ஜெயமோகனின் தீவிர வாசகர் / தொண்டர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு அதிர்ச்சிகரமான கருத்தைச் சொன்னார்.
"அண்ணே, உண்மையில் விஜய்யின் த.வெ.கவும் அவரது தொண்டர்களாக மாற்றப்பட்ட ரசிகர்களும் ஒரு புதிய தோற்றப்பாடு (phenomenon) அல்ல. நான் இதைக் குறித்து சொல்லப்போகும் ஒரு விசயம் உங்களுக்கு பயங்கர அதிர்ச்சியாகக் கூட இருக்கும். அதைக் கேட்டு நீங்கள் வெடித்துச் சிரித்து விடவும் கூடும். விஜய் அரசியல் செய்துள்ள ஊடுருவல் ஏற்கனவே இலக்கியத்தில் ஜெயமோகன் செய்துவிட்டார். விஜய் ரெண்டாவதுதான். த.வெ.க என்பது விஷ்ணுபுரத்தின் சற்றே வெகுமக்கள்தனமான ஒரு வடிவம்தான். தற்குறித்தனம் என்று நாம் சொல்கிறோமே அதை இலக்கியத்தில் தோற்றுவித்து வெற்றிகரமாகப் முதலில் பரிசோதித்தவர் ஜெயமோகன். விஜய் அதை அரசியலில் விஜய் அறுவடை செய்திருக்கிறார். அவ்வளவுதான். நீங்கள் எங்களைத்தான் முதலில் ஜோம்பிகள் என்று அழைத்தீர்கள். நாங்கள் அதைக் கண்டுகொள்ளாமல் பெருகிக் கொண்டே இருந்தோம். உங்கள் ஆட்கள் எல்லாருமே எங்கள் பக்கம் வந்து சேர்ந்தார்கள். இப்போது தவெக தொண்டர்களை அவ்வாறு அழைக்கிறீர்கள். அவர்களும் இன்று தமிழ்நாட்டு அரசியலையே தீர்மானிக்கும் இடத்திற்குப் போய் விட்டார்கள். நீங்கள் எங்களை ஆர்.எஸ்.எஸ்ஸின் பண்பாட்டு அமைப்பு என்றீர்கள். நாங்கள் பொருட்படுத்தாமல் முன்னேறிப் போய்க் கொண்டே இருந்தோம். நீங்கள் தவெகவை பாஜகவின் பி டீம் என்றீர்கள். அவர்கள் தேர்தலையே ஒரு கலக்கு கலக்கி விட்டார்கள். தமிழில் தோன்றிய முதல் கல்ட் அமைப்பு எங்களுடையது. அடுத்ததுதான் தவெக. முதல் phenomenon எப்போதுமே நாங்கள்தாம். தமிழ்ச் சிந்தனையின் மையத்தில் எப்போதும் இருப்பவர் ஜெயமோகன். அவர் என்ன சொல்வாரோ எனும் பதற்றத்தில் எல்லாரையும் வைத்திருக்கிறார். தமிழ்ச் சமூகத்தின் நகர்வுகளைத் தீர்மானிக்கும் இப்போது இருப்பவர் விஜய். அப்போது என்ன செய்வாரோ எனும் பயத்தில் மொத்த சமூகத்தையும், அரசியல் சிந்தனையாளர்களையும் இப்போது வைத்திருக்கிறார்."
என்னால் அவர் சொன்னதை ஒரேதடியாக மறுக்க முடியவில்லை.
Comments