முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சறுக்கல்



 இது சும்மா ஒரு கணிப்புதான். எனக்கு ஆரம்பத்தில் விஜய் 7% வாக்குகளைப் பெறுவார் என்று தோன்றியது. இப்போதுள்ள பரபரப்பைப் பார்க்க திமுக மீதுள்ள அதிருப்தி வாக்குகள் அவரிடம் கொஞ்சம் அதிகமாகப் போகும் எனத் தோன்றுகிறது - அதாவது 12-15% உச்சபட்சமாக. அதுவே ஒரு பெரிய சாதனைதான். குறைந்தது 10%.

இதனால் விஜய்க்கு என்ன லாபம் என்பதைவிட திமுகவுக்கும் அதிமுகவுக்கும் என்னவிதமான பாதகங்கள் என்பதையே பலரும் பேசுகிறார்கள். திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட சற்று அதிகம் பெற்று ஆட்சியமைப்பதற்கு இது வழிவகுக்கும். அதாவது ஒரு சற்றே பலவீனமான அரசு அமையும். எதிர்க்கட்சிகள் பலமடையும்.
எப்போதுமே அரசியலில் ஒரு பலத்த குற்றச்சாட்டு வந்தால் அதை மறுக்காமல் பரிசீலிப்பதாக 'நடிக்க' வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்தீகரிப்பதாக ஒரு சடங்கில் ஈடுபட வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில் கவனமாக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக 'ஊழல் எதிர்ப்பு' பற்றிப் பேச வேண்டும். மக்களுக்கு அள்ளிக் கொடுப்பதான பிம்பத்தை உருவாக்க வேண்டும். அப்போதே அரசு தன்னைப் புதுப்பிக்க இயலும். மக்களுக்கு அந்த அரசு மீதான அபிமானம் அப்போது பலமடங்கு அதிகரிக்கும். இந்த முறை திமுக செய்த முக்கியமான தவறு 'செந்தில் பாலாஜி' - ஒன்று அவரை சிறையிலே வைத்திருந்திருக்க வேண்டும். அல்லது அவர் வெளிவந்த பிறகு பதவி கொடுத்திருக்கக் கூடாது. அதேபோல ஓராண்டுக்கு முன்னரே சில அமைச்சர்களைப் பதவி நீக்கி ஊழலைத் தண்டித்ததாகக் காட்டியிருக்க வேண்டும். ஒரு புதிய முகத்தை உருவாக்கி இருக்க வேண்டும். புதிய இளம் அமைச்சர்களின் பிம்ப உருவாக்கத்தில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் எதிர்க்கட்சியினரால் உதயநிதியைத்தான் விமர்சிக்க இயலும். அது திமுகவிற்குச் சாதகமாகவே முடிந்திருக்கும். நான் சொல்வதெல்லாம் வேறு மாநிலங்களில் அரசுகள் செய்வனதாம். ஆனால் திமுக அதைச் செய்யவில்லை.
இன்னும் சொல்லப்போனால் பாஜக அதற்கு மேல் சென்று திமுக தலைவர் குடும்பத்தின்மீது கைவைத்திருந்தால் அது திமுகவிற்கு பெரிய ஒரு ஆற்றலைக் கொடுத்திருக்கும். ஸ்வீப் செய்திருப்பார்கள். ஆனால் திமுக அது ஒரு மிகப்பெரிய ரிஸ்க் என நினைத்துவிட்டது. அது சூதாடத் தயாராகவில்லை. அதுவே இப்போது பாஜகவுடன் திமுகவிற்கு மறைமுக ஒப்பந்தம் உள்ளது என மம்தாவே பேசும் அளவுக்கு இது சென்றுவிட்டது (இது என்னதான் இந்தியா கூட்டணியுடன் உள்ள அவரது கசப்பால் சொல்லப்பட்டதாக இருந்தாலும்). இந்த வரியைத்தான் இப்போது விஜய்யும் தன் பிரச்சாரத்தில் முன்வைக்கிறார். செந்தில் பாலாஜியைத் தாண்டி வேறு யார் மீது அமலாக்கத்துறையும் சி.பி.ஐயும் கைவைக்காதது வினோதமாக திமுகவுக்குப் பாதகமாகிவிட்டது.
இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியின்போது ஸ்பெக்டிரம் ஊழல் பேசப்பட்டு கனிமொழி, ராஜா கைதானபோதும் திமுக தடுப்பாட்டமே ஆடியது. ஊழல் விசாரணை, கைது நடவடிக்கை என்றால் திமுக கொஞ்சம் தடுமாறிப் போகிறது.
தேர்தல் முடிவுகள் வருமுன்பே தீர்ப்பெழுதி விமர்சிக்க நான் முற்படவில்லை. இன்றைய சூழலை வைத்தே என் கருத்துக்களை எழுதுகிறேன். திமுக தன் வியூகத்தில் சறுக்கிவிட்டது. இல்லாவிட்டால் இத்தேர்தல் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். இப்போது கோமாளிகளுடன் எல்லாம் திமுக மல்லுக்கட்டும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...