்க வேண்டும். புதிய இளம் அமைச்சர்களின் பிம்ப உருவாக்கத்தில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் எதிர்க்கட்சியினரால் உதயநிதியைத்தான் விமர்சிக்க இயலும். அது திமுகவிற்குச் சாதகமாகவே முடிந்திருக்கும். நான் சொல்வதெல்லாம் வேறு மாநிலங்களில் அரசுகள் செய்வனதாம். ஆனால் திமுக அதைச் செய்யவில்லை.
இன்னும் சொல்லப்போனால் பாஜக அதற்கு மேல் சென்று திமுக தலைவர் குடும்பத்தின்மீது கைவைத்திருந்தால் அது திமுகவிற்கு பெரிய ஒரு ஆற்றலைக் கொடுத்திருக்கும். ஸ்வீப் செய்திருப்பார்கள். ஆனால் திமுக அது ஒரு மிகப்பெரிய ரிஸ்க் என நினைத்துவிட்டது. அது சூதாடத் தயாராகவில்லை. அதுவே இப்போது பாஜகவுடன் திமுகவிற்கு மறைமுக ஒப்பந்தம் உள்ளது என மம்தாவே பேசும் அளவுக்கு இது சென்றுவிட்டது (இது என்னதான் இந்தியா கூட்டணியுடன் உள்ள அவரது கசப்பால் சொல்லப்பட்டதாக இருந்தாலும்). இந்த வரியைத்தான் இப்போது விஜய்யும் தன் பிரச்சாரத்தில் முன்வைக்கிறார். செந்தில் பாலாஜியைத் தாண்டி வேறு யார் மீது அமலாக்கத்துறையும் சி.பி.ஐயும் கைவைக்காதது வினோதமாக திமுகவுக்குப் பாதகமாகிவிட்டது.
இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியின்போது ஸ்பெக்டிரம் ஊழல் பேசப்பட்டு கனிமொழி, ராஜா கைதானபோதும் திமுக தடுப்பாட்டமே ஆடியது. ஊழல் விசாரணை, கைது நடவடிக்கை என்றால் திமுக கொஞ்சம் தடுமாறிப் போகிறது.
தேர்தல் முடிவுகள் வருமுன்பே தீர்ப்பெழுதி விமர்சிக்க நான் முற்படவில்லை. இன்றைய சூழலை வைத்தே என் கருத்துக்களை எழுதுகிறேன். திமுக தன் வியூகத்தில் சறுக்கிவிட்டது. இல்லாவிட்டால் இத்தேர்தல் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். இப்போது கோமாளிகளுடன் எல்லாம் திமுக மல்லுக்கட்டும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்

  முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இய...