நான் தமிழ்நாட்டு அரசியலில் நடக்கும் இம்மூன்று விசயங்களை இணைத்துப் பார்க்க விரும்புகிறேன்:
1) தவெக தில்லியில் நடக்கும் இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது.
2) கட்சிக்குள் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் ஆதவ்வின் உறவினருக்கு எதிரான போதை மருந்து கடத்தலை ஒன்றிய அரசு விசாரிப்பதான தகவலை வைத்து பாஜக ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆதவ்வைத் தாக்குவது; அதையடுத்து மாரிதாஸ் கைதாவது; அதற்கு பாஜக ஆதரவு ஊடகங்கள் பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பது; பாஜக-தவெக மோதலே தமிழ்நாட்டின் பிரதானம் என்பதாக நாடகம் போடுவது.
3) பாஜகவுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் வாக்களித்த 21 எம்.எல்.ஏக்களை மன்னித்துவிட்டதாகவும் தகுதி நீக்கம் தேவையில்லை என்றும் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் அனுப்பி இருப்பது. அதை வைத்து ஊடகச் சந்திப்பில் சட்டமன்ற சபாநாயகர் பிரபாகர் அந்த 21 எம்.எல்.ஏக்களின் ஆதரவு செல்லுபடியாகும், அதில் எப்பிரச்சினையும் இல்லை எனக் கூறியுள்ளது. இதை பாஜகவின் அழுத்தம் இன்றி எடப்பாடி செய்ய வாய்ப்பே இல்லை.
அதாவது தவெக அரசை அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரித்ததை எடப்பாடி ஏற்றுக் கொண்டுள்ளார். தன் எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி தவெகவுக்குச் சென்றதைக் கூட அவர் மன்னித்து விட்டார். அதாவது தன் எம்.எல்.ஏக்களை தவெக தன் அனுமதியின்றி வாக்களிக்க வைத்ததை, தன் எம்.எல்.ஏக்களை தவெக தலைவர் திருடி தன் கட்சியில் சேர்த்ததைக் கூட அவர் மன்னித்து விட்டார்.
இந்த மூன்று சம்பவங்களுக்குப் பின்னும் பாஜக இருக்கிறது. பாஜகவுக்கும் விஜய்க்கும் அண்மையில் ஏற்பட்ட சமரசமும் உடன்படிக்கையுமே இவை அடுத்தடுத்து நிகழக் காரணம்.
இப்போது எனக்கு சில கேள்விகள் தோன்றுகின்றன:
அதிமுக தவெக ‘கூட்டணியில்’ உள்ளதா? அதாவது எடப்பாடியின் அனுமதியை வேறெப்படி புரிந்து கொள்வது?
இந்த தவெக - பாஜக காதல் உறவு தேர்தலுக்கு முன்பே ஆரம்பித்தது, அதனாலே பாஜக ஆதரவாளர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்கள். அதனாலே தில்லிக்குச் சென்று மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த பின்னர் அவரால் கட்சிக்குள் தனக்குப் பிடிக்காதவர்களைக் கூட பாஜக ஆதரவுப் பேச்சாளர்களை வைத்து விமர்சித்து நெருக்கடி கொடுக்க முடிகிறது. எடப்பாடியின் ‘மன்னிப்பையும்’ பெற முடிகிறது. ஆரம்பத்தில் ஆட்சி அமைக்க விஜய் குதிரை பேரம் நடத்தியதை ஆளுநர் ரிபப்ளிக் டிவியின் பேட்டியிலே கண்டித்தார். விஜய்யை தொடர்ச்சியாக திருப்பி அனுப்பினார். ஏதோ ஒரு கட்டத்தில் சமரசம் ஏற்பட்ட பின்னர் தவெகவின் 'சோபா' குதிரை பேர விவகாரத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் வெளிப்படையாகவே வைக்கப்பட்ட கண்டனங்களை ஆளுநர் ஆய்வு செய்யவோ அதைக் குறித்துப் பேசவோ நடவடிக்கை எடுக்கவோ இல்லை.
பாஜகவுக்கும் தவெகவுக்கும் இப்படியான உடன்படிக்கை வந்து விட்டதெனில் கம்யூனிஸ்டுகளும் விசிகவும் அதை ஏற்கிறார்களா?
தவெகவுக்கு காங்கிரஸ் தொடர்ந்து ஆதரவு அளிக்குமெனில், பாஜகவின் ஆசியையும் தவெக நாடுகிறது எனில், அது இந்தியா கூட்டணியில் எப்படி இருக்க முடியும்? இப்படி ஒரு கட்சியை நம்பி எப்படி அவர்கள் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்ப்பார்கள்?
எதையும் எப்படியும் செய்யலாம், அந்தந்த சமயத்துக்கு ஏற்றவாறு முடிவை மாற்றலாம் என்பது தவெகவின் பாணி. யாரை எதிர்க்கிறேன், எதை எதற்காக எதிர்க்கிறேன் என்று சொல்லாமல் 'உங்கள் விஜய்க்கு வாக்குப் போடுங்க, தில்லிக்குப் போய் தமிழ்நாட்டுக்காக பேசுறேன்' என்று அவர் சொல்லி பிரச்சாரம் செய்தால் நம்மூர் அறிவாளிகள் அதற்கும் கைதட்டுவார்களா? அல்லது விழித்துக் கொள்வார்களா?
தவெகவினர் ஒருவேளை வென்று நாளை நாடாளுமன்றம் சென்று யாரையும் எதையும் விமர்சிக்காமல் எழுதிக் கொடுக்கப்பட்ட வசனங்களைப் படித்துவிட்டு, ஒவ்வொரு முறையும் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தம் சுயநலத்துக்கு ஏற்ப ஆதரவை வழங்குவார்களா? அதாவது எதிர்க்கவும் மாட்டோம், ஆதரிக்கவும் மாட்டோம், எங்கள் கட்சியின், தலைமையின் தனிப்பட்ட தேவைக்கு ஏற்ப வாக்கெடுப்பின் போது நாடாளுமன்றத்தில் செயல்படுவோம் என்றால் அதனால் தமிழ்நாட்டின் நலன் பாதிக்கப்படாதா?
திடீரென நாங்கள் மதசார்பற்றவர்கள் என்று கூறி காங்கிரஸுடன் நிற்பதாக நாடகம் போட்டுவிட்டு அடுத்தடுத்து நாங்கள் தேசப்பற்றாளர்கள் என்று கூறி பாஜகவுடன் மறைமுகமாக கைகோர்க்க மாட்டார்களா? இந்த இங்கும் அங்கும் அல்லாத அல்லாட்டம் ஒருவிதத்தில் பாஜகவுக்கு சாதகமாகவே முடியும் என நினைக்கிறேன். பாஜகவின் ஆதரவு இருந்தால் மட்டுமே அடுத்தடுத்த இடைத்தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் 'எந்திரம் விஜய்யாக வாக்களிக்கும்'. இது காங்கிரஸின் எதிர்காலத்தை தமிழ்நாட்டில் இருட்டாக்கி விடும். அவர்கள் காங்கிரஸுடனே நின்று பாஜக எதிர்ப்பு வாக்குகளை எந்திரத்தின் துணையுடன் அள்ளிக் கொண்டு நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்.
தவெகவின் இந்த நிலைமாற்றங்கள் ஒரு தடுமாற்றம் அல்ல. அதற்கு எந்த நிலையும் இல்லை என்பதையே இது காட்டுகிறது. அவர்கள் தொடர்ந்து ஆண்டு கமிஷன் அடித்து சம்பாதிக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு ஒரு கட்சியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு பாஜகவின் 'எந்திர' உதவி தேவை. சந்தானம் ஒரு படத்தில் தல ரசிகர்களிடம் தான் தல ரசிகன் என்றும் விஜய் ரசிகர்களின் தான் விஜய் ரசிகன் என்றும் சொல்லி அடிவாங்குவாரே, அந்த தலதளபதி சலூன் தான் தவெக.
இப்படி எந்தப் பக்கமும் நிற்காததாலே நான் இது கட்சி அல்ல, வெறும் அமைப்பு, அவர்கள் செய்வது ஆட்சியல்ல, ஒரு ஷோ என்கிறேன்.
கருத்துகள்