முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீட்சேயின் “நன்மைக்கும் தீமைக்கும் அப்பால்” - குறிப்பு (1)

 


“இவ்வாறு சொன்னான் ஜாரதுஷ்டிரன்” நூலுக்கு அடுத்ததாக நீட்சே எழுதிய நூலே “நன்மைக்கும் தீமைக்கும் அப்பால்” (1886). தன் சொந்தக் காசில் அவர் பிரசுரித்த இந்நூல் ஹெலென் சிம்மர்ன் என்பவரால் ஆங்கிலமாக்கப்பட்டது. “ஜாரதுஷ்டிரனில்” அவர் பேசுகிற பிரதானமான தத்துவக் கருத்தாக்கங்களே இதில் விவாதிக்கப்படுகின்றன. கிரேக்க, ஐரோப்பிய தத்துவவாதிகள், விஞ்ஞானிகளின் கருத்துக்களை கடுமையாக விமர்சித்து கலாய்த்துக் கொண்டு போகும் நீட்சேயின் அடிப்படையான உத்தேசம் ஒன்றுதான் - மனித இருத்தலை சமூக ஒழுக்கத்துக்கும், சரி-தவறு எனும் எதிரிடைகளின் மீது எழுப்பப்பட்ட விழுமியங்களுக்கு அப்பாலும் கொண்டு சென்று விவாதிக்க வேண்டும். அவர் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?
நீங்கள் இதை ஏன் படிக்கிறீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? அறிவைப் பெருக்க, உங்களை மேம்படுத்திக் கொள்ள, ஆழமாகச் சிந்திக்க, உங்களைச் சோதித்துப் பார்க்க ... இப்படி எதாவது ஒன்று. இப்பதில்கள் உங்கள் செயலுக்கு ஒரு உத்தேசம் இருக்க வேண்டும் எனும் நம்பிக்கையின் பால் அமைந்துள்ளன. அறிவை ஏன் பெருக்க வேண்டும் எனக் கேட்டால் நீங்கள் அது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் எனக் கூறக் கூடும். ஏன் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டால்? ஒருவேளை, நீங்கள் மேம்பட்ட வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை எனக் கூறக் கூடும். சிறந்த வாழ்க்கை என்றால் என்ன என்று நான் கேட்டால் அது சான்றோரால் அவ்வாறு வகைப்படுத்தப்பட்ட ஒன்று என்று நீங்கள் கூறலாம். சான்றோர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும் என்றால் உங்களிடம் பதிலிருக்காது. சான்றோர் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்பதை வேண்டுமானால் சொல்லலாம். (ஏனென்றால் ‘சான்றோரிடமே’ அதற்குப் பதிலிருக்காது.) வாழ்க்கையை மேம்படுத்தினால் பிறரிடம் அன்பாகவும் நிதானமாகவும் பழகி உறவுகளை மேம்படுத்தலாம், அவ்வாறு மேம்படுத்தினால் வாழ்க்கை இன்பமாகும் என நீங்கள் கூறினாலோ, அறிவு மேம்பட்டால் இன்பம் பெருகும் என்றாலோ நீங்கள் இன்பத்தை உங்கள் உத்தேசமாக்குகிறீர்கள். மேம்பட்ட அறிவு எப்படி இன்பத்தைத் தரும் என நான் கேட்டால் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள். பலரும் மேம்பட்ட அறிவினால் துன்பத்தில் சிக்கியுள்ளார்கள். அதில் எந்த நிச்சயமும் இல்லை.

இங்கு நான் தொடர்ந்து நன்மை-தீமை எதிரிடையைப் பயன்படுத்தி இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். பெருக்குவது-சுருக்குவது; மேம்படுத்துவது-சீரழிப்பது; அன்பு-வெறுப்பு; நிதானம்-பதற்றம்; இன்பம்-துன்பம். இந்த எதிரிடைகளை நம் அனுபவத்தை அதன் ஆழத்தில் நோக்கும்போது நாம் காண்பதில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனக் கருதி அடையும் அனுபவத்தில் எந்த மகிழ்ச்சியும் இல்லாதிருப்பது இதனாலே. மாறாக நம் மகிழ்ச்சி வேறொன்றில் இருக்கிறது. அது நம் இருத்தலில் இருக்கிறது. நாம் இந்த உலகில், இந்த காலத்தில் ஒவ்வொரு கணமும் இருப்பதற்குப் பிரயத்தனிக்கிறோம். நீங்கள் இதன் ஒவ்வொரு சொல்லையும் படிக்கையில் உங்கள் உடலுக்கு, புலனுக்கு, அறிவுக்கு காலத்துடன் ஒரு குறுக்கீடு நேர்கிறது. நீங்கள் உங்களுடைய ஏற்கனவே உள்ள வெளியுடன் (அகமாகவும் புறமாகவும்), காலத்துடனும் மோதி முன்னகர்கிறீர்கள். நீங்கள் முன்னகர்கையில் தோன்றும் இடைவெளிகளில் நீங்கள் உங்களை அறிகிறீர்கள். அடுத்தடுத்து நீங்கள் முன்னகர்கையில் காலத்துக்கும் வெளிக்கும் அப்பால் உங்களை உணர்கிறீர்கள். ஹைடெக்கர் இதையே செருப்பைத் தயாரிக்கிறவரின் அனுபவத்தை வைத்து விளக்கினார். சுத்தியலை எடுத்து அவர் அடிக்கிற ஒவ்வொரு கணத்திலும் அவர் இந்த உலகின் இருத்தலுடன் தன் இருத்தலைப் பொருத்துகிறார். அதையே நீட்சேயும் வேறு விதத்தில் இந்நூலில் சொல்கிறார்.
இங்கு இருத்தலை விழுமியங்களுக்கு, எதிரிடைகளுக்கு அப்பால் அவர் விளக்குகிறார். உ.தா., நீங்கள் ஒரு பழுத்த மாம்பழத்தை சாறு வடியக் கடிக்கையில், மாடிப்படிக்கட்டில் பதைக்கப் பதைக்க ஏறும்போது அங்கு எதிரிடைகள் வெறும் சொற்களாக மட்டுமே பின்னர் வருகின்றன. அங்கு நீங்கள் அறிவது மாம்பழத்தின், படிக்கட்டின் அர்த்தங்களை அல்ல, உங்கள் உடல் இந்த வெளியிலும் காலத்திலும் தன்னை முன்னேகும்போதும் தோன்றும் திகைப்பும் எதிர்பாராமையும் அதை ஒட்டிய ஆழமான அனுபவமுமே. இவ்வாறு ஒவ்வொரு கணத்தையும் நான் நீட்சே சொல்கிறபடி வாழ முடியுமா என்பதே கேள்வி. நீங்கள் அடிவானத்தின் கீழே பூத்திருக்கும் மலர்க்காட்டைப் பார்க்கையில் அதை இறைவனின் ஆசீர்வாதம், இயற்கையின் பூரிப்பு என்று வர்ணிக்கலாம், ஆனால் அந்த அழகை நீங்கள் எதிர்கொள்ளும்போது அங்கு இறைவனோ இயற்கையோ இருப்பதில்லை. அங்கு நீங்களும் மலர்களையும் செடிகளையும் மண்ணையும் காற்றையும் உள்ளடக்கிய தோற்றப்பாடுகளுமே இருக்கின்றன. நீங்கள் ஒரு மலரைப் பறிக்கையில் அல்லது ஒருவரைக் கன்னத்தில் அடிக்கையில் அச்செயல்களின் அடையாளங்கள் அல்ல உங்கள் கையில் (உங்கள் உலகின் இருத்தலில்) அம்மலர் வருவதும், உங்கள் உடலின், காலத்தின் இருத்தல் நீங்கள் அடிப்பவரின் உடலுடன், காலத்துடன் மோதுவதே நிகழ்கிறது. இதுவே நீட்சே சொல்லும் “நன்மைக்கும் தீமைக்கும்” அப்பாலான உலகம்.

இந்த உலகின் மானுடவாத விழுமியங்கள், கருத்தாக்கங்களுக்கு அப்பால் இருத்தலை வைக்கிறது என்பதாலே பல தத்துவவாதிகளும் சிந்தனையாளர்களும் இதை ஏற்க விரும்புவதில்லை. அவர்களையே நீட்சே காலவதியான ஒழுக்கப் பண்பாளர்கள், மேலாதிக்கவாத சிந்தனையாளர்கள் (dogmatists) என்று நீட்சே சாடுகிறார். இவர்கள் சாக்ரடீஸ் / பிளேட்டோவின் சாராம்சவாத கோட்பாட்டில் இருந்தே தோன்றுகிறார்கள் என்பது நீட்சேயின் நம்பிக்கை என்பதாலே அவர் சாக்ரடீஸிடம் இருந்தே “ஜாரதுஷ்டிரன்” நூலை ஆரம்பிக்கிறார் (வயதான ஞானியைக் கடந்து மலையிறங்கி வரும் ஜாருதுஷ்டிரன் கடவுள் இறந்துவிட்டார் என்பது இவருக்குத் தெரியதோ என்று வியக்கிறார்.); இப்புத்தகத்தையும் அவர் அவ்வாறே தத்துவத்தின் அடிப்படையில் சாராம்சவாதிகள் செய்து வைத்துள்ள பிழைகளையும் அடுத்தடுத்து வந்தவர்களும் விஞ்ஞானிகளும் மனித இருத்தலின் சாரத்தை விளக்கிய விதத்திலும் உள்ள பிரச்சினைகளையும் விமர்சித்தே ஆரம்பிக்கிறார்.

முதல் அத்தியாயத்தில் (“தத்துவவாதிகளின் மனச்சாய்வுகள்”) 23 பிரிவுகள் உண்டு. சின்னச்சின்ன பிரிவுகள் எனினும் நீங்கள் வேகமாகப் படித்துக் கடந்துவிட இயலாது. ஒவ்வொன்றிலும் அவர் கருத்துக்களை மிகவும் சுருக்கியும் பகடியும் கிண்டலும் சேர்த்தும் குறிப்பிடுகிறார்; பல்வேறு குறிப்புகளும் வருகின்றன. சில வாக்கியங்கள் அவரது காலத்தில் இருந்த பிரபலமான வாதங்கள் மீதான பகடி என்பதால் அவற்றின் பின்னணியும் தெரிந்திருக்க வேண்டும். ஆகையால் அவரைப் படிக்கப்படிக்க நீங்கள் இன்னொரு பக்கம் அதை விரித்து ஆய்வு செய்து கொண்டும் இருக்க வேண்டும். இதுவே ஒரு திகைப்பான சுவாரஸ்யமான அனுபவம்தான் என்றாலும் நிறைய நேரத்தையும் ஆற்றலையும் உறிஞ்சக் கூடும். சும்மா படித்துக் கொண்டு போகிறவர்களுக்கு ஒன்றுமே புரியாமல் போகலாம்.

ஆகையால் முதல் அத்தியாயத்தின் இந்த பிரிவுகளை நான் சுருக்கமாகவும், எளிதாகவும் சொல்ல முயல்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...