இது சும்மா ஒரு கணிப்புதான். எனக்கு ஆரம்பத்தில் விஜய் 7% வாக்குகளைப் பெறுவார் என்று தோன்றியது. இப்போதுள்ள பரபரப்பைப் பார்க்க திமுக மீதுள்ள அதிருப்தி வாக்குகள் அவரிடம் கொஞ்சம் அதிகமாகப் போகும் எனத் தோன்றுகிறது - அதாவது 12-15% உச்சபட்சமாக. அதுவே ஒரு பெரிய சாதனைதான். குறைந்தது 10%.
இதனால் விஜய்க்கு என்ன லாபம் என்பதைவிட திமுகவுக்கும் அதிமுகவுக்கும் என்னவிதமான பாதகங்கள் என்பதையே பலரும் பேசுகிறார்கள். திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட சற்று அதிகம் பெற்று ஆட்சியமைப்பதற்கு இது வழிவகுக்கும். அதாவது ஒரு சற்றே பலவீனமான அரசு அமையும். எதிர்க்கட்சிகள் பலமடையும்.
எப்போதுமே அரசியலில் ஒரு பலத்த குற்றச்சாட்டு வந்தால் அதை மறுக்காமல் பரிசீலிப்பதாக 'நடிக்க' வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்தீகரிப்பதாக ஒரு சடங்கில் ஈடுபட வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில் கவனமாக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக 'ஊழல் எதிர்ப்பு' பற்றிப் பேச வேண்டும். மக்களுக்கு அள்ளிக் கொடுப்பதான பிம்பத்தை உருவாக்க வேண்டும். அப்போதே அரசு தன்னைப் புதுப்பிக்க இயலும். மக்களுக்கு அந்த அரசு மீதான அபிமானம் அப்போது பலமடங்கு அதிகரிக்கும். இந்த முறை திமுக செய்த முக்கியமான தவறு 'செந்தில் பாலாஜி' - ஒன்று அவரை சிறையிலே வைத்திருந்திருக்க வேண்டும். அல்லது அவர் வெளிவந்த பிறகு பதவி கொடுத்திருக்கக் கூடாது. அதேபோல ஓராண்டுக்கு முன்னரே சில அமைச்சர்களைப் பதவி நீக்கி ஊழலைத் தண்டித்ததாகக் காட்டியிருக்க வேண்டும். ஒரு புதிய முகத்தை உருவாக்கி இருக்க வேண்டும். புதிய இளம் அமைச்சர்களின் பிம்ப உருவாக்கத்தில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் எதிர்க்கட்சியினரால் உதயநிதியைத்தான் விமர்சிக்க இயலும். அது திமுகவிற்குச் சாதகமாகவே முடிந்திருக்கும். நான் சொல்வதெல்லாம் வேறு மாநிலங்களில் அரசுகள் செய்வனதாம். ஆனால் திமுக அதைச் செய்யவில்லை.
இன்னும் சொல்லப்போனால் பாஜக அதற்கு மேல் சென்று திமுக தலைவர் குடும்பத்தின்மீது கைவைத்திருந்தால் அது திமுகவிற்கு பெரிய ஒரு ஆற்றலைக் கொடுத்திருக்கும். ஸ்வீப் செய்திருப்பார்கள். ஆனால் திமுக அது ஒரு மிகப்பெரிய ரிஸ்க் என நினைத்துவிட்டது. அது சூதாடத் தயாராகவில்லை. அதுவே இப்போது பாஜகவுடன் திமுகவிற்கு மறைமுக ஒப்பந்தம் உள்ளது என மம்தாவே பேசும் அளவுக்கு இது சென்றுவிட்டது (இது என்னதான் இந்தியா கூட்டணியுடன் உள்ள அவரது கசப்பால் சொல்லப்பட்டதாக இருந்தாலும்). இந்த வரியைத்தான் இப்போது விஜய்யும் தன் பிரச்சாரத்தில் முன்வைக்கிறார். செந்தில் பாலாஜியைத் தாண்டி வேறு யார் மீது அமலாக்கத்துறையும் சி.பி.ஐயும் கைவைக்காதது வினோதமாக திமுகவுக்குப் பாதகமாகிவிட்டது.
இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியின்போது ஸ்பெக்டிரம் ஊழல் பேசப்பட்டு கனிமொழி, ராஜா கைதானபோதும் திமுக தடுப்பாட்டமே ஆடியது. ஊழல் விசாரணை, கைது நடவடிக்கை என்றால் திமுக கொஞ்சம் தடுமாறிப் போகிறது.
தேர்தல் முடிவுகள் வருமுன்பே தீர்ப்பெழுதி விமர்சிக்க நான் முற்படவில்லை. இன்றைய சூழலை வைத்தே என் கருத்துக்களை எழுதுகிறேன். திமுக தன் வியூகத்தில் சறுக்கிவிட்டது. இல்லாவிட்டால் இத்தேர்தல் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். இப்போது கோமாளிகளுடன் எல்லாம் திமுக மல்லுக்கட்டும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.
கருத்துகள்