மதமும் அரசியலில் மிக மோசமான கூட்டு. அரசியல் தலைவரை கடவுளாக்குவது இன்னும் ஆபத்தானது. இது கல்ட் வழிபாட்டை நோக்கி நகர்த்தக் கூடியது. இவர்கள் விஜய்யை அங்குதான் எடுத்துச் செல்கிறார்கள் என்று நான் எழுதினேன் நேற்று சட்டமன்றத்தில் நடந்துவிட்டது. கடவுளே என்று இவர்கள் அழைப்பதும் இவர் புன்னகையுடன் தலையசைப்பதும் பார்க்க அருவருப்பாக இருக்கிறது. இதற்கு இவர்கள் கடவுள் அறிய என்று கடவுளை நேரடியாகக் குறித்திருந்தாலும் இவ்வளவு கேவலமாக இருந்திருக்காது. இப்போது அரசியலை வழிபாடாக்கி விட்டர்கள். மனித வழிபாடு கூட அல்ல, மனிதக் கடவுள் வழிபாடு.
இம்மாதிரி மதவாத கல்ட் அரசியல் கிறிஸ்தவம், இந்து மதத்திற்கு அப்பாலானது. பொதுவாக எல்லா கல்ட் அமைப்புகளிலும் அப்படியே நடக்கும். ஒரு கடவுளை ஒழித்துவிட்டு மனிதரைக் கடவுளாக்குவார்கள். அதன்பிறகு அவர் எந்த விதிமுறையையும் சட்டத்தையும் மீற, மனித நேயத்தை ஒழிக்க, மனிதர்களை அடிமையாக்க ஒரு தனி உரிமை கிடைத்துவிடும். மக்களாட்சி அமைப்புக்கு அப்பால் தலைமையையும் ஆட்சியையும் இது கொண்டு போகத் தொடங்கி விட்டது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. ஆறு மாதம் பொறுப்போம், பத்து மாதம் கவனிப்போம் என்பதெல்லாம் கட்சிகளின் தலையெழுத்து. ஒரு தனிமனிதராக, எழுத்தாளராக என்னால் இதை வேடிக்கை பார்க்க இயலவில்லை. அவலமாக உள்ளது. இவர்களை மிகக் கடுமையாகக் கண்டிப்பது அவசியம். எதுவும் நடக்கும், எதையும் செய்யலாம், எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை, இதெல்லாம் தனிப்பட்ட முடிவுகள் என நினைத்ததால்தான் இங்கு நித்தியானந்தாவும் ஜக்கியும் தோன்றினார்கள். அவர்களுடைய அரசியல் வடிவமே மோடியும் இங்கு விஜய்யும்.
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. இங்கு மதத்தைப் போதிக்கலாம், பரப்பலாம், பின்பற்றலாம். ஆனால் சட்டமன்றம், அரசு அலுவலகங்கள் முழுக்க மதத்திற்கு அப்பால் இருக்க வேண்டும். மேம்போக்காகக் கூட அங்கு வழிபாடுகளோ மனிதக் கடவுள்களோ இருக்கலாகாது. குற்றங்களையும் ஒடுக்குமுறைகளையும் நியாயப்படுத்த மிகச்சிறந்த வழி மனிதக் கடவுள்களை உருவாக்குவதே.
கருத்துகள்